கற்பிட்டி நகரில் உள்ள லங்கா சதோச விற்பனை நிலையம் கடந்த 20ஆம் திகதி (2020.06.20) முதல் மூடப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த பிரதேசத்தில் சதோச விற்பனை நிலையமொன்றின் அவசியம் குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கற்பிட்டி அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.முஸம்மில், அக்கட்சியின் தலைவரும், முன்னாள் கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சருமான ரிஷாத் பதியுதீனிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.
இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கற்பிட்டி நகரில் சதோச விற்பனை நிலையம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியை வழங்கியதுடன், கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி குறித்த சதோச விற்பனை நிலையமும் திறந்துவைக்கப்பட்டது.
குறித்த சதோச விற்பனை நிலையம் மட்டுப்படுத்தப்பட்ட கற்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான கட்டடம் ஒன்றில் இரண்டு வருட ஒப்பந்தஅடிப்படையில் வாடகைக்கு இயங்கி வந்தது.
இந்நிலையில், சதோச விற்பனை நிலையத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு வருட வாடகை ஒப்பந்த காலம் இம்மாதம் 2020.06.30 ஆம் திகதியுடன் நிறைவடைவதால், மட்டுப்படுத்தப்பட்ட கற்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்க நிர்வாகம் ஒப்பந்த காலத்தை புதுப்பிக்காது சதோச விற்பனை நிலையக் கட்டடத்தை மீளவும் கையளிக்குமாறு கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, சதோச விற்பனை நிலையத்தின் பிரதான காரியாலயத்திலிருந்து தமக்கு கிடைத்த ஆலோசனைக்கு அமையவே லங்கா சதோசவின் கற்பிட்டி கிளையை வேறு கட்டடத்திற்கு இடமாற்றாது மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத சதோச நிலைய உத்தியோகத்தர் ஒருவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பில் மட்டுப்படுத்தப்பட்ட கற்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பதில் தலைவர் எம்.ரி.எம்.ஹன்பியாஸிடம் கேட்டதற்கு, எமது சங்கத்திற்குச் சொந்தமான குறித்த கட்டடத்தை லங்கா சதோச விற்பனை நிலையம் ஒன்றை அமைப்பதற்கு மாதாந்த வாடகைக்கு வழங்கப்பட்டது.
எனினும், குறித்த நிலையம் எமக்கு உரிய நேரத்தில் வாடகை பணத்தை வழங்குவதில்லை. இதனாலேயே நாம் சதோச நிலையத்திற்கு வழங்கிய இரண்டு வருட ஒப்பந்த காலம் இம்மாதம் 30ஆம் திகதியுடன் நிறைவடைவதால், அதனை மீண்டும் புதுப்பிக்காமல் கட்டடத்தை ஒப்படைக்குமாறு கேட்டிருக்கிறோம். தவிர, வேறு எந்த உள்நோக்கங்களும் இல்லை.
இந்த கட்டடத்தில் எமது மட்டுப்படுத்தப்பட்ட கற்பிட்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான கோப் சிட்டி நிலையத்தை விரைவில் திறப்பதற்கு நாம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சதோச விற்பனை நிலையம் பொதுமக்களுக்கு வழங்கிய சேவையை விடவும் எமது கோப் சிட்டி மூலம் கூடுதலான சேவையை முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம் என்றார்.
எனினும், இந்த விடயம் கற்பிட்டி பிரதேச மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த சதோச விற்பனை நிலையத்தின் ஒப்பந்த காலம் முடிவடைந்தால் அதனை புதுப்பிக்க வேண்டும். அல்லது வேறு கட்டடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.
எனினும், சதோச விற்பனை நிலையமாக செயற்பட்டுவந்த கட்டத்திக்குரிய ஒப்பந்த காலம் முடிவடைந்துவிட்டது எனக் கூறி அதனை முழுiமாயக மூடுவதற்கு எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக காணப்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் சதோச விற்பனை நிலையத்தில் மிகவும் மலிவான விலையில் பொருட்களை கொள்வனவு செய்துவந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இது தமக்கு பொருளாதார ரீதியில் பெரும் உதவியாக காணப்பட்டதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
எனவே, கற்பிட்டி, கண்டல்குழி , குறிஞ்சிப்பிட்டி மற்றும் பள்ளிவாசல்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தமது தேவைகளுக்காக கடந்த மூன்றரை வருடங்களாக பயன்படுத்தி வந்த குறித்த சதோச விற்பனை நிலையத்தை இடமாற்றும் நடவடிக்கையை உடனடியாக கைவிடுமாறும், இல்லையெனில், இதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
- கற்பிட்டியிலிருந்து ரஸீன் ரஸ்மின் - tamilnews87
0 Comments