இதன்படி, இன்று முதல் பொதுமக்கள் ஒன்றுகூடுகின்ற எந்தவொரு வைபவங்களையோ அல்லது நிகழ்வுகளையோ நடத்த முடியாது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும், இன்று (17) நள்ளிரவு முதல் திருமண வைபவங்களை நடாத்துவதற்கும் அனுமதி இல்லை. இருப்பினும், திருமணப் பதிவுகளை மேற்கொள்வதற்கு எந்த தடையும் இல்லை. திருமணப் பதிவை வீட்டிலோ அல்லது வேறு இடத்திலோ மேற்கொள்ளலாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்தத் திருமணப் பதிவுக்கு மணமகன், மணமகள், இரு தரப்பினரின் பெற்றோர், பதிவாளர் மற்றும் இரண்டு சாட்சியாளர்கள் மாத்திரமே கலந்து கொள்ள முடியும். அதைத் தவிர, வேறு யாருக்கும் இதில் பங்கேற்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று (16) இரவு 10 மணி முதல் நாளை (17) அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை ஒவ்வொரு நாளும் நடைமுறையில் இருக்கும்.
இக்காலத்தினுள், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்கள் மற்றும் அதற்கான வாகனங்கள் மாத்திரமே வீதிகளில் பயணிக்க முடியும்.அத்துடன், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 253 பேர் நேற்றைய (15) தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக இதுவரையிலும் மொத்தமாக 54,612 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாகாணங்களுக்கு இடையே விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளை மீறி பயணிக்க முயன்ற 479 பேரும் நேற்றையதினம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நெருங்கிய உறவினரின் இறுதிச்சடங்கு அல்லது மருத்துவ சிகிச்சைகளுக்காக மாத்திரமே மாகாண எல்லைகளை கடக்க வாய்ப்பு கிடைக்கும். இதேவேளை, முகக் கவசம் அணியாதவர்களை கைது செய்வதற்காக இன்று முதல் நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
0 Comments