(டொக்டர்.எம்.கே.முருகானந்தன்)
தேன் குடிப்பது குளவிகளுக்கு மட்டும் உவப்பானதல்ல. யானைகள், கரடிகள் முதலான மிருகங்கள் முதல் மனிதர்களான நாமும் அதன் இனிய சுவையில் மகிழ்கின்றோம். தேன் போஷாக்குள்ள பதார்த்தமும் கூட. அதன் சிறப்பு சுவையுடன் மட்டும் முடிவடைவதல்ல, மருத்துவ குணங்களும் நிறைந்தது என இயற்கை மருத்துவம் கொண்டாடுகின்றது.
அது எமது பாரம்பரிய வைத்திய முறைகளிலும் வீட்டு வைத்தியத்திலும் தேன் நிறையவே பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். வயிற்றுப் பிரச்சினைகளுக்கு நல்லது என நம்புகிறோம். பண்டைய காலம் முதல் தேனை காயங்களுக்கான மருந்தாகப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.
இருந்தபோதும் இவை யாவும் வெறும் நம்பிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவே கொள்ள வேண்டும். அதற்கு மேலாக விஞ்ஞான பூர்வ ஆராய்வுகளால் கண்டறியப்பட்ட மருத்துவ குணங்கள் ஏவையேனும் தேனுக்கு உள்ளதா?
விஞ்ஞான பூர்வ தகவல்கள்
உரசல் காயங்களுக்கும், ஆழமற்ற வெட்டுக் காயங்களுக்கும், சீழ்ப் பிடித்த புண்களுக்கும் மருந்தாக உதவக் கூடியது தேன் என சில ஆய்வுகள் கூறுகின்றன.இருந்தபோதும் ஆழமான புண்களுக்கும் பூச்சிக் கடிகளால் ஏற்பட்ட புண்களுக்கும் ஏற்றதல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் நாளப்புடைப்பு நோயால் ஏற்படும் புண்களுக்கும் ஏற்றதல்ல. இத்தகைய புண்கள் குணமடைவதைத் தேன் தாமதிக்கச் செய்யும் என்று கண்டறிந்துள்ளார்கள்.
மிகக் கடுமையான சிலவகை தொற்றுகளைத் (MRSA) தணிக்க தேன் உதவும் என சில ஆய்வுகள் கூறியுள்ளன.புண்கள் குணமாவதற்கு தேன் எவ்வாறு உதவுகிறது?
தேன் புண்களின் வலியைக் குறைக்கிறது. ஆறுதல் அளிக்கும் உணர்வைக் கொடுக்கின்றது.
புண்களில் உள்ள சீழ், அழுக்குச் சவ்வு போன்றவை விரைவில் கரைய வைத்து புதிய ஆரோக்கியமான திசுக்கள் உருவாக உதவுகின்றன. புண் குணமாகியதும் விரைவில் ஆரோக்கியமான தோல் மேவி வளர்வதற்கு உதவுகின்றன.தேன் அசிடிக் தன்மையானது அதன் PH வலு 3.2 முதல் 4.5 ஆகும். இது கிருமிகள் பெருகுவதைத் தடுக்க உதவுகிறது.
இவைதான் மருத்துவ ஆய்வுகளின் முடிவுகளாகும். புண்கள் விரைவில் குணமாக இவற்றை விட வேறென்ன தேவை?தேன் எவ்வாறு குணமாக்குகிறது?
புண்ணைக் குணமாக்குவதற்கு தேனில் உள்ள எத்தகைய அம்சங்கள் உதவுகின்றன எனக் கேட்கிறீர்களா?
1. தேனில் உள்ள சீனியின் அதிக செறிவுத்தன்மையும், குறைந்த ஈரலிப்புத் தன்மையும் கிருமிகளை அண்டவிடாது தடுக்கின்றன.
2. இத்துடன் தேனில் உள்ள குளுக்கோனிக் அமிலத்தால் உண்டாகும் அமில ஊடகமும், அதிலுள்ள ஐதரசன் பெரோக்ஸைடும் இணைந்து சீழ்ப் பிடிக்க வைக்கும் கிருமிகள் பெருகுவதைத் தடுக்கின்றன என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கிருமி தொற்றிச் சீழ்ப்பிடித்த புண்களுக்கு தேன் இட்டு சிகிச்சை செய்தபோது அதிலுள்ள கிருமிகள் 3முதல்10 நாட்களுக்குள் முற்றாக அழிந்து கிருமிப்பற்றற்ற புண்களாக மாறியதாக மூன்று வெவ்வேறு ஆய்வுகளின் முடிவுகள் சொல்கின்றன.
3. அத்துடன் புண்ணிலுள்ள வீக்கத்தைத் தணிக்கும் ஆற்றலும் தேனுக்குள்ளது.
புண்ணைக் குணமாக்க எவ்வளவு தேன் தேவை?
புண்களைக் குணப்படுத்த எவ்வளவு தேன் இடவேண்டும். மெல்லிய படையாக இட்டால் போதும் என இரு மருத்துவ அறிக்கைகள் கூறின. ஆயினும் ஏனைய பல மருத்துவ அறிக்கைகள் தாராளமாகத் தேன் இடுவது பற்றியும் இன்னும் சில புண்களின்மேல் தேனை ஊற்றியதாகவும் கூறின.
எனவே எவ்வளவு தேன் இடவேண்டும் என்பது பற்றி தெளிவான, கருத்தொருமைப்பாடு இல்லை என்பது தெளிவாகிறது. புண் உலர்ந்து போகாத அளவிற்கு தேனின் அளவு இருந்தால் போதும் என்பது அறிவு பூர்வமான கருத்தாகும்.
தேனினால் புண்களைச் சுத்தமும் செய்யலாம்
பொதுவாக மருந்து கட்டும்போது சேலைனினால் அல்லது பொவிடின் போன்ற மருந்துகளால் முதலில் சுத்தம் செய்கின்றோம். இதற்குப் பதிலாக தேனைக் கொண்டே சுத்தம் செய்த பின் அதனையே இட்டு மருந்து கட்டலாம்.
நெருப்புச் சுட்ட புண்கள்
நெருப்புச் சுட்ட புண்களுக்கும் தேன் மிகவும் சிறந்ததாகும். நெருப்பு, சுடுநீர், கொதி எண்ணெய் போன்றவற்றால் ஏற்படும் சூட்டுக் காயங்களுக்கு உடனடியாகத் தேன் இட்டால் வேதனை தணியும். காயமும் விரைவில் குணமாகும்.
வாய்ப் புண்கள்
வாய்ப் புண்களையும், முரசு கரைதலையும் தேன் குணமாக்கும் எனச் சொல்லப்படுகிறது. நியூஸிலாந்தில் வளரும் மனுக்கா என்ற தாவரத்தில் இருந்து பெற்ற தேனைக் கொண்டு செய்யப்பட்ட ஒருவகை இனிப்புப் பண்டம் வாய்ப்புண்களையும் முரசு கரைதலையும் மாற்றுகிறது என சில ஆய்வுகள் கூறுகின்றன.
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டிரா விட்டால் இன்று புண், காயம், மற்றும் சத்திர சிகிச்சை தேவைகளுக்கான முக்கிய பொருளாக தேன் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பது உறுதியாக கூறலாம்.
பிள்ளைகள் மருந்து கட்டுவதென்றால் அலறியடித்து ஓடுவது வழக்கம். முதலில் வாயில் சற்று தேனை ஊட்டிவிட்டு, தேனால் சுத்தம் செய்து தேன் இட்டு மருந்து கட்டுவதென்றால் தாங்களாகவே ஓடி வருவார்கள் என்பது திண்ணம்.
தேனின் வேறு மருத்துவப் பயன்கள்
தேனானது இரைப்பை அமிலங்கள் மேல் எழுவதைத் தடுக்க உதவும் என காத்மண்டுவைச் சார்ந்த பேராசிரியர் Mahantayya V Math பிரபல மருத்துவ சஞ்சிகையான BMJயில் எழுதியுள்ளார்.
குழந்தைகளில் ஏற்படும் வயிற்றோட்ட நோய்களுக்கு தேன் உதவும் என E. Haffejee and A. Moosa BMJ யில் எழுதியிருந்தனர். பக்டீரியா கிருமிகளால் ஏற்படும் வயிற்றோட்ட நோய்கள் குணமாவதை தேன் துரிதமாக்கும் என்பதே அவரது முக்கிய கருத்தாகும். மருந்தாகப் பயன்படுத்த முடியும் என்று கூறவில்லை.
குழந்தைகளைத் தொல்லைப்படுத்தும் இரவு இருமலைத் தணிக்க தேன் உதவும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏனைய இருமல் மருந்துகளை விட குழந்தைகளின் இரவு இருமலையும் அதனால் ஏற்படும் தூக்கக் குழப்பத்தையும் தணிக்க தேன் உதவியது என சில பெற்றோர்கள் கூறியதாக மேலும் தெரிவித்திருந்தது.சில வகை ஒவ்வாமைகளுக்குத் தேன் உதவும் எனச் சொல்லப்பட்டபோதும் தெளிவான ஆதாரங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேனின் சிறப்பம்சங்கள் எவை?
சுத்தமான தேன் என்றுமே பழுதடையாது. பிரிட்ஸில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை.மனிதனுக்கு தெரிந்த மிகப் பழைமையான உணவு வகைகளில் இதுவும் ஒன்று. ரட் மன்னரின் கல்லறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட புராதன காலத் தேனானது, இன்றும் உண்ணக் கூடிய நிலையில் சற்றும் பழுதடையாது இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேனின் போஷனை
தேனில் உள்ள .இனிப்பின் பெரும்பகுதி பழங்களில் இருந்து கிடைக்கும் புரக்டோஸ் வகையைச் சார்ந்தது. இதனால் நாம் வழமையாகப் பாவிக்கும் சீனியை விட 25 சதவிகிதம் இனிப்புக் கொண்டது.
ஒரு தேக்கரண்டி தேனில் 64 கலோரிச் சத்து உண்டு. இது எமது உடற்தசைகளின் இயக்கத்திற்கான சக்தியை வழங்குகிறது. தேனில் 17.1 சதவிகித நீர்ப்பற்றே உண்டு. மிகுதி 82.4 சதவிகிதமும் மாச்சத்தாகும். இந்த மாச்சத்துத்தான் இனிப்பாக எமக்குக் கிடைக்கிறது. அதிக கலோரி வலு காரணமாக நீரிழிவு நோயாளருக்கு உகந்தது அல்ல என்பதையும் குறிப்பிட வேண்டும்.
மிச்சமுள்ள 0.5 சதவிகிதம் மட்டுமே புரதம், விட்டமின்கள் மற்றும் தாதுச்சத்தாகும்.கொழுப்புச்சத்து, கொலஸ்ட்ரோல் ஆகியன அடியோடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாப்பொருளில் பழவகை இனிப்பான புரக்டோஸ் 38.5 சதவிகிதமாகும். குளுக்கோஸ் 31 சதவிகிதமாகும். மிகுதி 12.9 சதவிகிதம் மோல்டோஸ், சுகுரோஸ் போன்ற ஏனைய சீனிவகைகளாகும். இதனால் விரைவில் ஜீரணமடையும் தன்மை கொண்டது.
பக்கவிளைவுகள்
தேன் பொதுவாகப் பக்க விளைவுகள் அற்ற பொருளாகும். தேனுக்கு ஒவ்வாமை ஏற்படுவது அரிது. அதில் உள்ள பூக்களின் மகரந்தங்களுக்கும், தேனீ பூச்சியின் புரதங்களுக்கும் ஒவ்வாமை ஏற்படலாம் என எதிர்பார்த்தாலும் அவ்வாறு ஏற்பட்டதான மருத்துவ அறிக்கைகளைக் காண முடியவில்லை.
ஆதாரமற்ற நம்பிக்கை
தேனுடன் தண்ணீர் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடல் மெலி யுமாமே என ஒரு நோயாளி என்னிடம் கேட்டார். இது பற்றி மருத்துவ இணைய தளங்களில் தேடியபோது அதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.
ஆனால் தேனில் 82.4 சதவிகிதமும் மாச்சத்துள்ளது என்ற தகவலை வைத்து விஞ்ஞான பூர்வமாகவும், தர்க்க ரீதியாக வும் சிந்தித்தால் இதில் எந்தவித உண் மையும் இருக்க முடியாது என்பது தெளிவாகிறது. வெற்று நம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்டு மருத்துவ விட யங்களில் தீர் மானிக்கக் கூடாது என்பதற்கு இது ஒரு ஆதாரம்.
/JAH
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் கற்பிட்டியின்குரல்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளை பிரதி செய்பவர்கள் எமது இணையதளத்தின் RSS FEED யை பயன்படுத்தவும் . https://www.facebook.com/kalpitiyavoice

0 Comments