ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற பல மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பிக்க புதிய நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ஆர். ஏ. சிறிசேனவை அப்போதைய ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன போன்று வேடம் தரிக்கச் செய்து, தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றச் செய்வதற்காக 28 நாட்களுக்கு இலங்கை மன்றக் கல்லூரியில் தங்க வைப்பதற்கென அப்போதைய ரூபவாஹினி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஆர். ஏ. சிறிசேனவுக்கு மைத்திரிபால சிறிசேனவைப் போன்று விளம்பரங்களில் தோன்றச் செய்வதற்கு இலங்கை மன்றக் கல்லூரியிலேயே பயிற்சி வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இவருடன் தொலைக்காட்சியில் தோன்ற இருந்த ஏனைய நபர்களுக்கும் இலங்கை மன்றக் கல்லூரியில் தங்குவதற்கு முன்னாள் பணிப்பாளர் நாயகத்தின் தலையீட்டினால் ஏற்பாடு செய்யப்பட்டமை தொடர்பாகவும் தெரியவந்துள்ளது.
தங்கும் செலவுகளுக்காக ரூபவாஹினி முன்னாள் பணிப்பாளர் நாயகம் சந்திரபால லியனகேயின் பெயரில் 28 நாள் கட்டணமாக ரூபா 2,55,897.60 தொகைக்கு வவுச்சர் அனுப்பப்பட்டுள்ளது.
புதிய நிர்வாகம் இந்தச் சட்டவிரோத கொடுப்பனவை இடைநிறுத்தி வைத் துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நடைபெற்ற மோசடிகள், ஊழல்கள் தொடர்பாக பல நபர்களிடமிருந்தும் புதிய நிர்வாகத்துக்கு தகவல்கள் கிடைத்து வருகின்றன.
இத்தகவல்கள் இரகசியமாக வைத்துப் பேணப்படும். முறைப்பாடுகள் தொடர்பாக தற்போது ஆராயப்பட்டு வருகிறது.


0 Comments