சர்வதேச ஊடகங்களின் பாராட்டில் கழிவறைக்காக தந்தையை கைது செய்ய சொன்ன 7 வயது ஆம்பூர் சிறுமி
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மலம், ஜலம் கழிக்க (செல்ல) விரும்பினால் தன்னை யாரும் பார்க்காதவாறு (மறைவான) தொலைவிற்கு சென்றிடுவார்கள் என்று ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: அபூ தாவூது)
இம்ரான் பின் ஹூசைன் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது :
'வெட்கப்படுவது அது நல்லதையே கொண்டுவரும் என நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ, முஸ்லிம்)
'நபி (ஸல்) அவர்கள் ஓர் அன்சாரித் தோழர் அருகே நடந்து செல்கையில் அவர் தன் சகோதரருக்கு வெட்கத்தால் வரும் விளைவுகள் பற்றி நினைவு கூறினார் . உடனே நபி (ஸல்) அவர்கள் வெட்கபடுவதின் மீது அவரை விட்டுவிடுவீராக! அவ்வாறு தடுப்பதையும் தவிர்ந்திருப்பீராக! ஏனெனில் வெட்கம் ஈமானின் (இறை நம்பிக்கையில்) ஒரு பகுதியாகும் என கூறினார்கள் . (நூல்: புகாரீ ; முஸ்லிம்)
இப்னு மஸ்ஊது (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:
'உனக்கு வெட்கம் வரவில்லையானால் நீ நினைத்ததை செய்வாய் ' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:புகாரீ)
மேற்காணும் இஸ்லாமிய மரபுகளை மரபணுக்களுடன் பெற்றிருந்த சிறுமி ஹனீஃபா ஜாரா!
வேலூர் மாவட்டம் ஆம்பூர் நடராஜபுரத்தை சேர்ந்த ஏழைக்கூலி தொழிலாளி இஷானுல்லா. இவரது 7 வயது மகள் ஹனீஃபா ஜாரா 2 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். பொதுவாக இங்குள்ளவர்கள் திறந்தவெளிப் பகுதியையே தங்களின் சுகாதாரத் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர் என்றாலும் திறந்தவெளியை பயன்படுத்தும் இச்செயலை சிறுமி ஹனீஃபா ஜாரா விரும்பவில்லை. எனவே தனது தந்தையிடம் கழிப்பறை ஒன்றை கட்டித்தருமாறு தொடர்ந்து நச்சரித்து வந்துள்ளார்.
கழிப்பிடம் அமைத்து தரும் அளவிற்கு வசதியில்லாத தந்தையும் படிப்பில் நல்ல மார்க் எடுத்தால் கட்டித்தருவதாக மகளை சமாதானம் செய்து வைத்திருந்தார். மகளும் தந்தை சொல்லுக்குகேற்ப படித்து நல்ல மதிப்பெண்களை பெற்றதையடுத்து மீண்டும் தந்தையை கழிப்பறை அமைத்துத் தர சொல்லி கேட்டும் தந்தையால் மகளின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனது.
தந்தை தன்னை ஏமாற்றுவதாக கருதிய சிறுமி, கழிப்பறை கட்டித்தராமல் ஏமாற்றும் தந்தையை கைது செய்யுங்கள் என ஆம்பூர் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று முறையிட்டாள் இந்த மழலை. சிறுமியின் புகாரை கேட்டு அதிர்ந்த போலீஸார் தந்தையை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விரைவில் கட்டித் தருவார் எனக்கூறி தந்தையையும், மகளையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
சிறுமியின் இந்த செயற்கரிய செயல் பற்றி கேள்விப்பட்ட மாவட்டக் கலெக்டர் ராமன் அவர்களும், நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி அவர்களும் சிறுமி ஹனீஃபா ஜாராவை பாராட்டியதுடன் அவரை ஆம்பூர் நகராட்சியின் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவராக நியமித்து கண்ணியப்படுத்தியதுடன் உடனடியாக சிறுமி ஹனீஃபா ஜாரா வீட்டிற்கு கழிவறை ஒன்றை அமைத்துத் தர ஆம்பூர் நகராட்சிக்கு உத்தரவிட, கழிவறையும் கட்டிக் கொடுக்கப்பட்டுவிட்டது.
கொசுறு...
அரசின் தூய்மை இந்தியத் திட்டத்தின் சார்பாக கழிவறை கட்டித்தரக் கோரி பலமுறை ஆம்பூர் நகராட்சிக்கு படையெடுத்தும் 'காசு பெயராமல்' ஒன்றும் நடக்கவில்லை என்ற தகவலையும் ஊடகங்கள் முன்பாக போட்டுடைத்தது தனி விஷயம்.
இந்த செய்தி நேற்று தமிழ் ஊடகங்கள் சிலவற்றில் வெளிவந்திருந்தாலும் சிறுமி ஹனீஃபா ஜாராவின் செயல் இன்று பல சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் பாராட்டக்களையும் குவித்து வருகின்றது.
சாம்பிளுக்கு சில...
Source: Khaleej Times / thatstamil etc..
தமிழில்: நம்ம ஊரான்
0 Comments