Subscribe Us

header ads

உள்ளூராட்சி சபைகள் 15 ஆம் திகதி கலைக்கப்படும்: அமைச்சர் ஜோன் அமரதுங்க...


உள்ளூராட்சி சபைகளை இம்மாதம் 15 ஆம் திகதியுடன் கலைக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானத்தை பெறும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு புத்தங்களை வழங்குவதற்காக வத்தளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்ட பின்னர், அவற்றில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து ஆராய விசேட குழு நியமிக்கப்படும்.
உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்தது. நாட்டிற்குள் காணப்படும் புதிய அரசியல் சூழ்நிலைகள் காரணமாக உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகிறது.
உள்ளூராட்சி சபைகளை உடனடியாக கலைக்க வேண்டாம் என சுதந்திரக் கட்சியின் ஒருசாரரர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கே அதிகமான ஆதரவு இருப்பதாக சுதந்திரக் கட்சியினர் தெரிவித்து வருவதுடன் உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டால், ஐக்கிய தேசியக் கட்சி அவற்றில் பெரும்பாலான சபைகளை கைப்பற்றும் எனவும் கூறியுள்ளனர்.
உள்ளூராட்சி சபைகளை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றினால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எது எப்படி இருந்த போதிலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மீண்டும் அரசியலுக்குள் வரும் முயற்சிகளுக்கான அழுத்தங்களை உள்ளூராட்சி சபைகளில் உள்ள சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் ஊடகவே மேற்கொண்டு வருகிறார்.
இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அரசியல் ரீதியான அழுத்தங்களை ஏற்படுத்தி வருகிறது. இதனால், உள்ளூராட்சி சபைகளை கலைக்கும் தீர்மானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இருப்பதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் அவர் தனக்கு ஆதரவான தரப்பினர் ஊடாக அழுத்தங்களை கொடுத்து வருவதுடன் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.
மகிந்த மீண்டும் அரசியலுக்குள் வந்து பிரதமராக பதவியேற்றால், அது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கே பெரும் ஆபத்தாகவும் பாதிப்பதாகவும் அமையும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Post a Comment

0 Comments