(நேர்காணல் : எஸ்.தயா)
மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் படும்பாடு சொல்லில் அடங்காது. உயிர் போகுமளவிற்கு வலியால் துடிதுடித்து போவார்கள். இதற்கு அறுவைச் சிகிச்சை தீர்வு என்றாலும், உணவுப்பழக்கம் மூலமும் தீர்வு காணலாம் என்கிறார் தேசமானிய வைத்திய நிபுணர் கிர்ஷாந்த்.
மூல நோய் எவ்வாறு ஏற்படுகின்றது?
மூல நோயானது சிக்கல் காரணமாக ஏற்படுகின்றது. அதாவது நாம் உண்ணும் உணவுசரியான முறையில் ஜீரணமாகாமையால் மலச் சிக்கல் ஏற்படுவதால் மூல நோய் ஏற்படுகின்றது.
இதற்கு மூலகாரணம் உரிய நேரத்தில் உணவு உண்ணாமை. அதிக மாப்பொருள் அடங்கிய உணவுகளை உண்ணுதல், காபோவைதரேட் அடங்கிய உணவுகளை உண்ணுதல், தொடர்ந்து ஒரே வகையான உணவுகளை உண்ணுதல். நாம் உண்ணும் உணவில் பழங்கள், காபோவைதரேட்டு உணவுகள், கலோரின், புரோட்டின் அடங்கிய உணவுகளை உண்ணவேண்டும். ஒரு சிலர்
தொடர்ந்து ஒரே வகையான உணவை உட்கொள்வதால் உதாரணமாக மா உணவை அதிகம் உட்கொள்வதால் மூல நோய் ஏற்படுகின்றது.
மூல நோய் எத்தனை வகையானது ?
இந்நோயை இரண்டு மூன்று வகையாக பிரிக்கலாம்?
உதாரணமாக சொல்வதானால் பரம்பரை நோயாக இருக்கலாம். கர்ப்பிணி தாய்மார்கள் குழந்தையை பிரசவித்த பின் தாய்க்கு கர்ப்பை பை கீழே இறங்குவதால் சிலருக்கு குதம் வெளியே தள்ளப்பட்டு ஏற்படும் நோய் ஒன்றாக காணலாம். பாஸ்பூட் அதாவது இலகு உணவுகளை உட்கொள்வதால் இந்த உணவுகள் சமிபாடடையாமல் மலச்சிக்கலினால் மூல நோய் ஏற்படலாம். சிலருக்கு குருதி வெளியேறுவதால் ஏற்பட வாய்ப்புள்ளது. குதம் வெளியேறி பாரதூரமான ஆபத்தை ஏற்படுத்துகின்ற நோயாக சிலருக்கு ஏற்படும். ஒரு சிலருக்கு மலம் கழிக்கும் போது வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்நோய்க்கான அறிகுறிகள் என்ன?
ஆசனவாய் பகுதியில் இரத்தக்குழாய் தடிமன் ஆவதன் மூலமாக உருவெடுக்கிறது. இதன் அறிகுறியாக முதலில் அரிப்பு ஏற்படும். இயற்கை உபாதை கழிக்கும் போது மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும். வழக்கத்துக்கு மாறாக மலச்சிக்கல் இருக்கும். சில நேரங்களில் இரத்தம் வெளியேறும். அதன்பிறகு சில மணி நேரம் வரை தொடர்ந்து வலி, எரிச்சல் போன்றவை இருக்கும். அழுத்தம் அதிகம் கொடுப்பதால் ஆசனவாயின் வெளிப்பகுதியில் சதை வளர்ச்சி ஏற்படும். உள் பகுதி தடிமன் ஆவதை உள் மூலம் என்றும், சதை வெளித்தள்ளும் போது வெளிமூலம் என்றும் கூறுகிறோம்.
இந்நோயை வருமுன் காக்கலாம். உதாரணமாக மூச்சு எடுப்பதற்கு கடினமாக இருக்கும். வயிறு நிறைந்தது போல் காணப்படும். வாயுத் தன்மை நிறைந்தது போல் காணப்படும். பசித்தன்மை அதிகமாக இருக்காது.
மலம் கழிக்கும் போது இலகுவாக இருக்காது. மிகவும் கடினமாக இருக்கும். குடல் காயும் தன்மை அதாவது குடல் காய்வுத்தன்மை காணப்படுவதால் மலம் கழிக்கும்போது கடினமாக காணப்படும்போது எதிர்காலத்தில் மூல நோய் வர வாய்ப்புள்ளது. இதனால் முறைப்படி உணவுகளை எடுத்து மூல நோய் வராமல் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.
உணவு முறையை கடைபிடிப்பது அவசியமா? இது பற்றி விளக்கம் தாருங்கள்?
ஒருவர் உணவில் கல்சியம், புரதம், காபோவைதரேட், கொழுப்பு ஆகிய உணவுகள் கட்டாயம் உண்ண வேண்டும். உணவை உரிய நேரத்தில் எடுக்கவேண்டும். அதாவது ஆறு மணித்தியாலத்திற்கு ஒரு முறை உணவு உண்ண வேண்டும். ஒரு சிலர் எட்டு, பத்து மணித்தியாலத்திற்கு பின் உணவு உண்ணுதல், இன்னும் ஒரு சிலர் விரதம் இருப்பதால் இந்த நோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. காலை முதல் மாலைவரை உணவு உண்ணாமல் இரவில் உணவு உண்பதால் உணவு சமிபபாடடையாமல் இந்நோய் வர வாய்ப்புள்ளது. உதாரணமாக மூச்சு எடுப்பதற்கு கடினமாக இருக்கும். வயிறு நிறைந்தது போல் காணப்படும்.
வாயுத் தன்மை நிறைந்தது போல் காணப்படும். பசித்தன்மை அதிகமாக இருக்காது. இந்த குணாதிசயங்கள் காணப்பட்டால் கட்டாயமாக விரதம் இருப்பதை தவிர்க்கவேண்டும். உதாரணமாக அதிக மிளகாய் தூள் கலந்த உணவுகள் உண்பதை தவிர்த்துகொள்ளவேண்டும். மேலும் காயத்தன்மை உள்ள உணவுகள் உட்கொள்வதை தவிர்த்து கொள்ளவேண்டும்.
உடனடியாக சமிபாடடையக் கூடிய திரவமான உணவுகளை உட்கொள்வதால் யாரையும் மூல நோய் பாதிக்காது. நாம் அருந்தும் நீரின் அளவு குறைந்தால் இது வர வாய்ப்புள்ளது. நீரை அதிகமாக அருந்துபவர்களுக்கு இந்த நோய் பாதிக்காது.
வயது அடிப்படையில் ஏற்படுமா?
பொதுவாக எல்லா வயதினருக்கும் இந்த நோய் வர வாய்ப்புள்ளது. உணவு பழக்கவழக்கங்கள், இலகு உணவுகள் (பாஸ் பூட்) உதாரணமாக சீஸ், கொத்து ரொட்டி போன்றவற்றை உண்பதால் வர அதிக வாய்ப்புள்ளது. பட்டர், மாப் பொருட்கள் போன்ற மேலைத் தேய பொருட்களை உண்பதால் இந்நோய் வர வாய்ப்புள்ளது. உடனடியாக சமிபாடு அடையக் கூடிய பொருட்களை உண்ண வேண்டும். உதாரணமாக சோறு உண்ணும் ஒருவர் மூன்று நேரமும் சோறு உண்டால் அது சமிபாடு அடையக் கூடியதாக இருக்கும்.
உதாரணமாக இரவு நேரத்தில் கோதுமை மாவால் தயாரிக்கப்பட்ட கொத்து ரொட்டி, ரொட்டி போன்றவற்றை உண்பதால் இவர்களுக்கு மறு நாள் காலையில் காலைக்கடனை செய்வதற்கு அசௌகரியமாக இருக்கும். அதாவது பொதுவாக இலகுவாக மலம் கழிப்பதற்கு பதிலாக மிக கஷ்டப்படுவார்கள்.
இதற்காக பழங்களை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்ளவேண்டும். சைவ உணவை எடுத்துக் கொண்டால், உணவின் பின் ரசம், பாயாசம் போன்றவை கடைகளில் வழங்கப்படுகின்றன. இவற்றை உண்பதால் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும். மேலும் உணவுக்கு பின் டெசட் சாப்பிடுகின்றோம். உணவு இலகுவில் சமிபாடடைய சாப்பிடுகின்றோம். பப்பாளி, வாழைப்பழம், யோகட் போன்றவற்றை உட்கொள்வதால் இந்த பிரச்சினையிலிருந்து விடுபடலாம். ஆதிகாலத்தை எடுத்து கொண்டால் அக்கால மக்களிடையே இந்த பிரச்சினை காணப்படவில்லை. காரணம், இந்த காலத்தில் இலகு உணவுகள், பிஸ்கட் போன்றவற்றை உண்பதால் சமிபாடு அடைவதில் பிரச்சினை ஏற்படும்.
உதாரணமாக இடியப்ப உரலில் இட்ட மாவு சரியான முறையில் பிணைந்திருந்தால் இலகுவாக இடியப்பம் வெளியில் வரும். எதிர்பாராத விதமாக அந்த மாக் கலவையில் ஏதாவது சிக்கல் இருந்தால் மா வெளியில் வருவது கடினமாக இருக்கும். அந்த இடியப்ப உரலின் அடி தட்டோடு கழன்று வரும். அதே போல் தான். மலம் சரியான முறையில் வெளிவருவதில் பிரச்சினை இருந்தால் ஆசனப்பகுதி வெளியே வரவாய்ப்புள்ளது.
இந்த நோயை முற்றாக கட்டுப்படுத்தலாமா?
ஒருசிலர் அறுவைச்சிகிச்சை செய்த பின்னர் உணவில் கட்டுப்பாடு இன்மையால் மீண்டும் அவர்களுக்கு வர வாய்ப்புள்ளது.
இந்த நோய்க்காக சிகிச்சை பெறுவதற்கு சில வகையான ஒயின்மன்ட், கிரீம் வகைகளை நேரடியாக பாவித்தல், மருந்துகளை உட்கொண்டு சமிபாட்டுத் தொகுதியை நல்ல முறையில் வைத்துக்கொள்ளவேண்டும்.
இந்நோய் உள்ளவர்கள் உணவு பழக்கவழக்கங்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். பழங்களை அதிகமாக உண்ணவேண்டும், உடனடியாக சமிபாடு அடையக் கூடிய உணவுகளான பொங்கல், பாற்சோறு போன்றவற்றை அதிக உண்ணவேண்டும்.
அதிகாலையில் எழுந்தவுடன் ஒரு போத்தல் தண்ணீர் அருந்த வேண்டும். குளிரான தண்ணீரை குடித்தால் சமிபாட்டு தொகுதியிலிருந்து வெளியேறுவது கடினமாக இருக்கும். கொதித்து ஆறிய தண்ணீரை குடித்தால் சமிபாட்டு தொகுதியில்சரியாக செயற்பட்டு மலம் வெளியேறுவது மிக இலகுவாக இருக்கும். இவர்களுக்கு தொடர்ந்து உளுந்தங் கஞ்சி, தோசை போன்றவற்றை இரவில் உண்பதால் மலம் கழிப்பதில் பிரச்சினை ஏற்படாது.
மேலதிக விபரங்களுக்கு:
தேசமானிய வைத்திய நிபுணர் கிர்ஷாந்த்,
சுகாதார அமைச்சின் மாகாண ஆலோசகர்,
எப்பிலைப் வைத்தியசாலை,
வெல்லம்பிட்டிய.
தொலைபேசி இலக்கம்.
011-4269137/ 077-7677847.


0 Comments