அமைச்சர்களான றிஷாட் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீம் போன்றவர்களுக்கு எதிராக பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டாம் மஹிந்த கடும் உத்தரவு!
றிஷாட் பதியுதீன் மற்றும் றவூப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் அமைச்சர்களை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து பிரச்சார பிரிவுகளுக்கும் அதன் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்வரிசை எம்.பிக்கள் மற்றும் விளம்பரத் துறையின் உயர் நிர்வாகத்தினர் ஆகியோருடன் இடம்பெற்ற கூட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன், சமூக ஊடக ஆர்வலர்கள் குறித்து உன்னிப்பாக கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே பெரும்பான்மை இன வாக்குகள் இரு பிரதான பெரும்பான்மை கட்சிகளின் பக்கம் பிரிக்கப்பட்டுள்ளமையினால், தொடார்ந்து இனவாதத்தைத் தூண்டுவதன் மூலம், பொதுஜன பெரமுனவிற்கு கிடைக்கப் போவது எதுவுமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு செய்த தவறை மீண்டும் செய்யக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆகையால், முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கவர்ந்து அவர்களின் மனங்களை வெல்லக்கூடிய திட்டங்களை துரிதமாக அமுல்படுத்த வேண்டுமெனவும் அதற்கு முன்னதாக, முஸ்லிம் அரசியல்வாதிகளை இலக்காக கொண்டு அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments