அமீரகத்தில் மார்ச் 1 ஆம் தேதிக்கு பிறகு காலாவதியான விசிட்டிங் அல்லது
சுற்றுலா விசா வைத்திருப்பவர்களுக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால
அவகாசத்துடன் கூடுதலாக இன்னும் 30 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை அமீரகத்தின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் கடந்த வியாழனன்று ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
முன்னதாக அமீரகத்திற்குள் விசிட்டிங் மற்றும் சுற்றுலா விசாவில்
வந்தவர்களின் விசா காலம் மார்ச் 1 ஆம் தேதிக்கு பிறகு
காலாவதியாகியிருந்தால், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற ஜூலை 12 – ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை கருணை அடிப்படையில் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த கால கெடுவுக்குள் ஒன்று அவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட
வேண்டும் அல்லது, அமீரக சட்டதிட்டங்களின் படி புதிய விசாவை எடுத்து கொண்டு
தொடர்ந்து இங்கேயே தங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) கடந்த வியாழனன்று வெளியிட்ட திருத்தப்பட்ட அறிக்கையில்,
விசிட்டிங் மற்றும் சுற்றுலா விசாவில் அமீரகத்திற்கு வந்தவர்கள் ஆகஸ்ட் 11
ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்த
நிலையில், அதற்கு பிறகும் இன்னும் 1 மாத கால அவகாசம் அவர்களுக்கு கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த ஒரு மாத சலுகை காலமானது அதிகார சபையால் ஒருமுறை மட்டுமே
அளிக்கப்படும். மீண்டும் கால அவகாச நீட்டிப்பு ஏதும் செய்யப்படாது. அதன்
பிறகும் காலாவதியான விசா வைத்திருப்பவர்கள் அமீரகத்தை விட்டு வெளியேறி விட
வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த கூடுதல் கருணை கால அவகாச
திட்டமானது ICA மூலம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ICA-வின் இந்த புதிய அறிவிப்பால் மார்ச் 1 ஆம் தேதிக்கு பிறகு
காலாவதியான விசிட்டிங் அல்லது சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள், செப்டம்பர்
10 வரை அமீரகத்தில் பிரச்சினையின்றி தங்கி இருக்க முடியும் என்று
தெரிகிறது. எதிர் வரும் நாட்களில் இந்த புதிய கூடுதல் அவகாசம் குறித்த
செயல்முறைகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments