புத்தளம் தொகுதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணை அமைப்பாளரும், கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா அவர்களின் செயற்றிட்ட இணைப்பாளரும், வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ. எச். எம் ரியாஸ் அவர்களின் முயற்சியினால் புத்தளத்தில் மற்றுமொரு செயல் வடிவம்.
NAITA அமைப்பின் பயிற்சி நெறிகளை புத்தளத்தில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக புத்தளத்தில் ஆரம்பிக்கப்பட இருந்த நைட்டா அமைப்பின் பயிற்சி நெறிகள் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் புத்தளம் செம்மண்திடல் வீதியில் அமைந்திருக்கின்ற அப்துல் மஜீத் அகடமி நைட்டா அமைப்புடன் இணைந்து பயிற்சி நெறியினை ஆரம்பிப்பதற்கான பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வந்தது.
இருப்பினும் இந்த செயற்திட்டங்களை ஆரம்பிப்பதற்காக காலதாமதம் ஆனது.
இந்த விடயம் தொடர்பாக அப்துல் மஜீத் அகடமியின் பணிப்பாளர் ஏ. எச். எம். ரியாஸ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார். உடனடியாக செயற்பட்ட ரியாஸ் அவர்கள் கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா அவர்களின் கடிதத்துடன் நேற்று 2020.09.16 புதன்கிழமை நைட்டா அமைப்பின் தலைவரை சந்தித்து இது தொடர்பான அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்தார்.
இந்த அறிக்கையை பெற்றுக் கொண்ட நைட்டா அமைப்பின் தலைவர் புத்தளம் மாவட்ட நைட்டா அமைப்பின் முகாமையாளர் ஒருவரை உடனடியாக அழைத்து எதிர்வரும் ஓரிரு வாரங்களில் இதற்கான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு வேண்டிக்கொண்டார்.
இதன் பிரகாரம் எதிர்வரும் காலங்களில் கிராபிக் டிசைனிங் பாடநெறியை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வின் போது ஏ. எச். எம் ரியாஸ் அவர்களின் இணைப்பாளர் சமாதான நீதவான் முயீன் அவர்களும், அப்துல் மஜீத் அகடமியின் மனித வள அபிவிருத்தி முகாமையாளர் எம். எம். நவ்ஃபல் அவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
-Mohamed Nawfal-
0 Comments