இந்தியா, சீனாவைவிட எமது வளங்கள் முக்கியம் வாய்ந்தவை என்பதால் இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது அவர் யாழிற்கு சென்று என்ன பேசப்போகின்றார் என்பது குறித்து ஆராய வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் இணைத் தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது எவ்வாறான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளது என்பது குறித்து நாம் அறிந்திருக்க வேண்டும்.
சீபா போன்றதொரு மற்றொரு உடன்படிக்கைக்கும், அனல் மின் நிலைய உடன்படிக்கைக்கும் இந்தியா தயாராகி வருவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே இந்தியா, சீனா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் உபாய ரீதியான செயற்பாட்டிற்குள் இலங்கை சிக்கிவிட கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விருப்புவாக்கு முறையற்ற தேர்தல் முறைமை கொண்டு வரப்பட்டு ஜனாதிபதியையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே தேர்தலில் தெரிவு செய்யும் மாற்றங்கள் அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
துறைமுகம் மற்றும் எரிசக்தி ரீதியில் இந்தியா உபாய ரீதியான செயற்பாடுகளை இலங்கையில் முன்னெடுக்கலாம் என அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன்,
இவ்வாறு சர்வதேச ரீதியான உபாய செயற்பாடுகளுக்கு இடையில் எமது நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் வளங்களை பாதுகாப்பது தொடர்பில் நாம் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
குளிரூட்டப்பட்ட அறைகளில் திருட்டுத்தனமாக பேச்சுவார்த்தை நடத்தி எமது நாட்டின் தேசிய பாதுகாப்பையும், வளத்தையும் மேற்குலக நாடுகளுக்கு விற்பதற்கு நாம் இடமளிக்க கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய பிரதமர் வடக்கிற்கு செல்ல எவ்வித தடையும் இல்லாத நிலையில், அவர் அங்கு சென்று என்ன பேச போகின்றார் என்பது குறித்து ஆராய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை பொது தேர்தலின் பின்னர் ஆட்சியமைக்கும் நோக்கிலேயே ஐக்கிய தேசிய கட்சி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முயற்சித்து வருகின்றது என அத்துரலிய ரத்ன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

0 Comments