Subscribe Us

header ads

ஹஜ் யாத்திரைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சவூதி அரசு விதித்துள்ளது. (விபரங்கள் இணைப்பு)


இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ் யாத்திரைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சவூதி அரசு விதித்துள்ளது.

கொடிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக இவ்வாண்டு வரவிருக்கும் ஹஜ் யாத்திரையில் பல கடுமையான சுகாதார நடவடிக்கைகள் மற்றும் நெறிமுறைகளை சவூதி அரேபியா அமல்படுத்தும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் அல்-ரபியா செவ்வாய்க்கிழமை(இன்று) தெரிவித்தார்.

ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் டாக்டர் முஹம்மது சலேஹ் பென்டென் மற்றும் அல்-ரபியா ஆகியோர் கூட்டு காணொளி காட்சி (virtual press conference) மூலம் பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றினர். அதில் இந்த ஆண்டு யாத்திரை செய்யும் உள்நாட்டு யாத்ரீகர்களின் எண்ணிக்கை 10,000 க்கு மேல் இருக்காது என்று ஹஜ் அமைச்சர் கூறினார்.

அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஹஜ் செய்ய சவூதி குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தவிர வெளிநாடுகளிலிருந்து எந்த யாத்ரீகர்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதையும் பென்டென் அழுத்தமாக உறுதிப்படுத்தினார். மேலும் ஹஜ் யாத்ரீகர்கள் 65 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும், எந்தவொரு நாள்பட்ட நோய்களாலும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடாது என்று அல்-ரபியா வலியுறுத்தினார்.

ஒவ்வொரு ஆண்டும், சுமார் 2.5 மில்லியன் யாத்ரீகர்கள் மக்கா மற்றும் மதீனாவில் உள்ள இஸ்லாத்தின் புனித தலங்களுக்கு வருகை புரிகின்றனர். இந்த நடைமுறை இவ்வாண்டும் தொடர்ந்தால் கொரோனா வைரஸ் அதிகமாக பரவக்கூடும் என்பதால், யாத்ரீகர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, சுகாதார அமைச்சகம், ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்துடன் இணைந்து அனைத்து யாத்ரீகர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கத்திற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நெறிமுறைகள்:

1. ஹஜ் யாத்திரை செய்ய 10,000 க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

2. அனைத்து யாத்ரீகர்களும் புனித இடங்களை அடைவதற்கு முன்பு பரிசோதனை செய்யப்படுவார்கள்.

3. 65 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே இந்த ஆண்டு ஹஜ் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

4. அனைத்து யாத்ரீகர்களும் ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் சுய தனிமைப்படுத்துதல் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

5. ஹஜ் யாத்திரை தொடங்குவதற்கு முன்பு அங்குள்ள அனைத்து தொழிலாளர்கள் மற்றும் தன்னார்வலர்களும் பரிசோதிக்கப்படுவார்கள்.

6. அனைத்து யாத்ரீகர்களின் உடல் நிலை தினமும் கண்காணிக்கப்படும்.

7. யாத்திரையின் போது ஏற்படும் எந்தவொரு அவசர சூழ்நிலைக்கும் ஒரு மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது.

8. சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

இந்த ஆண்டு ஹஜ் பயணம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Source: Saudi Gazette

Post a Comment

0 Comments