நாம் தகவல் தொழின்நுட்ப உலகில் வாழ்கிறோம், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புதிய தலைமுறையினர் ஸைபர் உலகில் தான் அதிகம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொருவர் கரங்களிலும் ஒரு இன்டர்நெட் இணைப்புடன் கூடிய ஸ்மார்ட் போன் இருக்கின்றது, சிலர் அவற்றை தம் கப்டுப்பாட்டில் வைத்திருக்க பலரை அவை தம் கட்டுப்பாட்டில் கட்டிப் போட்டிருக்கின்றன.
உறவாடல்கள், உரையாடல்கள், சுக துக்கங்கள் முதற்கொண்டு கல்வி உயர்கல்வி, தொழில், கொடுக்கல் வாங்கல்கள், வியாபாரம், வர்த்தகம், பணப்பரிமாற்றம் என வாழ்வின் அனைத்து அமசங்களும் வர்சுவல் உலகில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன!
மனித நடத்தைகள் பெரும்பாலும் பெளதீக உறவுகளை விட மெய்நிகர் வர்சுவல் உறவுகளில் தங்கியிருக்கின்றன, பெற்றாருடன் வீட்டில் அமர்ந்திருக்கும் பிள்ளைகளும் இன்று அவர்களுடன் இல்லை, மூடிய அறைகளிலும் தனிமை இல்லை, பல கார்பரேட் நிறுவனங்களின் கொத்தடிமைகளாக ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் தொலைதூரம் தொலைந்து போகும் நிலையே காணப்படுகிறது.
வாழ்வெனும் சோதனைக்களத்தில் பெரும்பகுதி வர்சுவல் வாழ்வாக மாறிப்போயிருக்கின்ற நிலையில் நன்மை தீமைகள் பதிவேடுகளை இற்றைப்படுத்தும் ரகீப் அதீத் பணிகளும் எமது ஸைபர் உலக நடத்தைகளை பின்தொடர்வதை உணர முடிகிறது.
பெளதீக வாழ்வில் இறையுணர்வும், இறையச்சமும், ஆன்மீக பண்பாட்டு பக்குவமும், கற்பு நெறியும், ஒழுக்க விழுமியங்களும், ஹலால் ஹராம் பேணலும், நாகரீகமும், மானுட விழுமியங்களும், சமய கலாசார கட்டுக் கோப்புகளும் எவ்வளவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் பெருகின்றனவோ அவ்வளவிற்கு அவ்வளவு எமது ஸைபர் உலக நடத்தைகளிலும் முக்கியத்துவம் பெறுகின்றன.
பெளதீக வாழ்வில் தனிப்பட்ட குடும்ப சமூக சமய கலாசார ஆன்மீக பண்பாட்டு கட்டுக்கோப்புகளை கட்டுடைப்பது சிரமமாக இருந்தது, ஆனால் ஸைபர் வர்சுவல் உலகில் அசுர வேகத்தில் அவை இடம் பெறுகின்றன, வழமை போன்று நன்மையை ஏவுவதனை விடவும் தீமைகளை உரமூட்டி வளர்க்கின்ற சக்திகள் ஸைபர் உலகில் அதிகரித்த வலுவில் தொழில்பட்டுக் கொண்டிருக்கிறன.
ஆக, பெளதீக உலகில் நன்மையை ஏவுதலும் தீமையை தடுத்தலும் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதைவிடவும் பன்மடங்கு ஸைபர் வர்சுவல் உலகிலும் முக்கியத்துவம் பெறுவதனை நாம் அறிவோம்.
நவீன தகவல் தொழில் நுட்பம் மனித வாழ்வின் மேன்பாட்டிற்காக அபிவிருத்தியிற்காக கண்டுபிடிக்கப்பட்டவை அவற்றின் சாதகமான நேரிடையான பயன்பாடுகளை எமது ஈருலக வாழ்வின் ஈடேற்றத்திற்கும் பயன்படுத்தும் அதேவேளை அவற்றின் பாதகமான எதிர்மறையான பாதிப்புக்களில் இருந்து எம்மையும் எமது சந்ததிகளையும் பாதுகாத்துக் கொள்வதும் மிகப் பெரும் சவாலாகும், சோதனையாகும்.
தனிப்பட்ட, குடும்ப, சமூக, தேசிய, உலக வாழ்வில் நன்மையை தாமும் கடைப்பிடித்து ஏவுகின்ற, தீமையை தாமும் தவிர்ந்து தடுக்கின்ற ஒரு சிறந்த சமூகத்தின் பணி ஸைபர் வராசுவல் உலகில் பன்மடங்கு முக்கியத்துவம் பெறுவது போல் இலகுவாக்கப் பட்டுமிருக்கின்றது.
புனித ரமழானை எதிர் கொண்டுள்ள நாம் வர்சுவல் ஸைபர் உலக தஃவாவில் அழைப்பு பணிகளில் எமது புதிய தலைமுறையினருடன் உறவாடி உரையாடுகின்ற வழிமுறைகளை பொறிமுறைகளை ஊக்குவிப்புக்களை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
செயற்கை மதிநுட்பத்தை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது உலமாக்கள், கல்விமான்கள், சமூக சமய நிறுவனங்கள், மத்ரஸாக்கள் அழைப்பாளர்கள் என சகல தரப்புக்களும், துறைசார் நிபுணத்துவ அறிவு ஆற்றல் தகைமைகள் உள்ளோரை உள்வாங்கி யுகத்திற்கான புதிய யுக்திகளையும் உத்திகளையும் கண்டறிதல் காலத்தின் கட்டாய தேவையாகும்.
தொடரும்..
உங்கள் ஆத்மார்த்தமான பிரார்தனைகளில் எம்மை எமது பெற்றோரை உடன்பிறப்புக்கள் மனைவி மக்கள், உற்றார் உறவினர், ஆசான்கள் மற்றும் அறப்பணி புரிவோரையும் மறவாதீர்கள்!
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
28.02.2023
0 Comments