Subscribe Us

header ads

முஸ்லிம் சமூகத்தின் புதிய தலைமுறையின் கவனத்திற்கு! பார்வையாளர்களாக அன்றி பயணத்தில் பங்காளர்களாக களம் காணத் தயாராகுங்கள்.

 


கடந்த மூன்று தசாப்தங்களாக சமூக தேசிய பூகோல அரசியல் விவகாரங்களில் நான் கொண்டிருந்த ஈடுபாடு, கற்றல் மற்றும் துறைசார் நிபுணத்துவம், அனுபவங்கள் ஒளியில் தொடர்ந்தேர்ச்சியாக எனது அவதானங்களை நிலைப்பாடுகளை கருத்துக்களை பிரதான மற்றும் சமூக ஊடகங்களூடாக உங்கள் முன் வைத்து வந்துள்ளமையை அறிவீர்கள்.

அந்த வகையில் இளம் தலைமுறையினர் மத்தியில் தேசிய சமூக பூகோல அரசியல் விவகாரங்கள் நகர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் என்னால் முடியுமான பங்களிப்புக்களை செய்துள்ளேன் என்பதனை எனது பயணங்களின் போது என்னை சந்திப்பதில் ஆர்வம் காட்டும் நண்பர்கள் தோழர்கள் தம்பிமார்கள் சகோதரிகள் ஊடாக அறிந்து கொள்கின்றேன்.

பொதுவாக இந்த தேசத்தினதும் குறிப்பாக எமது தேசத்தினதும் வங்குரோத்து அரசியல் கலாசாரம், சர்வதேச பிராந்திய சக்திகளினதும் அவற்றின் கூலிப்படைகளினதும் நிகழ்ச்சி நிரல்கள் குறித்தெல்லாம் தொடர்ந்தேர்ச்சியாக நாம் பேசியுள்ளோம்.

ஆனால், அரசியல் தலைமைகள், அவர்களது கட்சிகள், முகவர்கள், அடியாட்கள் தொண்டர்கள் போல் வாக்காளர்களும் வங்குரோத்து அரசியல் கலாசாரத்தில் பங்காளர்களாகவும் பயனாளர்களாகவும் மூழ்கிப் போனதால் மாற்றம் குறித்த முனைப்புக்கள் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை என்பதே உண்மையாகும்.

என்றாலும், எப்பொழுது மக்களது சமையலறையிலும் வயிற்றிலும் வாயிலும் அரசியல் பொருளாதார நெருக்கடிகள் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தியதோ அப்போதுதான் மக்கள் ஆழ்ந்த துயிலில் இருந்து விழித்துக் கொண்டார்கள்.

விலைவாசி வாழ்க்கைச் செலாவணி உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் பண்டங்களிற்கான தட்டுப்பாடு எரிவாயு, எரிபொருள், மின்சார தட்டுப்பாடுகள் என அன்றாட வாழ்வு முடங்கும் வரை மக்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை.

இன்று தேசிய அளவில் பாரிய மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ள நிலையில் இன மத மொழி வேறுபாடின்றி அனைத்துச் சமூகங்களும் குறிப்பாக இளைஞர் யுவதிகள் தேசிய அரசியலில் மாற்றத்தைக் கோரி அமைதிப் போராட்டங்களில் களமிறங்கியுள்ளனர்.

தற்போதைய நிலையில் அதிகாரத்தில் இருக்கின்ற அதே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் அதே பாராளுமன்ற உறுப்பினர்களும் அதே ஆளும் எதிர்க் கட்சிகளும் தான் அடுத்த பொதுத்தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை குறைந்த பட்ச மாற்றங்களோடு காலத்தை கடத்துகின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தேசிய மக்கள் எழுச்சி எதிர்பார்ககின்ற முழுமையான மாற்றம் மக்கள் மத்தியிலிருந்து தான் வரவேண்டியுள்ளது, எழுச்சிப் போராட்டம் அடிமட்ட மக்கள் வரை சென்று பாரிய அரசியல் விழிப்புணர்வு போராட்டமாக களம் காண வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் அன்றாடம் அரங்கேறும் நிகழ்வுகளின் செய்தி சேகரிப்பாளர்களாக, தகவல் களஞ்சியங்களாக, பார்வையாளர்களாக, விமர்சகர்களாக அவதானிகளாக மாத்திரம் நாம் உள்நாட்டிலும் பிறநாட்டிலும் இருந்து விட்டால் ஒரு தேசத்தவராகவும் சமூகத்தவராகவும் தோற்றுப் போய்விடுவோம், அடுத்து வரும் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும்; உள்ளூராட்சி மாநகராட்சி மாகாண ஆட்சி முதல் பாராளுமன்றம் வரை சிறந்த கல்வித் தகைமையும் ஆற்றலும் அனுபவமும் நிபுணத்துவ அறிவும் உடையவர்களை நாம் எமது பிரதிநிதிகளாக தெரிவு செய்யும் பாரிய கடப்பாடு எம்முன் உள்ளது.

அந்த வகையில் கடந்த மூன்று தசாப்தகாலமாக தனித்துவ அடையாள உரிமைப் போராட்ட அரசியலை பதவிகளுக்கும் சலுகைகளுக்குமான சூதாட்ட சரணாகதி சாக்கடை அரசியலாக மாற்றிய இன்று இந்த சமூகத்தின் அனைத்து சாபக்கேடுகளுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக இருக்கின்ற ஆயுட்கால அரசியல் வியாபாரிகளை அரசியலை நிரந்தரமாக குத்தகைக்கு எடுத்துள்ள குட்டி ஸுல்தான்களை வீடுகளுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த தேசமும் விழித்துக் கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஏனைய சமூகங்களைப் போல் நாமும் எமது அரசியல் கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான திட்டமிடல்களை இப்பொழுதே ஆரம்பிக்க வேண்டும், இல்லாவிட்டால் கைசேதமே நாம் தோல்வியடைந்து விடுவோம்.

தனிப்பட்ட முறையில் நேரடி தீவிர அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, இப்போது ஓய்வுபெறும் வயதில் அறவே இல்லை, புதிய இளம் தலைமுறையினருக்கு வழிவிட்டு அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் அது எமது கடமை என்பதனை உணர்ந்தே அவ்வப்போது இவ்வாறான பதிவுகளை இட்டு வருகின்றேன், உங்கள் பயணத்தில் இயன்றவரை இனியுள்ள காலத்தில் பக்கபலமாக இருக்க தயாராகவே இருக்கின்றேன், காலம் வெகுவாக கடந்து விட்டது இனியும் வேண்டாம் தாமதம், பார்வையாளர்களாக அன்றி பயணத்தில் பங்காளர்களாக களம் காணத் தயாராகுங்கள்.

நாளையல்ல இன்றே நீங்கள் தலைவர்கள்!

உங்கள் அன்பின்
மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
13.05.2023

Post a Comment

0 Comments