Subscribe Us

header ads

இனவாதத் தீயில் பூத்த மனித மலர் - (உண்மைச் சம்பவம்)



நாள் 2019 ஜூன் 02. ரமழானின் 27 ஆம் நாள். இடம் குளியாபிட்டிய நகரம். இனவாதத் தீயின் காயங்களினால் நகரம் முழுதும் மனித மனங்கள் கலங்கியிருந்த காலம். 

புத்தளத்தில் இருந்து ஐவர். குளியாபிட்டிக்கு செல்கின்றனர். வாகன வர்த்தகத்திற்காக.

அதில் ஒருவர் தான் வியாபாரி. ஏனையவர் பேச்சுத் துணைக்காக... இல்லை பாதுகாப்பு உணர்வுக்காக சென்றவர்கள். அவர்களில் ஒருவர் மௌலவி.

இவர்கள் குளியாபிட்டியவை அடையும்போது, மாலை 5 மணி பிந்திவிட்டது. எனவே, வாகனத்தை கொள்வனவு செய்து ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு 6 மணிக்கு முன்னர் நோன்பு திறப்பதற்காக மாதம்பைக்கு அல்லது சிலாபம் வந்துசேருவது. இதுதான் இவர்களின் திட்டம்.

இவர்களில் ஒருவருக்கு அறிமுகமான தேரர் ஒருவர் குளியாபிட்டி பன்சலை ஒன்றில் இருக்கின்றார். நல்ல நெருக்கமான அறிமுகம். 

குளியாபிட்டிக்கு வந்த பிறகும், ஒரு தொலைபேசி அழைப்பாவது எடுக்காமல் இருப்பதை மனம் இடங்கொடுக்க மறுக்கின்றது. அழைப்பையும் எடுக்கின்றார்.

மறுமுனையில் இருந்து வந்த தேரரின் குரல் -
'மகன்! எங்கு இருக்குறீங்க'

'பன்சலைக்கு பக்கத்தில் உள்ள ............................ வாகன விற்பனை நிலையத்துல'

'பன்சலைக்கு வந்துட்டு போங்க'

'நாங்க 5 பேரு வந்திருக்கோம் சாது'

'பரவாயில்லை. வாங்க'

'அது இல்ல.... மௌலவி ஒருவரும் இருக்குறாரு'

'இருந்தாலென்ன? வரச் சொல்லுங்க'

இவர் பின்வாங்குகின்றார். அன்றைய நிலைமையில் மொளலவி ஒருவரை, துப் ஆடை தொப்பியுடன் பன்சலைக்கு அழைத்து செல்ல அஞ்சுகின்றார். ஏதேதோ சொல்லி சமாளிக்க முயற்சிக்கின்றார். தொலைப்பேசி அழைப்பு துண்டிக்கப்படுகின்றது.

அந்தத் தேரர், இன்னும் 2 தேரர்களுடன் வாகன விற்பனை நிலையத்துக்கு வருகின்றார்.

திடீர் எனத் தோன்றிய தேரர்களைக் கண்டவுடன் இவர்களில் ஏனையவர்களுக்கு அடிவயிறு கலங்கியது.

வந்தவரின் கண்ணில் கனிவு. பார்வையில் சாந்தம். முககத்தில் அமைதி. சிரிப்பில் நட்பு.

தேரரும் நண்பரும் கைலாகு செய்துகொள்கின்றனர். அப்போதுதான் ஏனையவர்களுக்கத் தாம் மூச்செடுப்பது நினைவுக்கு வந்தது.

தேரர் தூவிய முதலாவது வினா மலர்
'நீங்க நோம்பு தானே?'

இவர்கள் ஒருவரை ஒருவர் முகத்தைப் பார்த்துக்கொள்கின்றனர். 'ஆம்' என தலையை அசைக்கின்றனர். 

அடுத்ததாக தேரரிடம் இருந்து வந்த அழைப்பில், திக்குமுக்காடிப் போகின்றனர்.

'பன்சலைக்கு வாங்க. நோம்புத் திறந்துட்டு போகலாம்'

இது கனவா? நிஜமா? நாம் இருப்பது இனவாதத் தீயில் கருகிய சாம்பல் நிலத்திலா, அல்லது சகோதரத்துவ நதியில் பிறந்த தாமரைக் குளத்திலா?

அனைவரும் பன்சலைக்கு செல்கின்றனர்... இல்லை புத்தரின் அறவுரையின் வழி நடக்கும் பௌத்தப் புதல்வரினால் அழைத்து செல்லப்படுகின்றனர்.

அந்தப் பன்சலையில் அன்றைய நோம்பைத் திறக்கின்றனர். குடல்கள் நனைகின்றது. மனங்கள் குளிர்கின்றது.

தேரரின் அடுத்த அழைப்பினால் திகைப்பின் உச்சத்தைத் தொட்டுவிட்டனர்.
'தொழுறதுக்கு இடம் ஒதுக்கியிருக்கிறேன். தொழுதுட்டே போங்க'

மஹ்ரிப் தொழுகையும் பன்சலையில் நிறைவேறுகின்றது.

இனவாதம் கக்கும் கொடியவர் மத்தியில், சகோதரத்துவம் பாராட்டும் நன்மக்கள் இருக்கின்றார்கள் என்ற உண்மையை அனுபவபூர்வமாகக் கண்டு மகிழ்ந்தவர்களாக, தேரரிடம் விடைபெறுகின்றார்கள்.
_________________________________
இன்று, 2019-07-07 காலை இந்த சம்பவத்தை என்னிடம் கூறியவரின் வேண்டுகோளுக்கு இனங்க அவருடைய பெயரை குறிப்பிடவில்லை. எனினும் சம்பவத்தின் உண்மைத்தன்மையை உறுதிசெய்வதற்காக நகரத்தின் பெயரை (அவருடை அனுமதியுடன் குறிப்பிட்டுள்ளேன்).

ஔிப்படம் - Kuliyapitiya Api (FB page)

Hisham Hussain, Puttalam

Post a Comment

0 Comments