Subscribe Us

header ads

இனவாத தீனிக்கு எதிர்கால சந்ததியினரைப் பலியாக்காதீர்கள். குழந்தைகளைப் படிக்க வையுங்கள்.

 


ஈஸ்டர் தாக்குதலின் பின்னர், "சம்பிரதாய முஸ்லிம்" எனும் பதத்திற்கு உரிமை கொண்டாடி, தாம் அல்லாத அனைவரும் தீவிரவாதிகள் எனும் நச்சுக்கருத்தை சிங்களப் பேரினவாதிகளுடன் இணைந்து பரப்பிய பெருமைக்குரிய கூட்டமொன்று இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியிலும் கை வைத்துள்ளதாக அறிய முடிகிறது.

சில பல பேருக்கு அதில் உரை நிகழ்த்த தடை விதித்திருப்பதாகவும் அறிய முடிகிறது. ரேடியோக்களே காணாமல் போய்விட்ட காலத்தில் யார் உரை நிகழ்த்தினால்தான் என்ன நிகழ்த்தாவிட்டால் என்ன என்ற கருத்திலும் பல பதிவுகள் உலா வருகின்றன. இதில் நான் காணும் பிரச்சினையானது அதிகாரத் தொனியில் நடைபெறும் பன்மை மறுப்பைத்தான். தடை செய்யப்பட்டதாகக் கூறப்படுபவர்கள் அங்கத்துவம் வகிக்கும் 'பிரதான' சபை கூட பன்மை மறுப்புக்குப் பேர்போனது தான். அங்கு பதவிகள் தெரிவுசெய்யப்படும் முறையிலிருந்து, தீர்மானங்கள் எடுக்கப்படும் முறைகள் வரை பன்மை மறுப்புக்கு பக்கா உதாரணங்கள். அச்சபைக்கு ஏட்டிக்குப் போட்டியாக களமிறங்கிய எந்தவொரு "இஸ்லாமிய அமைப்போ" பன்மை மறுப்பிற்கும் ஆணாதிக்கத்திற்கும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.
இதையெல்லாம் ஒரு மூலையில் வைத்துவிட்டு இந்த கயிறிழுத்தலில் 'இழுத்துக் கொண்டிருக்கும்' இரு தரப்பினரும் பேரினவாதத்துடன் கள்ளத்தொடர்பு உடையவர்கள். ஒரு தரப்பினர் ஜினீவா வரை சென்று இனவழிப்பொன்றை நியாயப்படுத்துவதற்காக பொய்க்கூறி தமது கள்ளக்காதலை நிரூபித்து வந்தவர்கள். என்ன, இப்போதைக்கு கழட்டி விடப்பட்டிருப்பதால் வட்டலப்பம் கொடுத்து சமரசம் செய்யப்பார்க்கின்றனர்.
அடுத்த தரப்பினர், அதே பேரினவாதத்திற்கு ஆதரவாக கொளுத்தும் கொழும்பு வெயிலில் தொப்பியணிந்து கொடியேந்தி ஊர்வலம் சென்றவர்கள். ஈஸ்டருக்குப் பின்னரான வஹாபிஸ எதிர்ப்பலையை சாதகமாகப் பயன்படுத்தி "நான் அவனில்லை" என்பதைத்தாண்டி மாற்றுச் சில்லறை கொடுக்காதவனையெல்லாம் தீவிரவாதி என போட்டுக் கொடுத்து பழிதீர்த்துக் கொண்டவர்கள். பிரியாணி கொடுத்து சமரசம் செய்பவர்கள்.
ஆக மொத்தத்தில் பிரியாணியையும் வட்டலப்பத்தையும் தீர்வாக நினைப்பவர்களிடம் தீர்வு இல்லை என்பதை உணருங்கள். இவர்களது கோத்திரத்தனத்திற்கு எதிர்கால சந்ததியினரைப் பலியாக்காதீர்கள். குழந்தைகளைப் படிக்க வையுங்கள்.

-அர்சாத் காதர்-

Post a Comment

0 Comments