இயற்கை வளங்களும் குடிநீரும் இல்லையென்றால் மக்கள் கொத்துக் கொத்தாக பட்டினியில் இறந்திருப்பார்கள்!
கோட்பய ராஜபக்ஷ எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தவர் என்றாலும் அவரது வருகைக்கு முன்னரே நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்தது.
இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியிற்கு நிகராக உள்நாட்டு வெளிநாட்டு கடன்கள் இருந்தன.
சுமார் 65 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த வெளிநாட்டுக் கடனை வட்டியும் முதலுமாக செலுத்த வருடாந்தம் எமக்கு 5 பில்லியன் டாலர்கள் தேவைப்பட்டன.
தேசிய பிராந்திய பூகோல அரசியல் நலன்களுக்காக முறைகேடாக கையாளப்பட்க உள்நாட்டு யுத்தத்திற்காக மட்டும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் 200 பில்லியன் அமெரிக்க டாலர்களை விரயம் செய்துள்ளன.
2015 ஆம் ஆண்டு ஆட்சியை பொறுப்பேற்ற நல்லாட்சி அரசும் சர்வதேச நாணய நிதியத்திடம் நான்கு பில்லியனை கடனாக படிப்படியாகப் பெற்ற அதேவேளை மக்களை குசிப்படுத்துவதற்காக கடன் சுமையை மேலும் அதிகரித்தது.
அதற்கு முன்னர் 10 வருடங்கள் ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்ஷ அரசு இறுதிக்கட்ட யுத்தம் என்றும் பாரிய அபிவிருத்திகள் என்றும் சீனா இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வர்த்தகக் கடன்களை பெற்றமையால் அதற்கு முன்னர் சந்திரிக்கா ஆட்சியில் இருந்த கடன் தொகை இரட்டிப்பாகியது.
உள்நாட்டு பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவென பணத்தை அச்சிடவும் பிணைமுறிகளை விற்கவும் அவற்றில் பாரிய மோசடிகள் செய்யவும் தலைப்பட்டதால் பணவீக்கம் அதிகரித்து விலைவாசிகள் உயர்ந்து செல்ல ஆரம்பித்தன.
மத்திய வங்கி, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், திறைசேரி, தேசிய வங்கிகள், தேசிய கணக்காய்வு நிறுவனம், நுகர்வோர் அதிகார சபை ஆகிய பிரதான தேசிய நிறுவனங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்கொள்ளப்பட்ட அரசியல் தலையீடுகள் நாடறிந்த இரகசியங்களாகும்.
1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா ஆட்சியை பாரமெடுக்கும் போது 40 ரூபாயாக இருந்த அமெரிக்க டாலர் 2005 இல் மஹிந்த ஆட்சியை பாரமெடுக்கும் பொழுது 100 ரூபாயாக இருந்தது.
2015 ஆண்டு நல்லாட்சி அரசிடம் அதிகாரம் கைமாறும் போது டாலர் 144 ரூபாயாக இருந்து 2019 இல் 185 ரூபாயாக மாறியது.
இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட கொவிட் 19, கோட்டா அரசின் பிழையான பொருளாதாரக் கொள்கைகள் ஏற்கனவே இருந்த நெருக்கடிகளை தீவிரப்படுத்தியதால் 375 ரூபாய்கள் வரை சென்ற அமெரிக்க டாலர் இன்று புதிய மத்திய வங்கி ஆளுனரின் நடவடிக்கைகளால் செயற்கையாக ரூபாய் 300 ஆக வைக்கப்பட்டிருக்கிறது.
வெளிநாட்டுக் கடன்களை செலுத்த முடியாதென நாட்டின் வங்குரோத்து நிலையை அவர் பிரகடனப்படுத்தி இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதித்தமை இன்றைய ரணில் ராஜபக்ஷ அரசிற்கு சாதகமாக அமைந்துள்ளது.
அத்தோடு பாரிய கடப்பாடுகளுடன் கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிகளும் தற்காலிகமாக நிலைமைகளை சீர் செய்திருந்த போதும் மக்கள் மீது அதிகரித்த சுமைகள் ஏற்றப்பட்டுள்ளன.
கொவிட் 19 இற்கு பிறகு சுற்றுலாத்துறை படிப்படியாக வளர்ச்சி காண்பது, வெளிநாட்டு தொழிலாளர்களது வைப்பீடுகள் வழமைக்கு திரும்புவது போன்ற காரணிகளும் நாட்டின் தற்போதைய சாதகமான நிலைக்கு காரணமாக இருக்கிறது.
என்றாலும், நீறுபூத்த நெருப்பாக பொருளாதார நெருக்கடிகள் இருப்பதனை நாம் மறுக்க முடியாது, இன்றோ நாளையோ நாம் எமது உள்நாட்டு பிறநாட்டு கடன்களை வட்டியும் முதலுமாக செலுத்தியே ஆக வேண்டும்.
நாம் விவசாய நாடாக இருந்த போதும் வெங்காயமும் கிழங்கும் கோதுமை மாவும் சீனியும், பருப்பும் பூண்டும் பால்மாவும் ஏன் கேவலம் முட்டையும் இறக்குமதி செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
வானுயர விலைகளை கட்டணங்களை உயர்த்தி கேள்வியைக் குறைத்து வரிசைகளை குறைத்திருக்கிறோம், மத்திய தர வர்க்கமும் வறுமைக் கோட்டில் இருக்கிறது.
நாட்டைச் சூழ கடல் ஆனால் மீன்களை இறக்குமதி செய்கிறோம்.
சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளில் இறங்குவது இளைஞர்களின் பகல் கனவாகிப் போனது.
வருடாவருடம் சாதாரண தரம் எழுதும் சுமார் ஆறு இலட்சம் பேரில் சுமார் மூன்று இலட்சம் பேர்கள் நிபுணத்துவம் அற்ற பணிப் பெண்களாக தொழிலாளர்களாக மத்திய கிழக்கு செல்கின்றனர், உயர் தரம் சித்தியடைந்தாலும் 35000 பேருக்கே பல்கலைக் கழகங்களில் இடமிருக்கிறது, தேசிய சர்வதேச தொழில் சந்தைகளுக்கு ஏற்ற மனிதவள அபிவிருத்தியில் பின்தங்கி இருக்கிறோம்.
தற்போதைய ஊழல் மோசடிகள் நிறைந்த வங்குரோத்து அரசியல் கலாசாரம், அரச நிர்வாக யந்திரம், அவற்றை விஞ்சிய வர்த்தக மாஃபியா ஆகியவற்றை முற்றாக ஒழிக்கும் முழுமையான முறைமை மாற்றம் ஒன்றை நோக்கி நாட்டை நகர்த்தும் ஜனநாயக அரகலய மக்கள் எழுச்சி எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் மூலம் ஏற்படுத்தப்பட வேண்டும்!
தொடரும்...
மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
9.08.2024
0 Comments