Dr.Rauff Zain
![]() |
Photo Credit : Thilina Kaluthotage PG |
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகளின் மானியங்கள் அன்பளிப்புகள் அனுதாப உதவிகளுக்கப்பால் கடன் பெற வேண்டுமானால் ஓர் இஸ்திரமான அரசாங்கம் அதற்கான அடிப்படை நிபந்தனையாகும்.தற்போது ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் தெற்கு தென்கிழக்காசிய புவி அரசியல் ஆடுகளத்தில் அமெரிக்கத் தரகர் என்பதால் அமெரிக்கா உட்பட கொழும்பிலுள்ள மேலைய நாட்டு ராஜதந்திரிகள் அவரது நியமனத்தை அமோகமாக வரவேற்றுள்ளனர்
இன்னொருபுறம் இந்தியா மற்றும் வொஷிங்கடனின் ராஜதந்திர அழுத்தஙகளுக்குப்பணிந்தே கோட்டா ரணிலை நியமித்தார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.இதில் இரண்டு காய்களை வீழ்த்தலாம் என்பது ராஜபக்ஷர்களின் கணிப்பு.முதலாவது குற்றுயிராய்கிடந்து மூர்ச்சையாகிக்கொண்டிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை உயிர்ப்பிக்க ரணில் போன்ற ஒரு மேலைய நாட்டு ஆதரவாளர் அவசியம். தவறும்போது மேலும் சரிந்துபோகும் பொருளாதார வங்குரோத்தினால் திரளும் மக்களின் எதிர்ப்பலைகளுக்கு முன்னால் நின்றுபிடிக்க முடியாது போகும்.
இரண்டாவது, நாடு தழுவிய வகையில் ராஜபக்ஷ எதிர்ப்பு எகிறி எழுந்த வண்ணமுள்ளது.விளைவாகவே மஹிந்த பாதுகாப்புக்காரணத்திற்காக திருமலை கடற்படை முகாமில் தஞ்சம் கோரும் நிலை உருவாகியுள்ளது. ரணிலை பிரதமராக்கியதன் மூலம் ராஜபக்ஷர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் எனவும் எண்ணுகின்றனர்.முன்னணி சட்டத்தரணி சுனந்த பெரேரா இது குறித்து தெளிவான கருத்துக்களை ஊடகங்களிடம் நேற்றைய தினம் வெளிப்படுத்தி இருந்தார்.
ரணிலுக்கு சர்வதேச அளவில் உள்ள செல்வாக்கைப்பயன்படுத்தி நாட்டுக்குத் தேவையான உதவிகளை உள்ளீர்க்கும் பணியை துரிதப்படுத்துவார் என்று மக்களில் ஒரு சாரார் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். வாய்ப்புக்கேடாக ரணிலினால் உடனடியாக எதுவும் செய்ய இயலாத நிலையே தோன்றியுள்ளது. ஆகக்கறைந்தது மூன்றுமாதகால அவகாசம் தேவை எனக்கருதுகிறார் அவர். அவரது நிலைப்பாடு சரியானதே.ஆனால் இது அவருக்கெதிரான இரண்டு சவால்களை உருவாக்கக் கூடும்.
முதலாவது,பொருளாதார நிவாரணம் தாமதிக்க தாமதிக்க அது அவர் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்கள் உள்ளிட்டு பொதுவாக நாட்டு மக்கள் அனைவரினதும் அதிருப்தியையும் ஆவேசத்தையும் உருவாக்கும். இரண்டாவது பாரராளுமன்றத்தில் தனக்குள்ள பெரும்பான்மையை நிரூபிக்கத்தவறும் பட்சத்தில் தனது பதவியை அவர் இழக்க வேண்டிய நிலையும் உருவாகலாம். ஏனெனில் முன்னணி சட்டத்தரணிகள் சிலர் ரணிலின் நியமனத்தை எதிர்த்து உயர்நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்ய ஆலோசித்து வருகின்றனர்.
ரணிலை ஆதரித்து ஒரு ஸ்திரமான பாராளுமன்றம் அமையாவிடின் உலக வங்கி , சர்வதேச நாணய நிதியம் மற்றும் சில மேலேய நாடுகளின் கடன் உட்பட எந்த உதவியையும் பெற முடியாத நிலை நீடிக்கும். மட்டுமல்ல நாடு அரசியல் குழப்பங்களால் மூழ்கடிக்கப்படுமனால் அது உல்லாசப் பயணிகளின் வருகையைப் பாதிப்பதோடு நாட்டுக்கு டொலர்கள் வங்கிகள் ஊடாக வருவதும் தொடர்ந்தும் கிடைக்காமலே போய்விடும். ஆக காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டமும் நாட்டில் ஸ்திரம் இன்னும் உருவாகவில்லை என்பதன் அடையாளமே...
எனவே இவற்றை புதிய அரசாங்கம் எப்படிக் கையாளப்போகிறது என்பதைப் பொறுத்தே பொருளாதார வங்குரோத்தின் மோசமான விளைவுகளிலிருந்த நாட்டைக் காப்பதற்கான வழிவகைகளைக்கண்டடையலாம்.
நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் காலநிலையை உன்னிப்பாக ஆராய்ந்தால் மிக விரைவான சுமூக நிலை ஒன்று உருவாவதற்கான வாய்ப்பு மிக அரிதாகவே தென்படுகிறது
0 Comments