Subscribe Us

header ads

மண்டேலாவை வேண்டி நிற்கும் இலங்கை!



21ம் நூற்றாண்டில் உலக நாடுகள் அபிவிருத்திகள், நவீன தொழினுட்பங்களோடு முன்னேறி தன்னிறைவை அடைந்து வருகின்ற வேளையில் நமது நாடு சாக்கடை அரசியலும் அதிகார வேட்கையும் கொண்ட பின்னல்களுக்குள் சிக்கியிருப்பது துரதிஸ்டமே!
முன்னேற்றப்பாதையில் செலுத்த நினைப்பவர்களின் முதுகெலும்பையும் முறித்து சாக்கடைக்குள்ளேயே சங்கமமாக்கிவிடும் காவிக் கோட்பாட்டுக்குள் இருந்து கொஞ்சமேனும் வெளியேறினாலே சுதந்திரக்காற்றை கொஞ்சமேனும் சுவாசிக்கலாம் என்பது திண்ணம்.
நிறவெறியில் மூழ்கியிருந்த தென்னாபிரிக்காவை நெல்சன் மண்டேலா மீட்டெடுத்தது பல நூறுவருடங்களுக்கு முன்னர் அல்ல. வெறும் 1990 களின் பிற்பாடே! இத்தனைக்கும் பொதுவில் மண்டேலா நிறவெறியாட்டத்தின் உச்சத்தில் பாதிக்கப்பட்டு நாலடி சிறையில் நீட்டி நிமிர்ந்து கூட தூங்கமுடியாது வாடியவரே!
இன்றைய ஜனாதிபதி தேடலில் கொழும்பை நகரமயமாக்கலுக்குள் கொண்டுவந்து வெளிநாட்டு தரத்துக்கு உயர்த்த பங்காற்றிய கோத்தாவும், 52 நாள் ஆட்சி மாற்றத்தை இரும்பாக காத்த நீதமான கருஜயசூரியவும், தந்தையின் செல்வாக்கில் ஜனதிபதிக் கனவு காண்பதோடு புதிதாக முஸ்லிங்கள் மீது அனுதாபம் காட்டும் சஜித் பிரேமதாசவும், பல தேர்தல்களின் தோல்வியில் துவண்டு ஜனாதிபதி கனவடங்காத ரணிலும் , சிறுபான்மை வாக்கால் கதிரையேறி கிஞ்சித்தும் அவர்களை கண்டுகொள்ளாத் தீத்திரி மைத்திரியும், தங்களாலும் இயலும் என மணியடிக்கும் அனுரகுமாரவும் போட்டிக்குத் தயாராவது யாவரும் அறிந்ததே!
இவைகளில் ஒன்றோ அல்லது நாட்டமுள்ள வேறொரு சக்திதான் ஜனாதிபதி! கழாகத்ரை யாரறிவார்? இருப்பினும் இவர்கள் அனைவருமே அவரவர் பார்வையில் கடந்த முப்பது வருட இலங்கை வரலாற்றில் இனவெறியாட்டத்திலும், யுத்தத்திலும் , கலவரங்களிலும் , சொத்தழிப்புக்களிலும் புடம்போட்டு சிறைவாசம் நுகராத மண்டேலாக்களே! “அடுத்த ஜனாதிபதியாக வருவதற்கு விரும்புபவர்கள் எல்லாருமே இலங்கையைச் சிக்கல்களிலிருந்து விடுவித்துச் சிறப்படையச் செய்ய இருப்பதாகவே சொல்கிறார்கள். ஆனால் 19வது திருத்தத்துக்குப் பிறகு இலங்கை ஜனாதிபதிக்கு எந்த அதிகாரமும் கிடையாது.” #விக்டர் #ஐவன்”
இதுவெல்லாம் நடக்குமா என்பது கேள்விக்குறியே ? எதுவும் நடக்கலாம் என்பதே சித்தாந்தம். விதியை மாற்றும் சக்தி துஆக்களுக்கு உண்டென்று நம்புவோம். இலங்கையில் ஒரு மண்டேலா வேண்டி பிரார்த்திப்பதனைத் தவிர வேறு வழி தெரியவில்லை..!

ஆகவேதான் 19 திருத்தத்தின் பின்னரான இலங்கையில், ஜனாதிபதியாகவிருக்கும் ஒருவர் மண்டேலாவாகி சாதிப்பதென்பது மலையை மயிரில் கட்டி இழுப்பதற்கு ஒத்த செயல்போலவே தென்படுகின்றது. ஆக, நாட்டை சிக்கலில் தள்ளிய 19 வது திருத்தத்தை நீக்கி, இனிமேல் 18 வது திருத்தம் இருப்பதே சிறுபான்மைக்கு காப்பாகவும் எதிர்காலத்தில் அதிகாரங்களுடன் கூடிய மண்டேலா போன்றதொரு ஜனாதிபதி உருவாக்கத்துக்கும் காரணமாகவும் அமையக்கூடும். ஷிபான் BM
மருதமுனை.

Post a Comment

0 Comments