பாகிஸ்தான் அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.
டுபாயில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்போட்டி இறுதிவரை விறுவிறுப்பாக நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 284 ஓட்டங்களைப் பெற்றது. அஹமட் ஷேஹாட் 124 ஓட்டங்களைப் பெற்றார். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தனது 4 ஆவது சதத்தை பெற்ற ஷேஹாட்டின் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
குமார் சங்கக்கார 67 பந்துகளில் 58 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 57 பந்துகளில் 44 ஓட்டங்களையும் பெற்றனர். திலகரட்ன தில்ஷான் 40 ஓட்டங்களைப் பெற்றார். நுவன் குலசேகர 26 பந்துகளில் 32 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
இலங்கை அணி 6 பந்துகளில் 4 ஓட்டங்களை மாத்திரமே பெறவேண்டியிருந்தபோது, அணித்தலைவர ஏஞ்சலோ மெத்தியூஸ் 44 பந்துகளில் 47 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
எனினும் திமுத் கருணாரட்ன பந்துகளில் 12 ஆட்டமிழக்காமல் 16 ஓட்டங்களையும் சச்சித்ர சேனநாயக்க 3 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 6 ஓட்டங்களையும் பெற்று அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.
5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் தற்போது இரு அணிகளும் 1:1 விகிதத்தில் சமநிலையில் உள்ளன. 3 ஆவது போட்டி 22 ஆம் திகதி ஞாயிறன்று சார்ஜாவில் நடைபெறவுள்ளது.


0 Comments