15 வயதுடைய சிறுமி ஒருத்தியை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச்
சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் கூறப்படும் சிறுமியின்
அக்காவின் கணவரைக் கைது செய்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
26 வயதுடைய சந்தேக நபர் சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நரக்களி எனும் பிரதேசத்தினைச் சேர்ந்த
சந்தேக நபர் கடத்தப்பட்ட சிறுமியின் மூத்த சகோதரியைத் திருமணம்
செய்திருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒக்டோபர் மாதம் சந்தேக நபர் தனது மனைவியின் வீட்டுக்கு
மனைவியுடன் வந்து தங்கியிருந்த சமயம் மனைவியின் தங்கையுடன் காதல் தொடர்பினை
ஏற்படுத்திக் கொண்டிருந்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து
தெரிவந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் சந்தேக நபர் மனைவியின்
சகோதரியுடன் பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியுள்ளார்.
இதன் பின்னர் இச்சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் கற்பிட்டி பொலிஸ்
நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபரும் சிறுமியும் கைது
செய்யப்பட்டுள்ளனர். சிறுமி வைத்திய பரிசோதனைக்காக கற்பிட்டி மாவட்ட
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை புத்தளம்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

0 Comments