இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் 33 வயதான மகேந்திரசிங் தோனி தந்தையாகி இருக்கிறார். தோனிக்கும், அவரது சிறுவயது தோழி சாக்ஷிக்கும் கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது. அதன் பிறகு எங்கு கிரிக்கெட் நடந்தாலும் கணவரின் ஆட்டத்தை காண சாக்ஷி தவறாமல் ஆஜராகி, உற்சாகப்படுத்துவார்.
இந்த நிலையில் சாக்ஷி கர்ப்பமானார். இதனால் தோனியுடன் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதை தவிர்த்து விட்டார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சாக்ஷிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. டெல்லி அருகே உள்ள குர்கானில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாக்ஷிக்கு நேற்று மாலை அழகான பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை 3.7 கிலோ எடை இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். டோனி-சாக்ஷி தம்பதிக்கு இது முதல் குழந்தையாகும். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக தோனி இப்போது அவுஸ்திரேலியாவில் ‘பிசி’யாக இருக்கிறார்.
தந்தை ஆன தகவல் அறிந்ததும் பூரித்து போன அவர் சக வீரர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். உலகக்கிண்ண கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் ஒரு வார காலமே உள்ளதால் இப்போதைக்கு அவர் தனது செல்லமகளை நேரில் பார்க்க முடியாத சூழலில் இருக்கிறார்.


0 Comments