கேரள கால்பந்தாட்ட அணிக்கு ‘கேரளா பிளாஸ்டர்ஸ்’ என்று கிரிக்கெட் வீரரும் அந்த அணியின் சக உரிமையாளருமான சச்சின் டெண்டுல்கர் பெயர் சூட்டியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் பந்தயங்களைப்போல, கால்பந்தாட்டப் பந்தயங்களும் இந்தியாவில் நடைபெற உள்ளன.
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல் – ISL) என்று இந்தப் போட்டிக்கு பெயரிடப்பட்டுள்ளது.
இதில் கேரள கால்பந்தாட்ட அணியின் உரிமையாளர்களில் சச்சின் டெண்டுல்கரும் ஒருவர்.
கால்பந்தாட்ட அணிக்கு பெயர் சூட்டுவது குறித்து முடிவெடுக்க இன்று அவர் கேரளா சென்றிருந்தார்.
இதன்போது, கேரள கால்பந்தாட்ட அணிக்கு ‘கேரளா பிளாஸ்டர்ஸ்’ என்று பெயரிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்களிடம் இதுபற்றி சச்சின் கூறுகையில், “என்னை ஒரு கிரிக்கெட் வீரராகத்தான் நாட்டு மக்களுக்குத் தெரியும். ஆனால், எனக்கு ஹொக்கி, கால்பந்தாட்டம் மற்றும் டென்னிஸ் விளையாட்டுகளிலும் அலாதிப் பிரியம் உண்டு. என்னை மாஸ்டர் பிளாஸ்டர் என்று ரசிகர்கள், விளையாட்டு விமர்சகர்கள் செல்லமாக அழைப்பார்கள். இப்போது கேரள கால்பந்தாட்ட அணிக்கும் இந்தப் பெயர் பொருந்திப்போகிறது,” என்றார்.


0 Comments