Subscribe Us

சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி


மேற்கிந்திய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும் 126 ஓட்டங்களால் வென்றுள்ளது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இத்தொடரில்  இந்திய அணி 2:0 விகிதத்தில் வென்றுள்ளது.

இப்போட்டியுடன் இந்திய கிரிக்கெட் சாதனைச் சிகரமான சச்சின் டெண்டுல்கரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

40 வயதான சச்சின் டெண்டுல்கர் 200 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய நிலையில் ஓய்வு பெற்றுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி 182  ஓட்டங்களுடன் சுருண்டது.

 பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி  495 ஓட்டங்களைக் குவித்தது.  சத்தீஸ்வர் புராஜா 113 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 111 ஓட்டங்களையும் சச்சின் டெண்டுல்கர் 74 ஓட்டங்களையும் பெற்றனர்.

நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய அணி அன்றைய ஆட்டமுடிவின்போது 3 விக்கெட் இழப்புக்கு 43 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. போட்டியின் 3 ஆவது நாளான இன்று அவ்வணி 187 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய பந்துவீச்சாளர்களில் பிரக்ஜன் ஓஜா 49 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும் ரவிச்சந்திரன் அஸ்வின் 89 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக பிரக்யான் ஓஜாவும் சுற்றுப்போட்டியின் ஆட்டநாயகனாக ரோஹித் சர்மாவும் தெரிவாகினர்.

இப்போட்டியின் பின் இந்திய அணி வீரர்கள் சச்சின் டெண்டுல்கரை தோளில் சுமந்தவாறு மைதானத்தை வலம் வந்தனர். சச்சின் மனைவி அஞ்சலி, மகன் அர்ஜூன், மகள் சாரா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





Post a Comment

0 Comments