சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மனு, இந்திய உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்த வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட ஜெயலலிதா ஜெயராமுக்கு நான்கு வருட சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அவர் 15 நாட்களாக தொடர்ந்தும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா ஜெயராம் உள்ளிட்ட நால்வருக்கும் பிணை வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை மனுவை கர்நாடகா உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது.
அதனைத் தொடர்ந்து தமிழக முன்னாள் முதல்வரின் சட்டத்தரணிகள் இந்திய உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் திகதி பிணை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஜெயலலிதா ஜெயராமுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்தும் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.


0 Comments