சிவப்பு நிற பழங்கள், காய்கறிகளுக்கு என்று ஒரு சிறப்பு உள்ளது. அதாவது அவற்றில், ஆந்தோசயனின், லைகோபீன் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
லைகோபீன், புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. ஆந்தோசயனின் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
இத்தகைய சிவப்பு நிற பழங்கள், காய்கறிகள் சிலவற்றைப் பார்க்கலாம்...
தர்பூசணி
தண்ணீரும், இயற்கையான சர்க்கரையும் நிறைந்த பழம் தர்பூசணி. வைட்டமின்கள், தாதுக்கள், லைகோபீன் போன்ற ஆன்டிஆக்சிடன்ட், குறைந்த அளவு கலோரிகள் இதில் உள்ளன.
தர்பூசணியில் 92 சதவிகிதம் நீர்ச் சத்து உள்ளதால், தாகத்தைத் தணிக்கும். உடலில் உள்ள நீர்த் தன்மையைச் சரிசெய்யும்.
இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட் புற்றுநோய்ச் செல்கள் உருவாவதைத் தடுக்கும். செரிமானத்துக்கு உதவி, மலச்சிக்கலைப் போக்குகிறது. வைட்டமின் ஏ உள்ளதால் கண், சருமத்துக்கு நல்லது.
மாதுளம்பழம்
மாதுளை ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்த பழம். இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, சி, இ, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், ரிபோபிளேவின் போன்ற சத்துகள் மாதுளையில் நிறைந்துள்ளன. இது கொழுப்பைக் குறைத்து இதயம் தொடர்பான பிரச்சினைகள் வராமல் காக்கும். உயர் ரத்த அழுத்தத்தையும், ரத்த ஓட்டத்தையும் சீர் செய்யும்.
ரத்த சோகை உள்ளவர்கள் மாதுளை அவசியம் சாப்பிட வேண்டும். சர்க்கரை நோயாளிகள் இதை குறைவாக எடுத்துக்கொள்ளலாம். மாதுளை, சருமத்துக்குப் புத்துயிர் தந்து, செல்களைப் புதுப்பிக்கும்.
தக்காளி
தக்காளியில் வைட்டமின் ஏ இருப்பதால், பார்வைத் திறன் அதிகரிக்கும். லைகோபீன் இருப்பதால் நுரையீரல், பிராஸ்டேட் மற்றும் வயிறு தொடர்பான புற்றுநோய்கள் வராமல் பாதுகாக்கும்.
ரத்த ஓட்டம் மற்றும் ரத்தக் கட்டுகள் தொடர்பான பிரச்சினைகளைக் குணப்படுத்தும். ரத்த நாளங்களில் கொழுப்புப் படியாமல் காக்கும்.
உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றவும் தக்காளி உதவுகிறது. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற அவதிகளில் இருந்து காக்கும்.
சிவப்பு மிளகாய்
சிவப்பு மிளகாயில் வைட்டமின் ஏ, சி அதிகம். அடர் சிவப்பு நிறம் என்றாலே, அதில் பீட்டாகரோட்டீன் இருக்கும். சுவாசக் குழாய்கள், நுரையீரல், குடல், சிறுநீரகக் குழாய் போன்றவற்றுக்கு நல்லது, அளவாகச் சாப்பிடலாம்.
சிவப்பு மிளகாய் செரிமானத்துக்கு உதவுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. மிளகாயில் உள்ள காப்சைசின் என்ற வேதிப்பொருள், நரம்பு மண்டலத்துக்குச் சென்று நல்ல மனநிலையை ஏற்படுத்தும்.
ஆப்பிள்
ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்த பழங்களில் முதலிடத்தில் இருப்பது ஆப்பிள். நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி மற்றும் குறைந்த கலோரிகள் கொண்டது.
இதில் உள்ள பாலிபீனால்கள், ஆன்டிஆக்சிடன்டாக செயல்படுகிறது. தொடர்ந்து ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம், இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.
நல்ல கொழுப்பை ஆப்பிள் அதிகரிக்கும் என்கின்றன சில ஆய்வுகள். ஆப்பிளை கடித்துச் சாப்பிடும்போது, உமிழ்நீரைச் சுரக்கச்செய்து, கிருமிகளிடமிருந்தும், பற்சிதைவுகளில் இருந்தும் பற்களைப் பாதுகாக்கும்.
சிவப்பு ஆப்பிளில் உள்ள குவர்செட்டின் என்ற ஆன்டிஆக்சிடன்ட், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது.
சிவப்பு கொய்யா
உட்புறம் சிவப்பு நிறமுள்ள சிவப்பு கொய்யா, வைட்டமின் சி நிறைந்தது. இது புற்றுநோய்ச் செல்களை வளரவிடாமல் தடுக்கும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானம், மலச்சிக்கல் பிரச்சினை குணமாகும்.
கேரட்டில் உள்ள ரெட்டினால், சிவப்பு கொய்யாவிலும் உள்ளதால் பார்வைத் திறன் கூடும். போலேட் என்ற தாது உப்பு இனப்பெருக்க உறுப்புகளை மேம்படுத்தும்.
சிவப்பு கொய்யாவில் லைகோபீன் சத்துக்கள் உள்ளதால், அலர்ஜி, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மிகவும் நல்லது. மூப்படைவதைத் தாமதப்படுத்தி, சருமச் சுருக்கங்கள் ஏற்படாமல் காக்கும்.


0 Comments