Subscribe Us

header ads

மைத்திரிபால சிறிசேன: அரசியல் வாழ்க்கையும் பின்னணியும்

பெலவத்த கமராலகே மைத்ரிபால யாப்பா சிறிசேன 1951-ம் ஆண்டு, செப்டெம்பர் 3-ம் திகதி வடமத்திய மாகாணத்திலுள்ள பொலன்னறுவையில் சாதாரண விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தார்.

உள்ளூர் பள்ளிக்கூடமொன்றில் ஆரம்பக் கல்வியை பயின்ற மைத்திரிபால சிறிசேன, 1973ம் ஆண்டில் கண்டி குண்டசாலை விவசாயக் கல்லூரியில், விவசாயப் பாடநெறி ஒன்றைப் பயின்றார்.

அதன் பின்னர் கிராம சேவை உத்தியோகத்தராகவும் சிறிதுகாலம் அவர் பணியாற்றியிருந்தார்.
1971-ம் ஆண்டில் ஜேவிபி கிளர்ச்சிக் காலத்தில் சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளைஞர்களில் மைத்திரிபால சிறிசேனவும் இருந்துள்ளார்.
மாணவர் பருவத்திலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூர் இளைஞர் அணி செயற்பாட்டாளராக இருந்துள்ள மைத்திரிபால சிறிசேன,
1970களில் இறுதியில் அந்தக் கட்சியின் தீவிர உள்ளூர் அரசியல் குழுக்களில் அங்கம் வகித்துள்ளார். அதன் பின்னர், 1980களின் தொடக்கத்திலிருந்தே கட்சியின் தேசிய மட்ட அமைப்புகளில் முக்கிய பதவிகளை வகிக்கத் தொடங்கினார்.
இதில் 1982-ம் ஆண்டில் அகில இலங்கை இளைஞர் அணித் தலைவராகவும் பின்னர் கட்சியின் பொலிட் பீரோவிலும் உறுப்பினரானார்.
1989-ம் ஆண்டில், 38வது வயதில் பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவனார்.
அதன்பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெற்று நாடாளுமன்றதுக்கு வந்துள்ளார் மைத்திரிபால சிறிசேன.
பின்னர், சந்திரிகா பண்டாரநாயக்க 1994-ம் ஆண்டில் அமைத்த அரசாங்கத்தில் துணை நீர்ப்பாசனத்துறை அமைச்சராக நியமனம் பெற்ற மைத்திரிபால, மூன்று ஆண்டுகளில் கெபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் பதிவியொன்றுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துணைச் செயலாளராகவும் வளர்ச்சி கண்டார்.
பின்னர், அடுத்த மூன்று ஆண்டுகளில் கட்சியின் துணைத் தலைவராக நியமனம் பெற்ற சிறிசேன. 2004-ம் ஆண்டில் சந்திரிகா தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் நியமனம் பெற்றார்.
அதன்பின்னர், மகிந்த ராஜபக்ஷவின் தலைமைக் காலத்திலும் அதே பதவிநிலையில் நீடித்துவந்த மைத்திரிபால, விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
அதன் பின்னர், விவசாயம் சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் பல்வேறு அமைப்புகளுக்கு தலைமை தாங்கிய அமைச்சர் மைத்திரிபால, 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் படி, சுகாதார அமைச்சராக பதவி வகித்து வந்துள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான யுத்தம் உச்சகட்டத்தைத் தொட்டிருந்த காலத்தில் 2008-ம் ஆண்டில் கொழும்பின் புறநகர்ப்பகுதியான பிலியந்தலையில் மைத்திரிபால சிறிசேன தற்கொலை குண்டுத் தாக்குதல் முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் திகதி நடக்கவுள்ள நிறைவேற்று ஜனாதிபதிக்கான அடுத்த தேர்தலில், மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக, எதிரணிகள் சேர்ந்து களமிறக்கின்ற பொது வேட்பாளர் தான் என்று இன்று வெள்ளிக்கிழமை மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
63 வயதான மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது மனைவியான ஜயந்தி புஸ்பா குமாரி தம்பதியருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
'குடும்ப ஆட்சியிலிருந்து நாட்டைக் காக்கவே போட்டி': மைத்திரிபால
இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
'100 நாட்களில் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும்': மைத்திரிபால
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் சிறிசேன இந்த முடிவை அறிவித்தார்.
அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, எம்.கே.டி.எஸ்.குணவர்தன, துமிந்த திசாநாயக்க, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜிவ விஜேசிங்க, வசந்த சேனாநாயக்க ஆகியோரும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
'குடும்ப ஆட்சியிலிருந்து நாட்டை காப்பதற்காகவே' தான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இங்கு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
'100 நாட்களுக்குள் சீர்திருத்தம்'
'இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளனர். பொது மக்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளனர். நாட்டின் ஜனநாயகம், சட்டம்-ஒழுங்கு சிர்குலைந்துள்ளன' என்ற சிறிசேன, இந்த அழிவில் இருந்து நாட்டை காப்பதற்காகவே தான் இந்த தீர்மானத்தை எடுத்ததாகக் கூறினார்.
'மைத்திரிபால அரசாங்கம் அமைத்தால் ரணில் விக்ரமசிங்க பிரதமராவார்'
தான் வெற்றிபெறும் நாள் முதல் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறை இரத்துச் செய்யப்படும் என்றும் கூறிய மைத்திரிபால, தான் அமைக்கும் அரசாங்கத்தின் பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கவுள்ளதாகவும் கூறினார்.
தனது புதிய ஆட்சின் கீழ், அரசியல்யாப்பின் 18 வது திருத்தம் இரத்துச் செய்யப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.
அரசியல் யாப்பின் 18 வது திருத்தம் காரணமாகவே நாட்டில் சர்வாதிகார ஆட்சியொன்று உருவாகியுள்ளதாக கூறிய அவர், காவல்துறை, அரசசேவை, நீதித்துறை, ஊடக சுதந்திரம், ஊடக சுதந்திரம், ஆகியவை முடக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் நீக்கப்பட்ட அரசியலமைப்பின் 17 வது திருத்தத்தை மீண்டும் அமலுக்கு கொண்டுவருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
தன்னை பொது ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுப்பதற்காக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜாதிக ஹெல உறுமய கட்சியினர் உள்ளிட்ட தரப்பினருக்கு நன்றி கூறுவதாகவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் ஆகியவை கொண்ட நாடொன்றை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகவே தான் இந்த சவாலை ஏற்றுக்கொண்டதாவும் சிறிசேன கூறினார்.
இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி பதவியிலிருந்து நாட்டை காப்பதற்காகவே தான் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவை வழங்க தீர்மானித்ததாக தெரிவித்தார்.
இன்னும் பெரும் எண்ணிக்கையிலான ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்வரும் தினங்களில் தம்முடன் இணையவுள்ளதாகவும் அமைச்சர் சேனாரத்ன கூறினார்.
சந்திரிகா மீண்டும் தீவிர அரசியலில்
'கட்சியையும் பொதுமக்களையும் காப்பதற்காகவே மீண்டும் தீவிர அரசியலில்': சந்திரிகா
முன்னால் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவும் இங்கு கருத்து தெரிவித்தார்.
தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து மிகவும் கீழ்த்தரமான முறையில் தன்னை அகற்றியதாகக் கூறிய சந்திரிகா குமாரணதுங்க, கட்சியை மட்டுமன்றி பொதுமக்களையும் காப்பதற்காகவே மீண்டும் அரசியலுக்குள் பிரவேசித்ததாக தெரிவித்தார்.
தனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்து செய்வதற்கு பலதடவைகள் முயன்ற போதிலும், அதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நாடாளுமன்றத்தில் வழங்குவதற்கு எதிர்க்கட்சிகள் மறுத்துவிட்டதாக அவர் கூறினார்.

Post a Comment

0 Comments