அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலத்தின்படி குறைக்கப்படும்
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் யாவும் பிரதமர் மீது
சுமத்தப்படுமென்பதில் எவ்வித உண்மையுமில்லை. மாறாக இந்த அதிகாரங்கள் யாவும்
பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டு அது ஒரு பலம் பொருந்திய நிறுவனமாக
மாற்றப்படுமென பிரதி வெளிவிகார அமைச்சர் அஜித் பி. பெரேரா நேற்று
தெரிவித்தார்.
இதன்படி பிரதமர் அமைச்சரவையின் ஓர் உறுப்பினர் மாத்திரமேயன்றி அவரது
தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கமைய செயற்பட முடியாது என்றும் அவர்
சுட்டிக்காட்டினார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பலிக்கடாவாக்கும் நோக்கிலேயே 19வது
அரசியலமைப்பு சீர்திருத்தம் நிறைவேற்றப்படவிருப்பதாக எதிர்க் கட்சிகள் பல
கருத்துக்களை முன்வைத்துள்ள போதிலும், அரசியல் உலக விவகாரம், ஜனநாயகம் ஆகிய
அனைத்து விடயங்களும் நன்கு தெரிந்தவரென்ற வகையில் பிரதமர் விக்கிரமசிங்கவே
இதனை நடைமுறைப் படுத்துவதற்கு முழுமையான இணக்கம் தெரிவித்துள்ளார் என்றும்
அவர் கூறினார்.
இதேவேளை, 19வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் பிரகாரம் ஜனாதிபதி,
பாராளுமன்றம், அமைச்சரவை ஆகிய மூன்றும் ஒன்றுடனொன்று இணைந்தே தீர்மானங்களை
மேற்கொள்வதனால் அவசர அவசரமாக தீர்மானங்கள் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள்
இல்லை. மேலும் ஜனாதிபதியோ பிரதமரோ அல்லது அமைச்சரவையோ தான் தோன்றித்தனமாக
செயற்பட முடியாத நிலைமை இங்கு காணப்படுவதனால் இது மிகவும் பிரயோசமானதொரு
சட்ட மூலமாகும்.
அரசாங்கத்தின் செயற்பாடுகளை கவிழ்க்கும் நோக்குடைய கட்சிகளைத் தவிர வேறு
எந்தவொரு கட்சியும் இதனை எதிர்ப்பதற்கான தாற்பரியம் இல்லையென்றும் அவர்
விளக்கமளித்தார்.
உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத் தையடுத்து ஏற்கனவே முன்மொழியப்பட்ட
19வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் சில சரத்துக்களை நீக்கிய பின்னர்
திருத்தங்களுடனான 19வது அரசியலமைப்பு திருத்தம் எதிர்வரும் 20 ஆம்
திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் அரசியலமைப்பின் 19வது திருத்தத்தை நிறைவேற்றுவதன் மூலம்
நாட்டிற்கும் மக்களுக்கும் கிடைக்க கூடிய பலாபலன்களை விளக்கும் வகையிலான
செய்தியாளர் மாநாடொன்று நேற்றுக் காலை வெளிவிவகார அமைச்சில்
நடாத்தப்பட்டது. இதன்போதே பிரதி வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு
விளக்கமளித்தார்.
அரசியலமைப்பின் 19வது திருத்த சட்டமூலத்தின்படி மக்களின் வாக்குகளால்
தெரிவு செய்யப்படும் ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரங்கள்
குறைக்கப்படும் அதேநேரம் பாராளுமன்றம் பலம்பொருந்தியதொரு நிறுவனமாக
மாற்றப்படும் எனவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும் இந்த சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசியல்
நடைமுறையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து பிரதி வெளிவிவகார அமைச்சர்
விளக்கமளித்ததாவது,
தான் நினைத்த போது எவ்வித காரணமுமின்றி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு
ஜனாதிபதி பெற்றிருந்த அதிகாரம் முற்றாக ஒழிக்கப்படும். பாராளுமன்றத்தின்
ஆயுட்காலம் 05 வருடங்களாக குறைக்கப்பட்டுள்ள நிலையில் நான்கரை
வருடங்களுக்குப் பின்னரே ஜனாதிபதி ஏதேனும் ஒரு காரணத்திற்காக
பாராளுமன்றத்தை கலைக்கலாம். அதற்கு முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட
வேண்டுமாயின் 2/3 பெரும்பான்மை அவசியம் ஆகும். அவசரகால சட்டமூலம்
கொண்டுவரும் நடைமுறை முற்றாக ஒழிக்கப்படும்.
ஜனாதிபதியினது பதவிக் காலமும் பாராளுமன்றத்தின் ஆயுட் காலமும் ஆறு
வருடங்களிலிருந்து ஐந்து வருடங்களாக குறைக்கப்படும். ஆறு வருடங்களென்பது
தேவைக்கும் அதிகமானதாகவே கருதப்படுகிறது. பல நாடுகள் 05 அல்லது அதனிலும்
குறைவாக ஆட்சி காலத்தையே கொண்டுள்ளன.
தேர்தல் வாக்குகளால் எத்தனை முறை வேண்டுமானாலும் பதவிக்கு வரலாமென்ற
நிலைமை மாற்றப்படும். ஒரு தனிநபர் நாட்டை பலம் பொருந்தி யதாக உருமாற்றவும்
தனது திட்டங்களை நிறைவேற்றவும் ஆகக்கூடியது 10 வருடங்கள் போதுமென்பதனால்
ஒருவருக்கு இரண்டு தடவைகள் மாத்திரமே ஜனாதிபதியாக தெரிவாக
அனுமதிக்கப்படும்.
19வது அரசியலமைப்பின் படி ஜனாதிபதியானவர் பிரதமர் மற்றும் அமைச்சரவை எடுக்கும் தீர்மானத்தின் பிரகாரமே செயற்படுதல் வேண்டும்.
ஜனாதிபதியின் அபிப்பிராயமும் பிரதமர் மற்றும் அமைச்சரவையின்
அபிப்பிராயமும் முரண்படுமிடத்து ஜனாதிபதி விரும்பினால் பாராளுமன்றத்தின்
அபிப்பிராயத்தை பெற்றுக்கொள்ள முடியும். இதன்படி குறித்த தீர்மானத்திற்கு
பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வாக்குகள் கிடைக்குமாயின் ஜனாதிபதி தனது
அபிப்பிராயத்தை செயற்படுத்த முடியும்.
அதேபோன்று பிரதமரும் அமைச்சரவையும் ஜனாதிபதியை புறக்கணித்துவிட்டு தான்தோன்றித்தனமாக இங்கு செயற்பட முடியாது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையின் தீர்மானங்கள் இணக்கப்பாட்டுடன்
இருந்தாலே ஒரு தீர்மானத்தை நடைமுறைப்படுத்தக்கூடிய தாகவிருக்கும்.
பிரதம நீதியரசர். உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், சட்ட மா அதிபர், கணக்
காளர் நாயகம், பாராளுமன்ற செயலாளர் நாயகம், அரசாங்க அதிகாரிகள். முக்கிய
நீதிபதிகளை நியமிப்பதற்காக ஜனாதிபதி சிபாரிசு செய்யும் பெயர்களை,
அரசியலமைப்பு சபை சம்மதிக்கும் பட்சத்திலேயே பெயர் குறிப்பிடப்பட்ட வர்கள்
குறித்த பதவிகளில் நியமிக்கப் படலாம்.
ஜனாதிபதி முன்மொழியும் பெயரை அரசியலமைப்பு சபை நிராகரித்தால், ஜனாதிபதி
குறித்த பதவிக்காக இன்னுமொருவரின் பெயரை சிபார்சு செய்தல் வேண்டும். இதன்
மூலம் சுயமாக இயங்க கூடிய தகுதி உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் கிட்டும்.
ஆணைக்குழுக்கான உறுப்பினர்களின் பெயர்களையும் ஜனாதிபதி சிபாரிசு செய்ய
அரசியலமைப்பு சபை அது குறித்த இறுதி தீர்மானம் எடுக்கும். அரசியலமைப்பு சபை
குறித்த பெயரை ஏற்கமறுக்கும் பட்சத்தில் ஜனாதிபதி அவ்விடத்துக்காக
வேறொருவரின் பெயரை சிபாரிசு செய்வார்.
இதன்படி, தேர்தல் ஆணைக்குழு. பகிரங்க சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ்
ஆணைக்குழு, கணக்காய்வு சேவை ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு,
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, தேசிய
பெறுகை ஆணைக்குழு. பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு, அரசகரும மொழிகள் ஆணைக்குழு
ஆகியவற்றின் உறுப்பினர்கள் இவ்வாறு நியமிக்கப் படுவர்.
இதேவேளை ஏற்கனவே நடைமுறை யிலுள்ள பகிரங்க சேவை ஆணைக் குழு, கணக்காய்வு
சேவை ஆணைக் குழு, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு மற்றும் அரச கரும மொழிகள்
ஆணைக்குழு ஆகிய நான்கும் சுயாதீனமான ஆணைக் குழுவாக மாற்றியமைக்கப்படுதல்
உள்ளிட்ட நாட்டிற்கும் மக்களுக்கும் பயனுடைய பல மாற்றங்கள் கொண்டு வரப்
படவிருப்பதாகவும் அவர் கூறினார்.


0 Comments