கம்பளையில் கடந்த வாரம் இடம் பெற்ற ஒரு சம்பவம் கம்பளை பகுதி வாழ் முஸ்லிம்களையே திடுக்கிடவும் மெய்சிலிர்க்கவும் செய்துள்ளது.
கம்பளை நகரில் கம்பளைவெல பகுதியில் சில முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் விவகாரம் கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளது.
பால்ய நண்பர்களான இம் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட முரண்பாட்டிற்கும் வாய்த்தர்க்கத்திற்கும் பிரதான காரணம் காதல் விவகாரம் என்றும் தெரியவருகின்றது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையுடன் பாடசாலைக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்ட 16 வயது நிரம்பிய இளைஞர்கள் மத்தியிலேயே இம்மோதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவ தினம் இரவு 7 மணியளவில் தனது இரு நண்பர்களுடன் மற்றுமொரு சகபாடியை சந்திக்கச் செல்வதாக வீட்டில் கூறி விட்டுச் சென்ற இளைஞனே கத்திக்குத்திற்கு ஆளாகியுள்ளார்.
நண்பர்கள் மத்தியில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் தாக்க முற்பட்ட போது காப்பாற்றச் சென்ற இளைஞனே முகத்தில் கத்திக்குத்திற்கு ஆளாகியுள்ளதாக பொ லிஸ் விசாரனைகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதில் மற்றொரு இளைஞனின் உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இச்சம்பவத்தில் கத்தி இவ்விளைஞனின் கண்ணை அண்டிய பகுதியை ஆழமாகப் ஊடுருவிப் பதம் பார்த்துள்ளது. இதனால் படுகாயமடைந்த இளைஞன் உடனடியாக கம்பளை போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
எனினும் கம்பளை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்தியர்களால் கண்ணை அண்டிய பகுதியில் பாய்ந்த கத்தியை அகற்ற மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.
இதனால் அவர் உடனடியாக கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு வைத்தியர்களால் கத்தி அகற்றப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த இளை ஞன் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகி ச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இச் சம்பவம் பெற்றோர்களுக்கு மிகப் பெரும் பாடத்தைக் கற்பித்திருக்கின்றது என்றால் மிகையாகாது. இன்றைய இளைஞர் யுவதிகள் மத்தியில் தாராளமாக கையடக்க தொலைபேசிகள் புழங்கும் சூழ்நிலையில் பெற்றோர்கள் பிள்ளைகள் விடயத்தில் அதிக கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
கடந்த வாரம் கம்பளையை அண்டிய புசல்லாவ பகுதியில் 16 வயது தமிழ் யுவதியொருவர் கையடக்க தொலைபேசியில் நீண்ட நேரம் உரையாடுவதைக் கண்டு தாய் கண்டித்ததன் காரணமாக சுருக்கிட்டு தனது வாழ்வையே மாய்த்துக் கொண்டாள். இச்சம்பவத்திற்கும் காதல் விவகாரமே காரணமெனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த சில வருடங்களில் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம் யுவதிகள் சிலர் மாற்று மத இளைஞர்களுடன் செல்வதற்கு இருந்த காரணங்களை தேடிப்பார்த்த போது நகரங்களில் நடைபெறும் டியூசன் வகுப்புக்களும் இளைஞர் யுவதிகளின் கைகளில் புழங்கும் கையடக்க தொலைபேசிகளுமே பிரதான காரணங்களாக இருந்துள்ளதாக சமூக ஆர்வலரொருவர் கவலையுடன் தெரிவித்தார்.
இவ்வாறான சம்பவங்களை வெறும் செய்திகளாக மாத்திரம் கருதி மறந்து விடாது இளைஞர் யுவதிகளை நல் வழிப்படுத்த வேண்டியது பெற்றோர்களினதும் ஆசிரியர்களினதும் உலமாக்களினதும் சமூகத் தலைவர்களினதும் கடப்பாடாகும்.

0 Comments