“(இஞ்சி கலந்த) ஸன்ஜபீல் என்னும் (மிக்க உயர்ந்ததொரு) பானமும் அங்கு அவர்களுக்குப் புகட்டப்படும்”. (அல்குர்ஆன் – 76:17)
இஞ்சி, மலைப் பிரதேசங்களில் அதிக மழை அளவு
உள்ள இடங்களில் வளர்கிறது. தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்
பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. இஞ்சி வளர்வதற்கு மிதவெப்பமும், அதிக
காற்று, ஈரத்தன்மையும் அவசியம். சாதாரணமாக 450 மீட்டர் முதல் 1800 மீட்டர்
உயரத்தில் வளர்கிறது. வருடம் 150 செ.மீ. மழைபொழியும் மலைப் பிரதேசங்களில்
இஞ்சி சிறந்து வளர்கிறது.
இஞ்சியின் மருத்துவக் குணங்களை அறிந்து,
தினமும் இஞ்சி சாப்பிட்டால் என்னென்ன நோய் விலகும் என்பதை பல ஆய்வுகள்
நிரூபித்துக் காட்டியுள்ளன.
*இஞ்சி சாப்பிட்டால் இதயநோய் வராது!
*நரம்பை பலப்படுத்தும் இஞ்சி
*இதயநோய் வராது
*தலைசுற்றல் வாந்தி மயக்கம் ஏற்படாது
*இதயத்தை பலப்படுத்தும்
*பக்கவாதம், மாரடைப்பு ஏற்பட காரணமான ரத்த கட்டிகள் ஏற்படுவதை தடுக்கும்.
இஞ்சியில் இருந்து தயார் செய்யப்படும்
காம்ஃபின், ஜின்ஜிபெரி, ஃபெளலாட்ரின் ஆகிய மருந்துப் பொருள்கள், உடலுக்கு
தெம்பையும் புத்துணர்ச்சியும் தரக்கூடியவை.
இஞ்சி, வலிப்பு நோயை குணப்படுத்தும் என
புகழ் பெற்ற டென்மார்க் ஓடன்ஸ் பல்கலைக் கழகம் சமீபத்தில் தனது
ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளது. சமீபத்தில், இந்தப் பல்கலைக் கழக
மருத்துவமனையில் 35 இதய நோயாளிகளுக்கு சோதனை ரீதியில் இஞ்சி மருந்து
தினமும் கொடுக்கப்பட்டது. மூன்றே மாதத்தில் ஆச்சரியப்படும் வகையில் அந்த
நோயாளிகள் அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர்.
காது நோய் ஏற்படாமல் தடுக்க இஞ்சிப் பொடி
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என இந்தப் பல்கலைக் கழகம் ஏற்கெனவே
நிரூபித்துள்ளது. மயக்கம், தலைசுற்றல் நோய்களுக்காகக் கொடுக்கப்படும்
ஆங்கில மருந்து ‘டிரம்மைன்’ ஆகும். இந்த மருந்தைவிட இஞ்சிப் பொடி நல்ல
பலனைத் தருகிறது என பிர்காம் பல்கலைக்கழகம் 1982–ம் ஆண்டிலேயே
கண்டுபிடித்தது.
இதயத்துக்கு இஞ்சி நல்லது என ஜப்பான்
டாக்டர்கள் ஏற்கெனவே கண்டுபிடித்து நிரூபித்துள்ளனர். இதயத்துடிப்பை
குறைக்க விலை உயர்ந்த ‘பீட்டா’ ஆங்கில மருந்தை இப்போது
பயன்படுத்துகின்றனர். அதைவிட இஞ்சி சிறந்த மருந்தாக உள்ளது.
இதயத்துக்கு ரத்தத்தை ஒழுங்காக அனுப்பப்
பயன்படுத்தப்படும் ‘டிஜிடாலிஸ்’ மருந்தைப் போலவே, இஞ்சியும் ரத்தத்தை
ஒழுங்காக இதயத்துக்கு அனுப்புகிறது என்று ஜப்பான் மருத்துவ நிபுணர்கள்
சோதனை மூலம் கண்டுபிடித்துள்ளனர்.
பக்கவாத நோய் ஏற்பட காரணமாக இருக்கும்
ரத்த உறைதலைத் தடுக்க இஞ்சி மருந்தாக உள்ளது என கார்னல் பல்கலைக் கழக
விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.சாதாரண காய்ச்சல் இருந்தாலும்,
இருமலுக்கும்கூட இஞ்சியை மருந்தாகப் பயன்படுத்தலாம் என ஜப்பான் மருத்துவ
ஆராய்ச்சி நிறுவனம் சிபாரிசு செய்துள்ளது.
உணவில் நாம் தினமும் இஞ்சியை
சேர்த்துக்கொண்டால், எந்த நோயும் அணுகாது. நீண்ட ஆயுள் வாழலாம். அவரவர்
விருப்பப்படி இஞ்சியை பயன்படுத்திக்கொள்ள, பயனுள்ள சில மருத்துவ
குறிப்புகள் இங்கே உங்களுக்காக…இஞ்சியை பொடி செய்து, டீக்கு பதிலாக இஞ்சி
டீகூட குடிக்கலாம் என வெளிநாட்டு டாக்டர்கள் கூறியுள்ளனர். இப்போது
இஞ்சியிலிருந்து சாறு, இஞ்சி சர்பத், லேகியம், இஞ்சி தைலம் ஆகிய மருந்துகள்
செய்யப்படுகிறது.
பசியை உண்டாக்கும் இஞ்சிச் சாறு
இஞ்சியை மேல் தோல் நீக்கி அரைத்து, நீர்
கலந்து வடிகட்டிப் பயன்படுத்துவதே இஞ்சிச் சாறும். உணவு செரிமானம் ஆகாமல்
ஏற்படும் வயிற்றுப்போக்குக்கு இஞ்சிச் சாற்றை வயிற்றின் தொப்புள் பகுதியை
சுற்றித் தடவி வர குணமாகு்ம் இஞ்சிச் சாறும், வெங்காயச் சாறும் சம அளவு
கலந்து குடித்தால், வாந்தி, குமட்டல் இவற்றை நிறுத்தலாம்.
இருமல் குணமாகும்
இஞ்சிச் சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் சம அளவு கலந்து, வேளைக்கு 30 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால், இருமல் விரைவில் குணமாகும்.
உடல் வலிமைக்கு இஞ்சி
இஞ்சியை கீற்றுக்களாக நறுக்கி, தேனில்
ஊறவைத்து நாள்தோறும் காலையில் 4 துண்டு மாலை 4 துண்டு சாப்பிட்டு வந்தால்,
உடல் பலம் பெறும். இளமை தோற்றம் கொடுக்கும்.
வயிற்று வலி, வாந்தி நீங்க இஞ்சி
இஞ்சிச் சாறு, தேன் இரண்டையும் சேர்த்து
பாகு செய்து குங்குமப் பூ, ஏலக்காய், சாதிக்காய், கிராம்பு இவற்றை பொடி
செய்து தூவி, கிளறி எடுத்து கண்ணாடி பாத்திரத்தில் வைத்துக்கொண்டு,
தேவையானபோது 5 கிராம் எடுத்து சாப்பிட்டால் வயிற்று வலி, வாந்தி முதலியவை
குணமடையும்.
உடல் நலம் காக்க இஞ்சிக் குடிநீர்
இஞ்சி, திரிகடுகு (சுக்கு, மிளகு,
திப்பிலி), ஏலம், அதிமதுரம், சீரகம், சந்தனப்பொடி ஆகியவை நாட்டு மருந்துக்
கடைகளில் கிடைக்கும் எல்லாவற்றிலும் வகைக்கு சமஎடை அளவு வாங்கி, அரைத்து
கலந்து வைத்துக்கொள்ளவும். வேண்டும்போது, ஒரு ஸ்பூன் பொடியை நீரில் கலக்கி
சுண்டக் காய்ச்சவும். பின்பு காலை – மதியம் – மாலை 50 மில்லி அளவு வேளைக்கு
ஒருமுறை சாப்பிட பித்தம் நீங்கும். உடல் சுறுசுறுப்படையும்.
வாத நோய்களை குணமாக்கும் இஞ்சி எண்ணெய்
இஞ்சி, சிவதை, சீந்தில், நிலவாகை,
கொடிவேலி, கழற்சிக் கொடி, முடக்கத்தான் சமூலம், பூண்டு, சுக்கு, மிளகு,
திப்பிலி இவற்றை வகைக்கு 35 கிராம் எடுத்து அரைத்து 500 மில்லி நெய்யில்
கலக்கி காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு, வேளைக்கு ஒரு ஸ்பூன் அளவு
உள்ளுக்கு சாப்பிட்டு வர, வாத நோய் குணமாகும்.
தலைவலிக்கு இஞ்சி
மூக்கில், ஓரிரு சொட்டுகள் இஞ்சிச் சாறு விட்டால் தலைவலி குணமாகிவிடும்.
பல்வலிக்கு இஞ்சி
இஞ்சித் துண்டை பல்வலி உள்ள இடத்தில் வைத்துத் தேய்த்தால் வலி மட்டுப்படும்.
தொந்தி குறைய இஞ்சிச் சாறும் தேனும்
வயிற்றில் சதை அதிகமாவதால் தொந்தி
விழுகிறது. அதைக் குறைத்தால், இதய நோய் வராது. தொந்தி இருக்கும் சிலருக்கு
குறட்டை அதிகம் ஏற்படும். இதற்கு, தொந்தி ஒரு முக்கியக் காரணம்.
பெண்களுக்கு அதிகமாக இந்த வயிற்று சதைப் பிரச்னை இருக்கிறது.
குழந்தையின்மைக்கு ஒரு காரணமாகக் கருதப்படும் தொந்தியைக் குறைக்க,
இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டாகும்.
-தினமணி-


0 Comments