உலக அரங்கில் பிரமிப்பை ஏற்படுத்தி எதிர்பார்ப்புகள் பலவற்றைச் சுமந்து கடந்த 5ஆம்
திகதி இந்தியாவின் பெருமைகளை மங்களமாக வானுயர்த்திச் சென்றது அந்நாட்டின் மங்கள்யான் விண்கலம்.
உலக நாடுகளில் ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய விண்வெளி அமைப்பு ஆகியன மட்டுமே இதுவரையில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தினை வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. இந்நிலையில் இப்பெருமையை உலகில் 4ஆவது நாடாகவும் ஆசியாவில் முதல் நாடாகவும் இந்தியா பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் 450 கோடி இந்திய ரூபா செலவில் "மார்ஸ் ஓபிடெர் மிஷன்' திட்டத்தின் கீழ் இந்த மங்கள்யான் ஏவப்பட்டுள்ளது. இது உலகில் மிகக்குறைந்த செலவில் உருவான செய்மதித் திட்டமாகும்.
மங்கள்யான் விண்கலம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள
ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதிஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. சி- 25 ரொக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதிஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. சி- 25 ரொக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
சுமார் 1500 கிலோ கிராம் நிறையுடை விண்கலத்தை சுமந்து செல்லும் ஆற்றல்மிக்க இந்த ரொக்கெட்டினால் சுமார் மணிக்கு 40 ஆயிரம் கிலோ மீற்றர் வேகத்தில் செவ்வாயை நோக்கி விண்கலத்தினை செலுத்தும் ஆற்றல் அற்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மங்களமாக அமைந்த மங்கள்யானின் பயணம்
மங்களமாக அமைந்த மங்கள்யானின் பயணம்
எனவே பூமியைச் சுற்றி படிப்படியாக வேகத்தை அதிகரிக்க செய்து வெவ்வேறு ஓபிடெல்களை அடைந்து வேகம் அதிகரிக்கப்பட்ட செவ்வாயை நோக்கிச் செலுத்தப்படும். அதாவது ஊசல் வேகத்தை அதிகரிப்பது போல. இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால் ஊஞ்சலின் வேகத்தை எவ்வாறு அதிகரிக்கிறோமோ அதே பாணியில் இந்த ரொக்கெட் தனது வேகத்தை அதிகரித்துக்கொள்ளும்.
இதே முறையிலே 2008ஆம் ஆண்டு சந்திராயன் விண்கலத்தினை இந்தியா
செலுத்தியிருந்தது. இது அமெரிக்கக் கணித நிபுணரான பெல் புரூனோ என்பர்
உருவாக்கிய முறைமையாகும். சந்திரனுக்கு அல்லது செவ்வாய்க்கு ஆளில்லாத விண்கலத்தை அனுப்புவதற்கு மட்டுமே இந்த முறை பொருத்தமாகும்.
கட்டக்கட்டமாக வேகத்தை அதிகரிக்கும் திட்டத்தில் இஸ்ரோ சற்று பின்னடைவை எதிர்நோக்கியது. காரணம் சீராக ஓபிடெல் நீள்வட்டப்பாதையை அதிகரித்து 78,722 கி.மீ தூரத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது எஞ்சினில் சிறிய கோளாறு ஏற்பட்டது.
பின்னர் இதனை 5 முறை முயற்சித்து சரிசெய்து 118,642 கி.மீ தூரத்திற்கு
நகர்த்தியுள்ளதாக இஸ்ரோ அமைப்பின் தலைவர் ஆர். ராதாகிருஷ்ணன் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். தற்போது முழுமையான கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக உள்ளது. டிசம்பர் மாதம் 1ஆம் திகதி மங்கள்யான் செவ்வாய் கிரகத்துக்கான பாதையில் தனது பயணத்தை ஆரம்பிக்கும் எனக் குறிப்பிட்டார்.
ரஷ்யா, அமெரிக்கா ஏவும் ஏவுகணைகள் ஓரிரு சுற்றிலேயே செவ்வாயை நோக்கி பயணமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
11 மாதங்கள் பயணம் மேற்கொண்டு செவ்வாய் செல்லும் மங்கள்யான்,
தரையிறக்கப்படமாட்டாது. செவ்வாய் ஆராய்ச்சியில் அதிகபட்சமாக செயற்படும் விண்கலம் அமெரிக்காவின் கியூரியோசிட்டி ஆகும்.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள், வளிமண்டலம் மற்றும் கனிம வளங்கள் ஆகியவற்றை ஆராய்வதற்காகவே மங்கள்யான் புறப்பட்டுள்ளது. இப்பயணம் வெற்றிபெற்றால் இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் தலை நிமிர்ந்து நிற்கும்.
கீரைக்கடைக்கு எதிர்க்கடையா?சாதக பாதக விமர்சனங்கள்
ஆனால் இந்தியாவில் சுகாதாரம், உள்நாட்டு பிரச்சினைகள், பொருளாதாரம் என ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. இவற்றுக்கிடையில் பல்வேறு
பிரச்சினைகளுக்கு மத்தியில் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகள் இந்தியாவுக்கு அவசியமா என மேற்குலக விமர்சகர்கள் தகவல் வெளியிட அவர்களின் அடிபொடிகளும் இதனை பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.
செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இதுவொரு பாடவிதான செயற்பாடு எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
விண்வெளி ஆய்வுகளின் முன்னோடியான ரஷ்யாவினை எதிர்த்து அரசியல்
நோக்கத்திற்காகவே அமெரிக்க விணவெளி ஆய்வினை ஆரம்பித்தது.
1957ஆம் ஆண்டு முதல் விண்வெளி ஆய்வுகளில் சாதனை படைக்க ஆரம்பித்த ரஷ்யாவை பின்தள்ள வேண்டும் என்ற போட்டியிலேயே 1961ஆம் ஆண்டு ஜோன் எப். கென்னடி "மனிதனை சந்திரனுக்கு அனுப்புவோம்' என சூளுரைத்தார்.
பின்னர் 1969ஆம் ஆண்டில் அதனை சாதித்த அமெரிக்கா விண்வெளி ஆய்வில் இன்று பல்வேறு பிரச்சினைகளால் துவண்டுகிடக்கும் ரஷ்யாவை பல படி முன்னேறியுள்ளது.
இதுபோன்றே செவ்வாய் ஆராய்ச்சியில் தோல்வியுற்றுள்ள ஆசிய நாடுகளான ஜப்பான் மற்றும் சீனாவை தோற்கடித்து ஆசியாவில் பலம்பெறும் இந்தியாவின் அரசியல் போட்டியே இந்த மங்கள்யானும் விண்வெளி ஆய்வுகளும். இப்போட்டி ஆரோக்கியமானது. அது மனித குலத்தின் பாரிய வளர்ச்சிக்கு வித்திடும் என மற்றுமொரு சாரார் இந்தியாவுக்கு ஆதரிக்கவும் தவறவில்லை.
ஜப்பான் 2003ஆம் ஆண்டும் சீனா 2011ஆம் ஆண்டும் செவ்வாய்க்கு விண்கலத்தினை செலுத்தியது. ஆனால் இலக்கை அடையாது அத்திட்டம் அந்நாடுகளுக்கு தோல்வியை தந்தது
வினைத்திறன்மிக்க இந்திய ஆய்வுகள்
இதேவேளை, ஆற்றல் குறைந்ததாகவும் இருந்தாலும் வினைத்திறன் மிக்கதாக ரொக்கெட்டுகளை வடிவமைத்துள்ள இஸ்ரோ அமைப்பு, ரொக்கெட் விடயத்தில் பல மடங்கு பின்னிடைவில் இந்தியா இருந்தாலும் 1993ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் ஒரு முறையே இஸ்ரோ ரொக்கெட் ஏவுதலில் தோல்வி கண்டுள்ளது.
செலவு குறைந்த விண்வெளித் திட்டங்களையும் இந்தியா முன்னெடுக்கின்றது. தொடர்ந்து பல விண்வெளித் திட்டங்களையும் செயற்படுத்த காத்திருக்கிறது.
இந்நிலையில் சவால்களைச் சுமந்து சென்றுள்ள மங்கள்யான் பலமா? அல்லது பலவீனமா? என இந்தியா மட்டுமல்ல விண்வெளி ஆர்வலர்களுடன் உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது.




0 Comments