Subscribe Us

header ads

சுன்னத்துக் கல்யாணம் (ஃப்ளாஷ் பேக்) அந்த ஏழு நாட்கள்..


ஜனனம்,மரணம் மட்டுமல்ல, சுன்னத்துக் கல்யாணம் கூட  வாழ்க்கையில் ஒரே ஒரு தடவைதான் வந்து கடந்து போகும்..

- உமர் கய்யாம்..
இப்போதெல்லாம் அந்தக் கல்யாணங்கள் என்ன ஏது என்று விபரம் தெரியாத பச்சிளங்குழந்தை பிராயத்திலேயே எஸ் பி திஸாநாயக்க வீட்டு இராப்போசனங்கள் போல ,ஒரு ஆயின்மெண்ட் ரெண்டு பம்பஸ் பாக்கெட்டுகளுடன்,சந்தடியே இல்லாமல் நடந்து முடிந்து போய் விடுகின்றன.
இவையெல்லாம் கொண்டாடிக் கும்மாளம் போட்டு நடத்தித் தீர்க்க வேண்டிய சமாச்சாரங்கள் அல்ல எனபதுதான் உண்மையும் கூட.ஏனென்றால் ஒரே ஒரு சுன்னத்துககு உயிர் கொடுக்கிறோம் பேர்வழி என்ற போர்வையில் ஒட்டு மொத்த பித் அத்துக்களையும் கூப்பிட்டு வைத்து கும்மியடித்து விடுவார்கள்..
80/90 களில் "ஒஸ்தா மாமா"க்கள் அத்தர் மணம் கமகமக்க, ராஜ மரியாதையுடன், கைப்பெட்டியும் கையுமாய் வந்து காரியத்தை கச்சிதமாய் முடிப்பார்கள்.இப்பொழுது மிக அரிதாகவே காணக்கிடைக்கும் ஒஸ்தா மாமா என்னும் ஜீவராசியும் கூட டைனோசர்கள்,தியாகத் தலைவர்கள் போன்று எதிர்காலத்தில் வெறும் வரலாற்று ஏடுகளை மட்டுமே அலங்கரிக்குமோ என்னவோ..
இந்த சுன்னத்துக் கல்யாணம் அந்தக் காலத்தில் பெரும் வைபவமாய் உற்சவக் கொண்டாட்டங்களோடு ஆரவாரமாய் நடைபெற்ற ஒரு களியாட்டத் திருவிழா என்று கூட சொல்லலாம்..
பெண்களுக்கு பூப்புனித நீராட்டு விழா கோட்டாவை வழங்கி விட்டு ஆண் சமூகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டு விடக்கூடாது என்ற கடைந்தெடுத்த சமவுடைமைச் சித்தாந்தப் போக்கின் ஒரு நடைமுறை வடிவமாகவே இந்தக் கல்யாணத் திருவிழாவை உருவாக்கிக் கொண்டாடி வந்தார்கள் நம் முன்னோர்..அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்லர் என்பதை மறுபடி மறுபடி ஞாபகப்படுத்தி டேட்டாவை விரயம் செய்யத் தேவையில்லை என்பதே என் சித்தம்..
பிரதேசத்துக்கு பிரதேசம் இவ் வைபவத்தில் சிற்சில வேறுபாடுகள் இருந்தாலும் பொதுவாக எல்லா பிரதேசங்களிலும் குறிப்பிட்ட நடைமுறைகளில் ஒற்றுமை இருந்து வந்ததாகவே இது சம்பந்தமான தீவிர ஆராய்ச்சி முடிவுகள் துல்லியமாய் தெரிவிக்கின்றன...
நம் பிரதேசங்களில் எல்லாம் சம்பவங்கள் பெரும்பாலும் வெள்ளிக் கிழமை ஜும்மாவுக்குப் பிறகான சுப முகூர்த்தத்தில்,சந்தர்ப்பங்களில் மெகா விருந்துகளுடன், அரங்கேறும்.
சில இடங்களில் பக்கீர் பாவாக்களின் இன்னிசைக் கச்சேரிகள் கூட உண்டாம்..கடனை உடனை வாங்கி கோழியறுத்து விருந்து போட்டவன்லாம் இருந்தானாம்..எல்லா விருந்துகளிலும் செய்வது போல ஒரு ஃபாத்திஹாவை ஓதிவிட்டு லெப்பை வேறு நாலு காசு பார்த்து விடுவார்..
மாப்பிள்ளை என்று செல்லமாய் அழைக்கப்படும் அந்தப் பலியாட்டுக்கு அன்றைய தினம் விசேட கவனிப்புகளுடன் புத்தாடை அணிவித்து ஜும் ஆ தொழுகைக்கெல்லாம் ஆரவாரமாய் அழைத்துச் செல்வார்கள்..
அதிலும் அங்கே எங்காவது யாராவது அவுலியா,கிவுலியாவின் சியாரம் இருந்தால் ஒரு எட்டு அங்கேயும் போய் அட்டெண்டன்ஸை போட்டு விட்டு எண்ணெய்யை தொட்டு முன் நெற்றியில் தீட்டி விடுவார்கள்..
இதிலும் தரீக்கத்து கொஞ்சம் அபரிமதமாய் ஆட்கொள்ளப்பட்ட அவுலியா நேசர்கள்,ஃபாத்திஹா,யாசீன் பாற்சோறு,பணியாரம் என்று அவுலியா கபுரடியிலேயே அன்னதானமெல்லாம் நடத்தி அமர்க்களப்படுத்தி விடுவார்கள்..
குடும்பத்தில் அந்த பருவத்தைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் இருந்தால் எல்லாரையும் பிடித்து வைத்து ஒரே நாளில்,ஒரே வீட்டில்,ஹோல்சேலாய் வரிசை கட்டி மேட்டரை முடித்து விடுவார்கள்..
சம்பவம் நடை பெறும் கடைசி மைக்ரோ செக்கன் வரை மாப்பிள்ளைக்கு நடக்க இருக்கும் விபரீதம் பற்றிய தகவல்களில் ஒன்று கூட தெரிய வேண்டுமே..ம்ஹும்..மூச்..
சேரில் உட்கார வைத்து ரெண்டு பேர் தோளையும் காலையும் நைஸாய் பிடிக்க,ஒஸ்தா மாமா நமுட்டுச் சிரிப்புடன் ஆயுதத்தை கையில் எடுத்து, குரூரமாகச் சிரிக்கும் அந்த கடைசி தருணத்தில் பையன் திகிலடைந்து,சுதாகரிக்கும் முன் சம்பவம் பாதி நடந்து முடிந்திருக்கும்..வீடு அதிரும் வீல் என்ற சப்தத்துடன் மீதியும் ..
பிறகென்ன வெள்ளைப் புடவையால் தூண்டில் கட்டி மல்லாக்க படுக்க வைத்து விடுவார்கள்..பெருங்குரலெடுத்து ஓலமிட்டுக் கொண்டிருக்கும் மாப்பிள்ளைக்கு சாக்லேட்,டொஃபி,டாய்ஸ் என்று லஞ்சங்களை வாரி இறைத்து அவன் அவலக்குரலை தடுக்க பெரும் பிரயத்தனங்கள் எடுக்கும் இந்த ஊழல் பெருச்சாளிகள் சூழ் சமூகம்...
செப்புச் செய்முறை,மொய்க் கவர் என்று சில்லறை ட்ரான்ஸெக்‌ஷன்கள் ஒரு புறத்தில் அமோகமாய் அரங்கேறும்..
ஷிஃப்ட் முறையில் இரவு பகலாக மாப்பிள்ளைக்கு சிசுரூக்ஷைகள் செய்வதற்கு
குடும்பத்து தாய் மாமாக்கள்,தந்தை சாச்சாக்கள்,இன்னுமுள்ள இளவட்டங்களிடம் மாப்பிள்ளை ஒப்படைக்கப்பட்டு விடுவார்..

சாங்கியப்படி 7 நாட்கள் மாப்பிள்ளையை மல்லாக்கப் போட்டு மாற்றி மாற்றி கவனித்துக் கொள்வார்கள்..
அன்றைக்கு இருந்த ஒரே மாஸ் எண்ட்டர்டெய்ன்மெண்ட்டான வீ.சீ.ஆர் இரவெல்லாம் டூட்டி பார்க்க ஆரம்பிக்கும்..
வன்கொடுமைக்கு ஆளாகி விட்டு "வசந்த மாளிகை" பார்க்கும் வலியெல்லாம் அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும்..
இதற்குள் வீட்டுக்கு வாரவன் போறவன் எல்லாம் ஏதோ சந்திர கிரகணம் பார்ப்பது போல தூண்டிலை தூக்கிப் பார்த்து கமெண்ட் அடித்து விட்டுப் போவான்..சமயங்களில் ஒரம்பரை பெண்களுக்கான ஸ்பெஷல் ஷோ கூட உண்டு..
இந்த காலகட்டத்தில் கேட்பது எல்லாம் கிடைக்கும்.. நாட்டுக் கோழி,ஈரல்,குடல் பாபத்து,முட்டை,பிரியாணி என்று கலோரிகள் எகிறும் சாப்பாடுகள் படைத்து வேளா வேளைக்கு ஊட்டியே விடுவார்கள்..
ஏழு நாட்களின் பின் மாப்பிள்ளையை இடுப்பளவு நீரில் ஊறவைத்து உண்டு இல்லை என்று ஒருகை பார்த்து விடுவார்கள்..நாங்கள் இருந்த மலைநாட்டுப் பிரதேசத்தில் ஊரைச் சுற்றி ஆறுகள் ஓடிக் கொண்டிருப்பதால் ஆற்றுக்கு அழைத்துப் போய் இடுப்பளவு நீரில் உட்கார ஊறுகாய் போட்டுவைத்து கதறக் கதற மேட்டரை முடித்து விடுவார்கள்.பின்,மாப்பிள்ளைக்கு பிஜாமா சாரத்தை தழையத் தழைய கட்டி விடுவார்கள்..இடைக்கிடை சாம்பிராணி சாத்துக்கள் வேறு கமகமக்கும்..

மறுபடியும் வர்ரவன் போறவனுக்கெல்லாம் விசேட காட்சிகள்,தட புடல் விருந்துகள் என்று சம்பவத்தின் நீட்சிகள் இன்னுமொரு ரவுண்டு ஓடும்...
எல்லாம் முடிந்து 10 நாள் கழித்து,ஒரு சுற்றுப் பெருத்து, பாலிஷ் பண்ணின பப்பாளி போல் புதுப் பொலிவுடன் பாட்சாலை போய் Dடாப்பு கூப்பிடும் போது "பிரசண்ட் டீச்ச"ர் என்று சொல்லி விட்டு,லீவுக்கான காரணம் எழுதிய கொப்பியை கையிலேயே தயாராக வைத்துக் கொண்டாலும் ஏறிட்டுப் பார்க்கும் டீச்சர் எதுவுமே சொல்லாமல், நமுட்டுச் சிரிப்புடன், உட்காரச் சொல்லி விட்டு அடுத்த பெயரை கூப்பிட்டுக் கொண்டிருப்பார்..
வாழ்க்கை வழமைக்குத் திரும்பும்..
- கடுப்பேற்றல் தொடரும்..

-பாஹிம் அமானுல்லாஹ்-

Post a Comment

0 Comments