கடந்த இரு தசாப்த கால யுத்தம் நிறைவுற்று வடமாகாண முஸ்லீம்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேறி வருகின்ற நிலையில் வடக்கில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களையும் அவசரமாக பதிவு செய்து கொள்ளும்படி வடக்கு முஸ்லீம் பிரஜைகள் குழுவின் தலைவரும் வடமாகாண முஸ்லிம் சமய கலாசார அமைச்சரின் இணைப்பாளருமான மெளலவி ஏ .எச். எம் முபாரக் (ரஷாதி) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் அவர் தெரிவித்துள்ளதாவது -
வடக்கில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த முஸ்லீம்கள் தமது வணக்க வெளிப்பாடுகளை மேற்கொள்ளும் சமய தலமாக பள்ளிவாசல்களையே பேணிப்பாதுகாத்து வந்தார்கள். எனினும் 1990 இல் வடக்கு முஸ்லீம்கள் உடுத்திய உடையில் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதனால் அணைத்து பள்ளிவாசல்களும் அழிக்கப்பட்டு சிதைந்த நிலையில் காணப்படுவதால் அவற்றை மீள நிர்மாணிக்க வேண்டிய தேவை உள்ளது.
அவ்வாறே முன்னர் கட்டப்பட்ட பள்ளிவாசல்களையும் தற்போது புதிதாக கட்டப்பட்டுவரும் பள்ளிவாசல்களையும் உடனடியாக முஸ்லிம் கலாசார அமைச்சில் பதிவு செய்து கொள்ளும்படி வேண்டுகிறோம். மேற்படி பதிவுக்கான விண்ணப்பங்களை அல்லது மேலதிக விபரங்களை மன்னார் மூர் வீதியில் அமைந்துள்ள வடக்கு முஸ்லிம் பிரஜைகளுக்கான குழு தலைமைச் செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களைப் பெற இந்த இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.0772282165/0773257722 .
-Irshad Rahumadullah-


0 Comments