ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலில் இன்று நடைபெற்ற மீலாது நபி விழா கொண்டாட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர்.
இஸ்லாம் மதத்தை தோற்றுவித்த முஹம்மது நபியின் பிறந்தநாள் ஆண்டுதோறும் மீலாது நபி என்னும் பெயரில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அவ்வகையில், இந்த ஆண்டின் மீலாது நபி கொண்டாட்டங்கள் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலில் விமான நிலையத்துக்கு செல்லும் சாலையில் உள்ள உரனஸ் திருமண மண்டபத்தில் இன்று மீலாது நபி விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
(உள்ளூர் நேரப்படி) மாலை சுமார் 6.15 மணியளவில் இங்கு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர். சுமார் 80 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்கொலைப்படை கைவரிசையாக கருதப்படும் இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத இயக்கமும் இன்னும் பொறுப்பேற்று கொள்ளாத நிலையில் படுகாயம் அடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.
0 Comments