பங்களாதேஷில் இடம்பெற்ற இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில்
சம்பியனான இலங்கை அணி வீரர்களுக்கு இன்று மகத்தான வரவேற்பளிக்கப்படவுள்ளது.
18 ஆண்டுகளுக்குப் பின்னர் உலகக் கிண்ணத்தை மீளப் பெற்ற இலங்கை கிரிக்கெட்
அணியினர் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் கட்டுநாயக்க விமான
நிலையத்தை வந்தடையவுள்ளனர்.
விமான நிலையத்தில் வரவேற்கப்பட்ட பின்னர் திறந்த பஸ் வண்டியொன்றில்
ஏற்றப்பட்டு நீர்கொழும்பு பழைய வீதியின் ஊடாக மேள, தாளங்களுடன் கோலாகலமாக
காலிமுகத்திடலுக்கு அழைத்து வரப்படுவார்கள்.
அங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கிரிக்கெட் வீரர்களுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
சம்பியன் கிண்ணத்தை வென்ற இலங்கை அணிக்கு சர்வதேச கிரிக்கெட் சபை 14 கோடி
ரூபாவை பரிசாக வழங்கியிருக்கிறது. அத்துடன், மேலதிகமாக இலங்கை கிரிக்கெட்
சபை வீரர்களின் சாதனையைப் பாராட்டி மேலும் 20 கோடி ரூபாவை பரிசாக
வழங்கவுள்ளது.
இலங்கையின் கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் தடவையாக பெருந்தொகை பணம் கிரிக்கெட் அணிக்கு அன்பளிப்பாக கொடுக்கப்படவுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தவுடன் இலங்கை அணி வீரர்களை
கௌரவமாக வரவேற்கப்படுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ள மஹேல ஜயவர்தன மற்றும் குமார்
சங்கக்கார ஆகியோருக்காக இலங்கை கிரிக்கெட் சபை இன்னுமொரு விசேட கௌரவிப்பு
நிகழ்வினையும் ஒழுங்கு செய்யவுள்ளது.
20 ஓவர் போட்டியில் உலகில் முதல் தடவையாக 1000 ஓட்டங்களை பெற்ற சாதனையை மஹேல ஜயவர்தன பெற்றுள்ளார்.
இறுதிப் போட்டியில் குமார் சங்கக்கார அரைச் சதம் அடித்து சாதனை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
லசித் மலிங்க இலங்கை கிரிக்கெட் அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்ட இரண்டாவது
போட்டியிலேயே அவரது தலைமையிலான அணி உலக சம்பியனாகியது பாராட்டுக்குரிய
விடயமாகும்.

0 Comments