பங்களாதேஷ் முழுக்க ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு இணைய சேவை முடக்கப்பட்டு இருக்கிறது.எங்கும் பதட்டம், திரும்பிய பக்கம் எல்லாம் கலவரம். அரச தொலைக்காட்சி சேவையான BTV அடித்து நொறுக்கப்பட்டு இருக்க, ஏராளமான அரச அலுவலங்கங்கள் தீக்கிரையாகி இருக்கின்றன.இதுவரை நூற்றி ஐந்து பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்த போது ,ஜனாதிபதி மாளிகையில் புகுந்த போராட்டக்காரர்கள் நீச்சல் தடாகத்தில் புகுந்து குளியல் போட்ட காட்சிகளை அப்லோட் செய்திருக்கும் பங்களாதேஷ் மாணவர் ஃபேஸ்புக் பக்கங்கள்,இது போல பிரதமர் ஷேக் ஹசீனாவின் நீச்சல் தடாகத்திலும் நீந்த ஆர்வமாய் இருப்பதாக எச்சரிக்கை ஊட்டி இருக்கின்றன.
சந்தேகமே இல்லை. இடது ஒதுக்கீட்டுப் போராட்டம், படிப்படியாய்ப் பரிணாமம் பெற்று ' பிரதமரே! வீட்டுக்குப் போ ' என்று நிறம் மாறி இருக்கிறது.
அதென்ன இட ஒதுக்கீடு?
என்னதான் பங்களாதேஷ் ஆடை ஏற்றுமதியில் தன்னிகரற்ற ஸ்தானத்தில் திகழ்ந்தாலும், ஆசியாவிலேயே சீனாவுக்கு அடுத்தபடியான பொருளாதார வளர்ச்சி வீதம் என்று சொல்லிக் கொண்டாலும் எல்லாம் மேல் பூச்சு தான் .
மேலோட்டமாய்ப் பார்த்தால் பங்களாதேஷ் பிரஜை ஒருவரின் தலா வருமானம் பாகிஸ்தான், இந்தியா, இலங்கைப் பிரஜையின் தலா வருமானத்தை விட அதிகம். ஆனால் பங்களாதேஷில் வேலை பார்ப்போரில் ஆறு சதவீனமானோரின் தினசரி வருமானம் இரண்டு டாலர்கள்.ஆசிய அபிவிருத்தி வங்கியின் தரவுகளுக்கு அமைய பதினெட்டு சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கிறார்கள்.
புரியும்படி சொன்னால் ஒரு முன்னணி ஆடை ஏற்றுமதி தொழிற்சாலையில் மேனஜராகப்பட்டவர் எட்டு லட்ச ரூபாயைச் சம்பளமாய்ப் பெறும் போது, நாள் முழுக்க மெஷினில் ஆடைகளைத் தைக்கும் ஒரு யுவதி வெறும் இருபதாயிரத்தைச் சம்பளமாய்ப் பெறுகிறார்.பங்களாதேஷ் பற்றி வரும் பளபளப்பு ஜிகினாக்களின் உண்மைத்தன்மை இதுதான் .சமத்துவமற்ற பொருளாதாரக் கட்டமைப்புக்குள் ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிக் கொண்டு போகிறார்கள்.பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிக் கொண்டு செல்கிறார்கள்.
தனியார் நிறுவனங்களில் ஏற்றத்தாழ்வுகள் இப்படி பெருமூச்சுக்களை மட்டுமே விட்டுக் கொள்ளும்படி இருக்க, அரச தொழில் புரிவோருக்கு ஏராளமான சலுகைகளும், நிறைவான ஓய்வூதியமும் பாதுகாப்பும் இருக்கிறது.படிப்பு முடிந்ததும் ஒரு அரச தொழிலில் போய் உட்கார்ந்து கொள்வதுதான் பங்களாதேஷ் மாணவர்கள் பலரின் ஒரே லட்சியம்.இங்கே தான் விதி, இட ஒதுக்கீடு என்ற பெயரில் பந்தாட வருகிறது.
அரச தொழில்களில் நாற்பத்து நான்கு சதவீதம் தான் போட்டிப் பரீட்சைகள் மூலம் நிரப்பப் படுகின்றன.மீதி ஐம்பத்தாறும் கோட்டாதான்..அதாவது இட ஒதுக்கீடு..
இந்துக்கள் உட்பட சிறுபான்மையினருக்கு ஐந்து சதவீதம்,பெண்களுக்குப் பத்துச் சதவீதம்,பின் தங்கிய மாவட்டங்களிற்குப் பத்துச் சதவீதம், வலது குறைந்தோருக்கு ஒரு சதவீதம்,71ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு முப்பது சதவீதம்.
சிறுபான்மை, பெண்கள் போன்றோருக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் கோட்டா பற்றி மாணவர்களுக்கு எந்தக் கவலையுமில்லை. அவர்களின் ஆத்திரம் எல்லாம் சுதந்திரப் போராட்டக்காரர்களின் குடும்பங்களிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் முப்பது வீதத்திற்கு எதிராகத்தான்.
2018ம் ஆண்டும் இப்படி ஒரு மாணவர் எழுச்சி வெடித்த போது, 1972 முதல் அமுலில் இருந்த சுதந்திரப் போராட்ட கோட்டாவை ரத்து செய்தது ஹசீனா அரசு. இதற்கு எதிராய் உயர் நீதிமன்றமொன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட மீண்டும் கோட்டாவை அமுல்படுத்தச் சொல்லி இருக்கிறது நீதிமன்றம்.
கலவரத்தின் பின்னணி இதுதான்.
இப்போது தற்காலிகமாய் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்த போதிலும் பிரளயங்களுக்கு யாதொரு குறையுமில்லை.பிரதமர் ஹசீனா போராட்டக்காரர்களைத் 'தேசத் துரோகிகள்' என்று வர்ணித்து மேலும் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தி தேசப் பிரேமம், தேசத் துரோகம் என்ற பெயரில் ஆசியாவிற்கே உரித்தான கேடு கெட்ட அரசியலைச் செய்து கொண்டிருக்கிறார்.
முதலையும் மூர்க்கனும் மட்டுமல்ல ,ஹசீனாவும் கொண்டது விடா.2009 முதல் பதினைந்து வருடங்களாய்ப் பதவியில் இருக்கிறார் ஹசீனா.1996 - 2001 பதவிக்காலத்தையும் சேர்த்தால் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள்.சுதந்திரத்திற்குப் பின்னரான பங்களாதேஷின் சரித்திரத்தில் அநேகமான நல்லவைகள் ஹசீனாவின் காலத்தில் தான் நிகழ்ந்தன. மேலும் ஹசீனாவின் தந்தை முஜீபுர் ரஹ்மானின் அளப்பரிய பங்களிப்புத்தான் பங்களாதேஷை சுதந்திர நாடாக மாற்றியது. இதனாலோ என்னவோ ஒட்டுமொத்த பங்களாதேஷும் தன் அப்பன் சொத்து என்று நினைக்கிறார் அவர்.
தொடர்ச்சியாய் ஆட்சியில் இருக்கும் போது ஒருவித சைக்கோத்தனம் ஆட்சியாளர்களின் மண்டையில் பதிந்துவிடும்.எத்தனையோ மனித உரிமை ஆர்வலர்களை சிறைப்படுத்தி, ஊடகவியலாளர்களை ஒடுக்கி, தாராளமாய் தேர்தல் முறைகேடுகள் செய்தவாறு எதிர்க்கட்சிகளைச் சிதைத்து ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஹசீனா தன் ஆட்சியில் இப்படி ஒரு மாணவர் எழுச்சியைச் சந்தித்ததில்லை. மாணவர்கள் பிழைப்பார்களா, ஹசீனாவின் ஆட்சி பிழைக்குமா என்பதற்கான பதில் இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.
ஸபார் அஹ்மட்
0 Comments