புதிய பிரதம நீதியரசராக பொறுபேற்கவுள்ள கே. ஸ்ரீபவனுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி கூறினார்.
கொழும்பு புதுக்கடை உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற பிரதம நீதியரசரின் சம்பிரதாயபூர்வமான ஓய்வுபெறும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த இரண்டு வருடங்களாக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் எம் மீது சுமத்தப்பட்டன. கடூழிய சிறைத் தண்டனை பெற்று சிறைக்கு சென்றது போல் உணர்ந்தேன். தற்போது அந்த காலம் முடிவுக்கு வந்து விட்டது. நியாயம் வெற்றி பெற்றுள்ளது.
நீதித்துறையின் சுதந்திரத்திற்காகவே நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த போராட்டத்தை முன்னெடுத்தேன். ஆரம்பம் முதல் எம்மோடு இருந்து எமக்கு ஏற்பட்ட அநீதிக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என ஷிராணி பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.


0 Comments