கடற்குதிரை என்பது கடலில் வாழும் ஒரு வகை மீனாகும். பிற
மீன்களைப் போலவே இதற்கும், செவுள்களும், துடுப்புகளும் உள்ளன. எனினும் இது
மீனைப் போல் வடிவம் கொண்டதன்று.
கடல் குதிரைகளின் வால் குரங்கின் வால் போல நீண்டும்,சுருண்டும்
காணப்படுகிறது. இந்த வாலின் மூலம் கடற்தாவரங்கள், கடற்பஞ்சுகள் போன்றவற்றை
பற்றிக்கொண்டு இருக்குமாம்.உடலமைப்பைப் பொறுத்தவரை நன்கு நீண்டு
வளையங்களால் அமைந்தது போன்றும் வாய் நீண்டு குழல் போலவும் மார்புப் பகுதி
சற்று அகன்று விரிந்தும் காணப்படுகிறது. உடலில் பக்கவாட்டுக் கோடுகள்
மற்றும் நீண்ட புள்ளிகள் தென்படுகின்றன. சுமார் 6 செ.மீ முதல் 17 செ.மீ வரை
நீளமும் எடை 4 கிராம் முதல் 14 கிராம் வரையும் இருக்கிறது. இலங்கைக்
கடற்பரப்பில் காணப்படும் கடற்குதிரைகள் பொதுவாக ஆறு சதம மீற்றர்
நீளமுள்ளனவாக இருந்தபோதிலும், இலங்கையின் கற்பிட்டி பகுதியில் பிடிக்கப்பட்ட கடற்குதிரை 11 அங்குலம்
(27 சதம மீற்றர்) நீளமானதாகக் காணப்பட்டது. முதுகுத் துடுப்பினைப்
பயன்படுத்தி மெதுவாக நீந்தியும் பெரும்பாலும் குதித்துக் குதித்தும்
செல்கின்றன. பிற விலங்குகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கடற்
தாவரங்களுக்குள் மறைந்து கொள்கின்றன. கண்கள் சிறிதாக இருந்தாலும் எந்தப்
பக்கம் வேண்டுமானாலும் திருப்பிக் கொள்ளும் வசதியுடையதாகவும் உள்ளது.
தனக்குத் தேவையான மிதவை நுண்ணுயிரிகளை உறிஞ்சி வடிகட்டி உண்ணும்
தன்மையுடையது.பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை (200) ஆண்களின் வால்
பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும். அதனை ஆண்
கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து
குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. குஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல் 100 வரை
இருக்கும். பிறக்கும் குஞ்சுகளின் நீளம் ஏறத்தாழ ஒரு செ.மீட்டராக
இருந்தாலும் பெற்றோரின் பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும்.


0 Comments