Subscribe Us

header ads

ஆழிப்பேரலையின் ஆறாத வடுக்களோடு ஒன்பது வருடங்கள்

(V)
சுனாமியின் வரலாறு
 
2004 டிசம்பர் 26ஆம் திகதி இந்நூற்றாண்டின் மறக்க முடியாத ஒரு நாள். சுனாமிப் பேரலை என பெயர் சூட்டப்பட்டு உலகத்தையே அதிர வைத்த நாள். ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு உயிர்கள் கடலில் சங்கமித்த நாள். நம்மைக் கடந்து 9 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் அதன் வடுக்கள் மாறவில்லை. வேதனைகள் தொடர்கதையாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
 
அந்நாளின் பின்னர் இந்ந மண்ணில் பிறந்தவர்கள் அந்த நாள் பற்றியும் சுனாமிப் பேரலை மனித வாழ்வில் ஏற்படுத்திய காயங்கள், அதன் வடுக்கள் பற்றியும் அறிந்து கொள்வதும் அவசியம்தான்.
 
அந்தவகையில், சுனாமி என்பது ஜப்பானிய மொழியில் உள்ள வார்த்தை சுனாமி தான் சுனாமி. சு என்றால் துறைமுகம், சுனாமி என்றால் பேரலை என்று பெயர். சுனாமி என்பது துறைமுகப் பேரலை. சில நிமிடங்கள் முதல் சில நாட்கள் வரை கூட அதுவும் பல்லாயிரக்கணக்கான இராட்சத அலைகளை உருவாக்கக்கூடியதுதான் இந்தச் சுனாமி.
பூகம்பத்தால் சுனாமி ஏற்படுகிறது. அதாவது பூகம்பம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து அழிகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழ்பகுதி பாதிக்கப்படுகிறது. மலையில் வந்தால் மலையில் எரிமலையாக உருவெடுக்கிறது.
 
பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பிளேட்தான் இருந்தது. அதன் மீதுதான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாக பிரியஇபிரிய அதன் தட்ப, வெப்ப,இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல்வேறு பிளேட்கள் உருவாகின. இந்தப் பிளேட்கள் மீதுதான் ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த பிளேட்கள்தான். இதைத்தான் டெக்டானிக் பிளேட்கள் என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
 
யுரேஷியன் பிளேட், ஆஸ்திரேலியன் பிளேட் இரண்டும். இந்தோனேசியாவின் வடக்கே சுமாத்ரா தீவில் மோதியது. அதனால் பூகம்பம் ஏற்பட்டது. அதன் அலைகள் தான் இந்துக்கடலில் சுனாமிப் பேரலைகளை ஏற்படுத்தியது. இவ்வாறே 2004.12.26ஆம் திகதி சுனாமி ஏற்பட்டது.
 
2004ஆம் டிசம்பர் மாதம் 26ம் திகதி இந்தோனேசியாவின் சுமாத்திரவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் உருவான சுனாமிப் பேரலை, இந்தோனேசியாவை மாத்திரமல்லாது இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மாலைதீவு, பங்களாதேஷ் என ஏறக்குறைய 12 நாடுகளின் கரையோரப் பகுதிகளை அழித்தது. சுமார் 174,000 உயிர்களை இந்தச் சுனாமி பேரலைகள் காவுகொண்டது.
 
சர்வதேச புள்ளிவிபரங்களின்படி சுனாமியினால் அதிகளவு உயிர் காவுகொள்ளப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தோனேசியாவே உள்ளது. இந்தோனேசியாவில் 126,473 பேரையும், இந்தியாவில் 10, 749 பேரையும் தாய்லாந்தில் 5,595 பேரையும் சுனாமிப் பேரலைகள் காவுகொண்டன. இலங்கையில் சுனாமியினால் உயிர் இழந்தவர்கள் மற்றும் காணாமல்போனோரின் மொத்த எண்ணிக்கை 36,594 ஆகும்.
 
இலங்கையின் வடக்கு, கிழக்கு தென், மேல்இ வடமேல் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்கள் சுனாமியால் பலமாகத் தாக்கப்பட்டன.
 
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, கம்பஹா, புத்தளம்,கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்களின் கரையோரப் பிரதேசங்கள் சுனாமிப் பேரலையினால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டன.
 
புள்ளிவிபரங்களின்படி மாவட்ட மட்டத்தில் உயிர் இழந்தோர் மற்றும் காணாமல் போனோரின் மொத்த எண்ணிக்கையைப் பார்க்கின்றபோது தென் மாகாணத்தின் காலி மாவட்டத்தில் 1785பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 1102 பேரும் மாத்தறை மாவட்டத்தில் 1153பேருமாகவும் வட மாகாணத்தின் யாழ்.மாவட்டத்தில் 901 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 06பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2652 பேருமாக காணப்படுகின்றனர்.
 
சுனாமிப் பேரலையினால் கிழக்கு மாகாணம் பாரிய அழிவைச் சந்தித்தது. புள்ளி விபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி கிழக்கு மாகாணத்தில் உயிர் இழந்தோர் காணாமல்போனோர் எண்ணிக்கையானது அம்பாறை மாவட்டத்தில் 4216 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1756 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 761 பேரும் உயிர் இழந்தும் காணாமலும் போயுள்ளனர்.
 
கிழக்கு மாகாணம்
 
சுனாமியினால் பாதிக்கப்பட்ட 13 மாவட்டங்களிலும் அதிகளவிலான இழப்பை எதிர்கொண்ட மாவட்டம் அம்பாறை மாவட்டமாகும் அதிலும் கல்முனைத் தேர்தல் தொகுதியின் கரையோரத் தமிழ், முஸ்லிம் மக்களே அதிகளவு பாதிக்கப்பட்டனர்.
தொகை மதிப்பீட்டுப் புள்ளி விபரத்திணைக்களத்தின் புள்ளி விபரங்களின் படி அம்பாறை மாவட்டத்தில் சுனாமிப் பேரலையினால் 21,201 வீடுகள் முற்றாகவும் பகுதியாகவும் சேதமடைந்தது. இதில் அதிகளவு பாதிக்கப்பட்ட வீடுகளைக் கொண்ட பிரதேசமும் கல்முனைப் பிரதேசம்தான்.
 
இக்கல்முனைப் பிரதேசத்தின் முஸ்லிம் மற்றும் தமிழ் கிராமங்களில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி மீள் குடியேற்ற வீட்டுத்தொகுதி, கல்முனைக்குடி கிறீன் பீல்ட் சுனாமி மீள் குடியேற்ற வீட்டுத் தொகுதி மற்றும் பாண்டிருப்பு, சுனாமி மீள் குடியேற்ற வீட்டுத் தொகுதி என்பவற்றைக் குறிப்பிடலாம்.
 
இந்த வீட்டுத்தொகுதிகள் தன்னார்வு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டன. இருப்பினும் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமையினால் இம்மீள் குடியேற்றத்தில் வாழும் மக்கள் சொல்லொண்ணா துயரங்களை கடந்த 9 வருடங்களாக எதிர்நோக்குகின்றனர். இக்குடியேற்றத்திட்டங்களில் குடியிருக்கும் சிறார்களுக்கு நிரந்தர பாடசாலையோஇ நூலகமோ விளையாட்டு மைதானமோ அமைக்கப்படவில்லை.
 
சாய்ந்தமருது வொலிவேரியன் வீட்டுத்திட்டத்தில் 200 குடும்பங்கள் வாழ்வதற்கான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும், இவ்வீட்டுத்திட்டத்தில் அடிப்படை வசதிகள் சரியாக வழங்கப்படவில்லை. கல்முனைக்குடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கிறீன் பீல்ட் வீட்டுத்தொகுதி மக்கள் குடியிருப்பதற்குரிய வசதிகளுடன் கொண்டதாக அமைக்கப்படவில்லை என இம்மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
 
இவ்வீட்டுத்தொகுதியிலுள்ள சில வீடுகளுக்கு இன்னும் அடிப்படை வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
 
இவ்வாறே பாண்டிருப்பு மற்றும் காரைதீவு பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீட்டுத்தொகுதிகளின் நிலைமைகளும் உள்ளன. இவ்வாறான நிலைதான் வடக்கு மற்றும் கிழக்கில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்தொகுதிகளின் நிலைமை காணப்படுகிறது. அதுமாத்திரமின்றி, வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசத்தின் சில பிரதேசங்களில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் நிரந்தர வீடுகள் இல்லாமல் தகரக் கொட்டில்களில் வாழ்வதையும் காணமுடிகிறது.
அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் சுனாமியினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்காக அக்கரைப்பற்று பிரதேசத்துக்குரிய நுரைச்சோலையில் சவுதி அரசாங்கத்தினால் 500 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.
 
இருப்பினும்இ இவ்வீடுகளைப் பகிர்ந்தளிப்பதில் உள்ளூர் அரசியல் அதிகாரத்தரப்பினரிடையே போட்டிகள் நிலவின. இப்போட்டிகளின் காரணமாக ஏற்பட்ட இழுபரி நிலையினையடுத்து, பேரினவாதம் பாதிக்கப்படாத மக்களுக்கும் வீடுகளை வழங்க வேண்டுமென்று கோஷங்களை எழும்பி அதில் வெற்றியும் கண்டது. இந்த வீட்டுத்தொகுதி பகிர்ந்தளிப்பு தொடர்பில் நீதி மன்றம் வரை சென்ற பேரினவாதம் நீதி மன்றத் தீர்ப்பும் பெற்றுக்கொண்டது.
 
இவ்வீட்டுத்தொகுதிகள் மூவின மக்களுக்கும் வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை இவ்வீடுகள் பகிர்ந்தளிக்கப் படவில்லை. இது பற்றி சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுப்பதற்கு அதிகாரத்தரப்பினர் எவரினாலும் முயற்சி எடுக்கப்படவில்லை. வீடுகளைப் பெற்றுத்தாருங்கள் என பாதிக்கப்பட்ட மக்களால் இவ்வாண்டின் முற்பகுதியில் சாத்வீகப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அவை கூட கைகூடவில்லைஎன வீடுகளை எதிர்பார்த்திருப்போர் வேதனையுடன் கூறுகின்றனர்.
 
சுனாமிப் பேரலையானது இன,மதஇபிரதேச வேடுபாடுகள் பார்த்து பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மாறாக சகல இனத்தைச் சார்ந்த மக்களும் பிரதேசங்களும் சுனாமியினால் பாதிக்கப்பட்டனர். இருப்பினும், தெற்குப் பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை, அவர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம்இ முன்னுரிமை போல கிழக்கிலும் வடக்கிலும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்கள் தொடர்பில் செலுத்தப்பட்ட அக்கறையில் குறைபாடு காணப்படுவதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது. இதற்கு சிறந்த உதாரணமாக இருப்பது சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சவூதி அரசாங்கத்தினால் கட்டப்பட்ட நுரைச்சோலை சுனாமி மீள்குடியேற்ற வீடுகள் இன்னும் அந்த மக்களுக்கு வழங்கப்படாமையாகும்.
 
உண்மையில் இந்த வீடுகள் சென்றடையவேண்டியது. அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் வாழ்ந்த சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கேயாகும். ஆனால் கடலே இல்லாதஇ சுனாமியை நேரில் பார்த்திடாத அதன் ஒரு சதவீதப்பாதிப்பையும் எதிர்கொள்ளாதவர்களுக்கு இந்ந வீடுகள் பகிர்ந்தளிக்கப்படுவது மனச்சாட்சியுள்ளவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
 
சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 9 வருடங்கள் கடந்தும் இன்னும் ஆயிரமாயிரம் பேர் அது ஏற்படுத்திய வரலாற்று வடுக்களோடு வாழ்ந்து கொண்டிருப்பது வேதனையளிக்கக் கூடியது. சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்கள் அடைந்த பலாபலன்களை விட எவ்வித பாதிப்புக்களையும் எதிர்கொள்ளாதவர்களே அதிகளவில் நன்மையடைந்தார்கள் என்று சொல்லப்படுவதில் நிதர்சனமான யதார்த்தம் உள்ளது.
 
வசதியோடு வாழ்ந்தவர்கள் ஏழைகளாக்கப்பட்ட அதேவேளை, பணத்தை காணாதவர்கள் பலர் சுனாமியால் பணக்காரர்களாக மாறினர். அதனால்தான் இந்த தங்கச் சுனாமி மீண்டும் ஒருமுறை வரமாட்டாதா என்று அங்கலாய்த்தவர்கள் அதிகம் பேர் என பலர் கூறியதைக் கேட்க முடிகிறது.
 
சுனாமி ஏற்பட்டு ஆண்டுகள் ஒன்பது உருண்டோடிவிட்டன. ஒரு தசாப்தத்தைத் தொட்டுவிட்டது. இருப்பினும் சுனாமியின் பாதிப்புக்களைச் சுமந்து வாழ்பவர்கள் பலரின் வாழ்வு இன்னும் ஒளிமயமாக வில்லை. அவர்கள் இன்னுமே வேதனைகளைச் சுமந்துகொண்டே வாழ்கிறார்கள். இவர்களின் வாழ்வு ஒளிமயமாக வேண்டும். அவர்களின் ஏக்கங்கள் மறைந்து, 10ஆவது ஆண்டிலாவது துயரமில்லாத வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்க வேண்டும். சுனாமி ஏற்படுத்திய காயங்கள் அவர்களிடமிருந்து மாற வேண்டும்.
அதற்காக என்னென்ன நடவடிக்கைகள் யார் யார் செய்ய வேண்டுமோ, யாரார் அதற்கான கடப்பாட்டில் உள்ளார்களோ அவர்கள் அவற்றை நிறைவேற்றி வைக்க வேண்டும். அதன் மூலம் சுனாமியினால் உண்மையாகப் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வு புதுப்பொழிவு பெறவேண்டும். அவையே காலத்தின் தேவையாகவும் மனிதாபிமானத்தை நேசிப்போரின் அவாவாகவும் இருக்கிறது.

Post a Comment

0 Comments