Subscribe Us

header ads

சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும்; பிழைத்த பின் கைசேதப்பட்டு பயனில்லை. இம்முறையாவது சிந்திக்குமா சமூகம்

 


அடுத்த கணம் மரணம் சம்பவிக்கும் என்ற நிலையில் தனது நிலைப்பாடு எவ்வாறு அமையுமோ அவ்வாறே வாக்குரிமையை வாழ்நாள் கடமையாக கருதி நீதியாக நேர்மையாக அதிக பட்ச பொறுப்புணர்வுடன் ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும்.


வாக்குச் சாவடிக்குள் நீங்கள் எடுக்கின்ற முடிவு ஊரிலும், நகரிலும், மாநகரிலும் மாத்திரமன்றி நாட்டிலும் எதிர்கால சந்ததிகள் வாழ்விலும் நல்லதையோ கெட்டதையோ விளைவிக்கப் போகிறது.

வாக்கு என்பது “சாட்சியமாகும்”,
வாக்கு என்பது "அதிகாரமளித்தலாகும்"
வாக்கு என்பது “தெரிவு” ஆகும்,
வாக்கு என்பது “ஆயுதமாகும்”,
வாக்கு என்பது “தீர்ப்பு” ஆகும்,
வாக்கு என்பது “ வகிபாகம்” ஆகும்,
வாக்கு என்பது “துணைபோதல்” ஆகும்,
வாக்கு என்பது “சோதனை” ஆகும்,
வாக்கு என்பது மொத்தத்தில் “அமானிதமாகும்”.

இந்த அமானிதம் குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவோம்.

நாம் வாழுகின்ற தேசத்தில் அமைதி பாதுகாப்பு, சமாதானம், இனங்களுக்கிடையிலான நல்லுறவு, பொருளாதார சபீட்சம், உடகட்டமைப்பு வசதிகள், பொது சேவைகள்...

கல்வி, கலை, கலாசார பண்பாடுகளில் அபிவிருத்தி, ஊழல் மோசடிகளற்ற நல்லாட்சி, மனித உரிமைகள் மதிக்கப்படல், நீதி நிலைநாட்டப்படுவது, சுகாதாரம், சுற்றுச் சூழல் பேணிப் பாதுகாக்கப்படுவது, வறுமை ஒழிப்பு, மது போதை வஸ்துகள் ஒழிப்பு..

என எல்லோருக்கும் பொதுவான பொது வாழ்வின் சகல துறைகளிலும் நாம் போற்றுகின்ற உயரிய விழுமியங்களை கொள்கை கோட்பாடுகளை நியாய தர்மங்களை மேலோங்கச் செய்வது விதியாக்கப்பட்ட அறப்பணிகளாகும்.

அரசியல், ஆட்சி, அதிகாரம் என்பன அக்கிரமக் கார்களிடமிருந்து மக்களை மீட்பதற்கான போராட்டமாக இருத்தல் வேண்டும், வரலாறு நெடுகிலும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான தொடர்ந்தேர்ச்சியான சமர் ஆட்சி அதிகாரங்களில் இருந்து கொண்டு அநீதி அராஜகம் அடக்குமுறை அக்கிரமங்கள் புரிந்த சர்வாதிகாரிகளுக்கு எதிராக இடம் பெற்று வந்துள்ளதை நாம் நன்கு அறிவோம்.

சத்தியவழி நின்று அரசியல் எனும் மிகப்பெரிய அமானிதத்தை பேணிக்காப்பதில் வேட்பாளராயினும் வாக்காளராயினும் எமது வரலாற்றுக் கடமையினைச் சரியாகச் செய்தல் கட்டாயமாகும்!

தெளிவான தேசிய சமூக பார்வையும், கூட்டுப் பொறுப்பும், மூலோபாய திட்டமிடல்களும் இல்லாமல் பயணிக்கும் ஒரு சமூகம் அடுத்தடுத்த சமூகங்களை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை, அரசியலும் இராஜதந்திரமும் முஸ்லிம் சமூகம் பறிகொடுத்து பரிதவிக்கும் ஆயுதங்களாகும்…!

இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன்
18.01.2018 || மீள்பதிவு

Post a Comment

0 Comments