Subscribe Us

header ads

பலஸ்தீன் மக்கள் ஏன் போராடுகிறார்கள்.

 


இதுவரை முன்வைக்கப்பட்டுள்ள அரபுலக சர்வதேச சமாதான முன்னெடுப்புகளின் படி 1967 ஆம் ஆண்டு எல்லைகளின் படியே சுதந்திர பலஸ்தீன் தாயகம் அலகுத்ஸ் (கிழக்கு ஜெரூஸலத்தை) தலைநகராகக் கொண்டு அமைதல் வேண்டுமென முன் மொழியப்பட்டுள்ளது.


ஆனால் அந்த குறைந்த பட்ச தீர்வையும் தரமறுக்கும் இஸ்ரேல் அந்தப் பகுதிகளிலும் சர்வதேச சட்டங்களை ஐ.நா தீர்மானங்களை மீறி சட்டவிரோத குடியிருப்புகளை அமைத்து ஆக்கிரமிப்புகளை தொடர்கிறது.

காஸாவிலும் மேற்குக் கரையிலும் வாழும் மக்களை பணயக் கைதிகள் போல் நடத்துவதனை உலகம் நன்கு அறியும், இஸ்ரேல் நினைக்கும் போதெல்லாம் எல்லைகளை மூடி உணவு மருந்துப் பொருட்கள் அத்தியாவசிய சேவைகளை துண்டித்து விடுவது உலகறிந்த விடயமாகும்.

நீர், மின்சாரம் என சகல பொது வசதிகளையும் துண்டித்து அடிப்படை மனிதாபிமான நடவடிக்கைகளையும் தடுத்து விடுவதனை சர்வதேச சமூகம் அறியாமல் இல்லை, அந்த ஒரு காரணமே அவர்களது சுதந்திர தாயகத்திற்கான போராட்டத்திற்கு போதுமான நியாயமாகும்.

அமெரிக்கா உட்பட நேச நாடுகளுடன் உதவியுடன் அதி நவீன ஆயுதங்கள் படைபட்டாளங்களுடன் சகல யுத்த தர்மங்களையும் சர்வதேச நியமங்களையும் சட்டங்களையும் மீறி இஸ்ரேல் செயற்படும் பொழுது தமது இருப்பிற்கான பாதுகாப்பிற்கான தாயக மீட்பிற்கான ஜீவமரணப் போராட்டத்தை அவர்கள் மேற்கொள்கிறார்கள்!

ஐ.நா பொதுச்சபை, பாதுகாப்புச் சபை, மனித உரிமைகள் ஆணையம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு கெடுபிடிகள், பலஸ்தீன் மக்கள் மீது கட்டவிழ்த்து விடும் அராஜகங்கள் திணிக்கும் யுத்தம் என்பவற்றிற்கெதிராக பல நூற்றுக்கணக்கான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ள போதும் அவற்றை அடாத்தாக பகிரங்கமாக மீறும் இஸ்ரேல் விடயத்தில் மாத்திரம் மேலாதிக்க சக்திகள் இரட்டை நிலைப்பாடுகளையே கொண்டுள்ளன!

ஐ.நா, ஐரோப்பிய யூனியன், அரபு லீக் உட்பட அனைத்து தரப்புக்களும் முன்மொழிந்துள்ள தீர்வை மையப்படுத்திய சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு ஸியோனிஸ இஸ்ரேல் உடன்பாடும் நிபந்தனையில் மாத்திரமே மோதல் தவிப்பும் சமாதான முன்னெடுப்புகளும் இடம்பெற வேண்டும்!

ஆனால், ஆக்கிரமிக்கப்பட்ட தமது நிலத்தில் ஒரு அங்குலத்தையும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் அந்த மக்களது உணர்வலைகள் இருக்கின்றன!

தமது தாயகத்தில் இஸ்லாமியர்கள் மாத்திரம் தான் வாழ வேண்டும் என அவர்கள் கோரவில்லை.

உண்மையான அமைதி சமாதானத்தை நேசிக்கும் தம்மோடு போர்புரியாத வேதத்தையுடைய அஹ்லுல் கிதாப்கள் எனும் யூத கிறிஸத்தவ மக்களும் அருகருகே அமைதியாக சமாதானமாக வாழ வேண்டும் என்று தான் அவர்கள் கோருகிறார்கள்.

ஸியோனிஸ தேசம் மேலைநாடுகளின் காலனித்துவ நலன்களைக் காப்பதற்காக மத்திய கிழக்கில் உருவாக்கப்பட்ட -1947 வரை உலக வரைபடத்தில் இருக்காத- சட்டவிரோத நாடாகும், ஸியோனிஸம் ஒரு சர்வதேச சதி வலைப்பின்னலைக் கொண்ட கோட்பாடாகும், அது முற்றுமுழுதாக அஹ்லுல் கிதாப் யூதர்களை பிரதிநிதித்துவம் செய்வதில்லை, ஆனால் கவசமாக கொண்டுள்ளது.

பலஸ்தீன் போராட்டம் வெறும் நிலத்திற்கான போராட்டம் மட்டுமல்ல அது ஆக்கிரமிக்கப் பட்டுள்ள முதலாவது இறையில்லம் பைதுல் மக்திஸை மீட்பதற்குமான அறப் போராட்டமுமாகும்.

பல்வேறு கொள்கை மற்றும் பிராந்திய அரசியல் வேறுபாடுகள் பிணக்குகளிற்கு மத்தியிலும் அரபு முஸ்லிம் உலகம் அடிப்படை விடயங்களில் ஒருமைப்பாட்டைக் கொண்டுள்ளன!

இலங்கை அரசு அணிசேரா கொள்கைகளின் நிலைப்பாட்டில் பலஸ்தீன் மக்களின் தாயகத்திற்கான போராட்டத்தை அங்கீகரிக்கும் வெளியுறவுக் கொள்கையை கொண்டுள்ளது.

பலஸ்தீன் தாயகத்தை 1970 களில் அங்கீகரித்து அதன் தூதரகத்தை நிறுவ சுதந்திர சதுக்கத்தில் கட்டடத்தையும் வழங்கியது.

அண்மைக்காலம் வரை இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளையும் இலங்கை கொண்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரபுலக மற்றும் சர்வதேச சமாதான முன்மொழிவுகளின்படி 1967 எல்லைகளில் குத்ஸை தலைநகராகக் கொண்ட சுதந்திர பலஸ்தீன் தேசம் உருவாக வேண்டும் என்ற நிலைப்பாட்டை இலங்கையும் கொண்டிருக்கிறது.

இலங்கையின் இந்த நிலைப்பாட்டின் காரணமாக அதனை அரபு முஸ்லிம் நாடுகள் தமது நட்பு நாடாக கருதுகின்றன!

1922 உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியுடன் அரபு முஸ்லிம் உலகின் உள்வீட்டு பிணக்குகள் பிரிவினைகள் முதலாம் இரண்டாம் உலகமகா யுத்த காலப்பிரிவு பூகோல பிராந்திய அரசியல் முதல் இன்றுவரையிலான அந்நாடுகளின் பிற்போக்கு, ஐக்கியமின்மை, மற்றும் மேலாதிக்க சக்திகளிற்கான சேவகம், காட்டிக் கொடுப்புகள் கையாலாகாத தன்மைகளின் காரணமாகவே இன்று பலஸ்தீன் மக்கள் தனித்து விடப்பட்டிருக்கிறார்கள்!

இலங்கை முஸ்லிம்களாகிய நாங்களும் பலஸ்தீன் மக்களின் தாயக மற்றும் அல்குத்ஸ் மீட்புப் போராட்டம் வெற்றி பெறப் பிரார்திக்கிறோம்!

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
09.10.2023

Post a Comment

0 Comments