பாலஸ்தீனத்தில் பிரிமியர் லீக் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு
வருகின்றன. குறிப்பாக அங்கு கால்பந்தாட்ட ரசிகர்கள் அதிகம் என்பதால்,
அடிக்கடி கால்பந்தாட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். ஒவ்வொரு
முறையும் நிரம்பி வழியும் ரசிகர்களின் கூட்டத்தால், ஆட்டங்கள் களை கட்டும்.
இந்த நிலையில் கடந்த 3ஆம் திகதி சாஹாபாப் ரபாப் அணிக்கும், எல்-சடாக்கா அணிக்கும் இடையே பரபரப்பான போட்டி நடந்துக் கொண்டிருந்தது.
இருப்பினும் ரசிகர்கள் கால்பந்தாட்ட விளையாட்டினை ரசிக்காமல், அரங்கில்
நின்று கொண்டிருந்த சாத் அல்தீன் அல்-ஜமால் என்ற ரசிகரை வியப்புடன்
பார்த்துக்கொண்டிருந்தனர். அதற்கு காரணம் அல்-ஜமால் தனது கையில்
சிங்கக்குட்டியை வைத்துக் கொண்டு ஆட்டத்தை ரசித்தது தான்.
அலெக்ஸ் என்ற பெயரிடப்பட்ட அந்த சிங்கக்குட்டியை, அவ்வப்போது செல்லமாக
அணைத்துக் கொண்டு ஆட்டத்தை கண்டுகளித்துக் கொண்டிருந்தார் அல்-ஜமால்.
மேலும் அந்த சிங்கக் குட்டிக்கு தனது விருப்பமான கால்பந்தாட்ட அணியின்
ஜெர்ஸியை அணிவித்து தன்னுடன் கொண்டு வந்திருந்தார்.
கால்பந்தாட்ட ரசிகரான அல்-ஜமால் தனது வீட்டில், அலெக்ஸ் மற்றும் மோனா என்ற இரண்டு சிங்கக்குட்டிகளை வளர்த்து வருகிறார்.
தெற்கு காசாவில் உள்ள ரபா என்ற நகரில் வசித்து வரும் அல்-ஜமால்,
அங்கிருக்கும் வனவிலங்கு பூங்காவிலிருந்து இந்த இரு சிங்கக்குட்டிகளையும்
தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அல்-ஜமாலின் குடும்ப உறுப்பினர்கள் போன்று
பழகிவிட்ட இந்த சிங்ககுட்டிகள், அல்-ஜமாலுடன் இணைந்து கால்பந்தும்
விளையாடுகின்றன.
குளிப்பது, உண்பது, உறங்குவது என சகல அன்றாட நிகழ்வுகளையும்
அல்-ஜமாலுடன் தான் அவை செலவிட்டு மகிழ்கின்றன. இது பற்றிய செய்திகள்
வலைத்தளங்களில் பரவ, அல்-ஜமாலுக்கு பாராட்டுகளும், குற்றச்சாட்டுகளும்
குவிந்த வண்ணம் உள்ளன.


0 Comments