பொதுஎதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் நான் செய்துள்ளதாக கூறப்படும் இரகசிய உடன்படிக்கை பொய்யானது. உடன்படிக்கையில் இடப்பட்டுள்ள கையெழுத்து என்னுடையது அல்ல என தெரிவிக்கும்எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்தின் நடவடிக்கை தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் முறை ப்பாடு செய்துள்ளேன்.
அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்
பொது எதிரணியின் மீது அரசாங்கம் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றது. இப்போதும் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் நானும் இரகசிய ஒப்பந்தமொன்றினை கைச்சாத்திட்டுள்ளதாக ஊடகங்களில் முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக தெரிவித்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக தெரிவிப்பதைப் போல் எனக்கும் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் எந்தவொரு இரகசிய உடன்படிக்கையும் இல்லை. இரகசியமாக உடன்படிக்கை செய்து கொள்ளவும் இல்லை.
அரசாங்கம் எம் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை தெரிவித்து அவர்களின் தோல்வியினை தடுத்து நிறுத்தும் முயற்சியொன்றினையே மேற்கொண்டுள்ளனர். அதேபோல் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக வெளிப்படுத்திய உடன்படிக்கையில் இருப்பது எனது கையொப்பமில்லை. பொய்யான கையொப்பமொன்றினை தயாரித்து என் மீது குற்றம் சுமத்துகின்றார். எனவே இதற்கு எதிராக நான் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளேன்.
தற்போது இவ் அரசாங்கத்தின் எம் மீதான பொய்யான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளேன். எனது கையொப்பமென பொய்யான கையொப்பமொன்றினை தயாரித்து எம் மீது குற்றம் சுமத்தியுள்ளமைக்கு திஸ்ஸ அத்தநாயக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு இதில் குறிப்பிடப்பட்டுள்ள எனது கையொப்பம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு என் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


0 Comments