புத்தளம் - வண்ணாத்திவில்லு காவற்துறை பிரிவுக்குட்பட்ட கரைத்தீவு பகுதியில் சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக கூறப்படும் இளைஞனைக் கைது செய்துள்ளதாக வண்ணாத்திவில்லு காவற்துறையினர் தெரிவித்தனர்.
எட்டு வயதுச் சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரிலேயே 25 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சிறுமியின் தாயின் சகோதரி ஒருவருடைய கணவரே (சித்தப்பா) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தான் தரும் பணத்தைத் தாயிடம் கொடுக்குமாறு கூறி சிறுமியை ஏமாற்றி சந்தேக நபர் சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றே இவ்வாறு குற்றம் புரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தனது மகளுக்கு ஏற்பட்ட இந்த கொடுமையை அறிந்து கொண்டுள்ள சிறுமியின் தாய், இதுதொடர்பில் வண்ணாத்திவில்லு காவற்துறை நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வண்ணாத்திவில்லு காவற்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வண்ணாத்திவில்லு காவற்துறையினர் இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


0 Comments