Subscribe Us

header ads

"அரகலய" எழுச்சிப் போராட்டம் அடிமட்ட மக்களை சென்றடைய வேண்டும்! புதிய தலைமுறையினர், புத்திஜீவிகள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது

 


முழுமையான அரசியல் கலாசார மாற்றம் வாக்காளர்கள் மத்தியிலிருந்து தான் வர வேண்டும், ஆறு மாதத்திற்குள் பொதுத் தேர்தல் இடம் பெற்றால் அதே வங்குரோத்து அரசியல் கலாசாரமும் கட்சிகளும் என்றால் இந்த மக்கள் எழுச்சி அர்த்தமற்றதாகிவிடும்!

தற்போதைய வங்குரோத்து ஊழல் மோசடி அரசியல் கலாசாரத்தில் தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகள் மாத்திரமல்ல அவர்களது கட்சிகள் அவற்றின் பிரதானிகள், அமைப்பாளர்கள், தொண்டர்கள் வாக்காளர்கள் வரை அனைவரும் வங்குரோத்தின் உச்சத்தில் தான் இருக்கிறார்கள்.

தற்போது பாராளுமன்றத்தில் இருக்கின்ற ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்களில் விரல்விட்டு எண்ண முடியுமான சிலரைத் தவிர அனைவரும் நாட்டை அழிவின் விளிம்பிற்கு கொண்டு வந்த வங்குரோத்து ஊழல் மோசடி அரசியல் கலாசாரத்தின் பிரதிநிதிகள் தான், இவர்களிடமிருந்து தான் தாம் மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

இப்போதைக்கு 20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்த சட்டம் நீக்கப்பட்டாலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டாலும் அரசியல் கட்சிகளின் யாப்புகள் அவற்றின் எதேச்சதிகார தலைமைத்துவ கட்டமைப்புக்கள், வேட்பாளர் தெரிவு முறைகள், தேர்தல் பிரச்சார முறைகள், நிதி சேகரிப்புகள் செலவினங்கள், வெளிப்படைத் தன்மை, பொறுப்புக் கூறல் என பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

குறைந்த பட்சம் தமது எதிர்கால பிரதிநிதிகளை தற்போதிருந்தே இனம் காணல் வேண்டும், அவர்களது கல்வித் தகைமை, துறைசார் நிபுணத்துவ அறிவு, மொழி(கள்) புலமை, எழுத்து பேச்சு ஆற்றல் போன்ற அடிப்படை தகைமைகளை வரையறை செய்து கொள்ள வேண்டும்!

தென்னிலங்கையில் பாரிய அளவில் புதிய தலைமுறையினர், புத்திஜீவிகள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது தமிழ் மக்களது தலைமைகளும் விழிப்புடன் இருக்கிறார்கள், ஆனால் முஸ்லிம் சமூகத்தின் நிலை பழைய குருடி கதவைத் திறடி, அல்லது மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் என்ற நிலையில் தான் இருக்கப் போகிறது.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்
14.05.2022

Post a Comment

0 Comments