Subscribe Us

header ads

தமிழில் தேசிய கீதம் பாடுவதை, ஜனாதிபதி அனுமதிக்கக் கூடாது ஞானசாரர் போர்க்கொடி....(VIDEO)


இலங்கையின் தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதிக்க வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபம் அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயல் என பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்த அறிக்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனவும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய ஜனாதிபதிக்கு அதற்கான சுற்று நிருபத்தை அரச நிறுவனங்களுக்கு அனுப்ப முடியாது எனவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். காரணம் அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது எனவும் அவர் கூறியுள்ளார்.

நியமிக்கப்பட்ட தேசிய நிறைவேற்றுச் சபையும் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி நியமிக்கப்பட்டுள்ளது. 

இதனால், தமிழில் தேசிய கீதம் பாடுவதை ஜனாதிபதி அனுமதிக்கக் கூடாது. அரசாங்கம் புதிய பிரச்சினைகளை உருவாக்க முயற்சித்து வருகிறது எனவும் ஞானசார தேரர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

அதேவேளை அரசியலமைப்பின் பிரகாரம் தேசிய கீதத்தின் மொழி மாற்றப்பட வேண்டுமாயின் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் டிலாந்த வித்தானகே தெரிவித்துள்ளார்.

தேசிய கீதம் பாடும் மொழியை மாற்றுவதால், இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது. அரசாங்கம் நாட்டின் எதிர்காலம் சிந்தித்து பல முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் டிலாந்த வித்தானகே குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதை எதிர்ப்பதாக பிவித்துரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி வழங்கியிருப்பது இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 7வது ஷரத்துக்கு அமைய எதிரானதாகும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கம்மன்பில இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தேசிய கீதம் ஸ்ரீலங்கா மாதா என்பதாகும். தேசிய கீதத்தின் மெட்டு மற்றும் இசை என்பன மூன்றாவது உப தலைப்புகளில் தரப்பட்டுள்ளன என இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் தற்போதைய அரசியலமைப்புச் சட்டமான இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்புச் சட்டம் 1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. அன்று தொடக்கம் கடந்த 2010 ஆம் ஆண்டு வரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் இலங்கையின் தேசிய கீதம் தமிழிலேயே பாடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது


Post a Comment

0 Comments