கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் படி ஆளும்
கட்சி வெற்றியடைந்துள்ள போதிலும் எதிர்கட்சிகள் பலமடைந்து வருவது
ஐனநாயகத்தைப் பொறுத்தவரை மிகவும் சாதகமாகத் தென்படுகின்றது என ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம்
தெரிவித்தார்.ஊவா மாகாண சபைத் தேர்தல் பெறுபேறுகள் வெளியாகியுள்ளதையடுத்து ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள அறிக்கையில்
மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள
இனவாத நடவடிக்கைகளைக் கண்டும் காணமல் மிகவும் அலட்சியப் போக்குடன் நடந்து
கொள்ளும் ஆட்சித் தலைவருக்கும் அரசாங்கத்திற்கும் எங்களது பலத்த
அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில
இலங்கை மக்கள் காங்கிரஸும் பதுளை மாவட்டத்தில் ஐனநாயக ஐக்கிய முன்னணியின்
இரட்டை இலைச் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டோம்.
முஸ்லிம்களுக்கு
இழைக்கப்படும் அநீதிகளை சுட்டிக்காட்டி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில்
நாங்கள் அரசாங்கத்தை மிகவும் கடுமையாக விமர்சித்தோம். அரசாங்கத்திற்குள்
உள்ள எதிர்க்கட்சியாகவே முஸ்லிம் காங்கிரஸ் இருந்து வருகின்றது. முஸ்லிம்
மக்களுக்கு எதிரான இனவாதச் செயல்களைப் பொறுத்தவரை அரசாங்கத்தின் நிலைப்பாடு
குறித்து முஸ்லிம்கள் ஏமாற்றத்தினதும் ஏக்கத்தினதம் விளிம்பில் இருப்பதால்
பதுளை மாவட்டத்தில் உலமாக்களும் பள்ளிவாசல் நிருவாகங்களும் ஊர் மக்களும்
விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில
இலங்கை மக்கள் காங்கிரஸையும் இணைத்துக் கொண்டு இந்தத் தேர்தலில் தனிச்
சின்னத்தில் களமிறங்கியது.
முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை
குறைவாகவுள்ள பதுளை மாவட்டத்தில் எமது வேண்டுகோளை ஏற்று இன்னும் ஏறத்தாழ
மூவாயிரம் வாக்குகளை எங்களுக்கு அளித்திருந்தால் மாகாண சபையில் உறுப்பினர்
ஒருவரைப் பெற்றிருப்போம். கடந்த தேர்தலை விட அதிக வாக்குகளைப்
பெற்றுள்ளோம். ஆயினும் அடுத்து வரும் ஒரு தேசிய மட்டத் தேர்தலில் நாம்
தீர்மானிக்கும் சக்தியாகக் திகழ்வதற்கான அறிகுறிகள் இந்தத் தேர்தலின்
பின்னணியில் புலப்படுகின்றது.
மலையக தோட்டத் தொழிலாளர்களைப்
பிரதிநிதிதிதுவப்படுத்தும் பிரதான தமிழ் கட்சிகளின் ஆதரவுடன் தான் ஆளும்
கட்சி இத்தேர்தலில் வெற்றி பெற்றி பெற்றிருக்கின்றது. அக்கட்சிகளின் ஆதரவு
இல்லையென்றால் ஆளும் கட்சியும் அரசாங்கமும் மிகப் பாரதுரமான பின்னடைவைச்
சந்தித்திருக்கும்.
எல்லா முஸ்லிம் அரசியல் கட்சிகளும் சிறுபான்மை
அரசியல் கட்சிகளும் குறுகிய வேறுபாடுகளை புறந்தள்ளி ஒற்றுமைப்படுவது
காலத்தின் தேவையாக மாறியிருக்கின்றது. விடிவை நோக்கிய பயணம் ஊவா
மாகாணத்திலிருந்து ஆரம்பித்திருக்கின்றது. இந்த தேர்தலில் எங்களுக்கு
தங்களது பெறுதியான வாக்குகளை அளித்த வாக்காளர் பெருமக்களுக்கும்
வேட்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கம் மனப் பூர்வமான நன்றிகளைத்
தெரிவித்துக்கொள்கின்றோம்" என்றார்.
நன்றி:விடியல்.


0 Comments