துப்பாக்கி இல்லை என்ற காரணத்தினால் வார்த்தைகளால் சுட்டுக்கொண்டு இருக்கின்றோம்.அந்த நிலை மாற வேண்டும் என தேசிய மொழிகள் மற்றும் நல்லிணக்க அமைச்சா் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அவர் தெல்லிப்பளை பகுதியில் இன்று(26) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தனது கருத்தில்
மீள்குடியேற்றம் என்பது பல பிரிவுகளைகொண்டது. இதில் வீடமைப்பு கல்வி சுகாதாரம் வீதிகள் புனரமைப்பு அமைத்தல் உட்கட்டமைப்பு என்கின்ற போது மின்சாரம் குடிநீர் உள்ளடங்கும்.இந்த விடயங்கள் பூரணப்படுத்தப்பட்டு மனித வளங்கள் பௌதீக வளங்கள் வழங்கப்பட்டால் அதில் மீளக்குடியேறி சுயதொழில் வாய்ப்பு அல்லது அரச வேலைவாய்ப்பு தனியார் வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுத்தால் கிராமங்கள் உருவாகின்றன.இவ்வாறு கிராமங்கள் உருவாகும் போது தான் மீள்குடியேற்றம் முழுமையடையும்.
இதனடிப்படையில் எனது பயணத்தில் இந்த தெல்லிப்பளை பிரதேச பிரிவு குறித்து பிரதேச செயலாளரிடம் உரையாடி பல தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளேன்.இந்த பிரதேச செயலக பிரிவில்45 கிராம சேவக பிரிவுகள் உள்ளன.அதில் 23 பிரிவுகள் முழுமையாக விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.19 பிரிவுகள் முழுமையாக இன்னும் விடுவிக்கப்படவில்லை.அதாவது சில இடங்கள் 80 வீதம் இராணுவத்திடமும் 20 வீதம் மக்களிடம் இருக்கின்றன.3 பிரிவுகள் இன்னும் விடுவிக்கப்படவே இல்லை.இப்பிரதேசத்தில் 45000 மக்கள்தொகையும் 15 ஆயிரம் குடும்பங்கள் ஏறக்குறைய ஒரு குடும்பத்திற்கு மூவர் என்ற அடிப்படையில் இத்தொகை உள்ளது.இன்னும் 40000 மக்கள் வரவேண்டிய நிலையில் இருப்பதாக அறியக்கிடைத்தது.இவர்கள் வெளிநாடுகளில் இருக்கலாம் கொழும்பில் இருக்கலாம் வடகிழக்கிற்கு வெளியே வாழ்ந்த கொண்டிருக்கலாம்.அல்லது மண்ணுக்கு கீழ் புதையுண்டு இருக்கலாம்.
எனினும் இப்பிரதேச செயலக பிரிவில் ஏறக்குறைய 85 முதல் 90 ஆயிரம் மக்கள் இருந்திருக்க வேண்டும் என சொல்லப்பட்டது.1990ஆண்டு யுத்தத்தினால் ஓடி தப்பிய மக்கள் மெதுவாக தற்போது மீளக்குடியேறி கொண்டு இருக்கிறார்கள்.இந்த பகுதியில் தான் உங்கள் அழகிய தையிட்டி கிராமமும் உள்ளது.யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் ஆகின்றன.ஆனால் யுத்தம் நிறைவடைந்துள்ளதை வைத்து கொண்டாடுவதா அல்லது நினைத்து துன்புறுவதாக என தெரியவில்லை..துன்புறுபவர்கள் துன்புறலாம்.யுத்தம் முடிந்து விட்டது என்று கொண்டாடுபவர்கள் கொண்டாடலாம்.
ஆனால் என்னை பொறுத்த மட்டில் கொண்டாட்டம் தேவையில்லை என்றே கூறுவேன்.துன்புறுவதும் தேவையில்லை.எதிர்காலத்தை எப்படி வளப்படுத்துவது என்ற மனோதிடத்தை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்று தான் நாம் சிந்திக்க வேண்டும்.
இந்த யுத்தம் நடத்தப்பட்ட முறைமை நிச்சயம் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதது.ஆனால் யுத்தம் நிறைவடைந்தது சந்தோசமான விடயம் தான்.யுத்தம் இல்லை என்றால் மக்கள் கொல்லப்படுவது அங்கவீனர் ஆக்கப்படுவது கிராமங்கள் எரியூட்டப்படுவது வீடுகள் கோயில்கள் சனசமூக நிலையங்கள் தரைமட்டம் ஆக்கப்படுவது வாழ்வாதாரம் மக்கள் காணாமல் போகச் செய்யப்படுவது எல்லாம் நடைபெற்றிருக்காது.ஆனால் யுத்தத்தின் அடையாளமாக தற்போது உள்ள தையிட்டி கிராமம் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகள் எமக்கு அடையாளம் காட்டுகின்றன.
எனவே இப்பிரதேச தரவுகளை நாம் பல தரப்பிடம் இருந்து பெற்றுள்ளோம்.குறித்த தரவுகள் உரிய முறையில் கையாளப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிப்பேன்.ஆளுநர் தலைமையில் இந்த பிரதேசத்தை கட்டியெழுப்ப கூட்டங்களை நடத்த இனிவரும் காலங்களில் ஆலோசனை வழங்க உள்ளேன்.
எதிர்வரும் டிசம்பர் 31 க்கு முன்பதாக கையகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து தனியார் காணிகளும் முதற்கட்டமாக வடக்கு கிழக்கு மக்களிடம் கையளிக்கப்பட உள்ளது. அதே நேரம் பாடசாலைக்கு சொந்தமான கட்டடமோ அல்லது காணிகளோ பாதுகாப்பு துறையினரால் உடனடியாக கையளிக்கப்பட வேண்டும்.அத்துடன் பாடசாலைக்கு சம்பந்தமில்லாதவர்கள் பாடசாலை வளங்களை வைத்திருந்தால் உடனடியாக கையளிக்க வேண்டும்.அதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளேன்.இது வரை அரசியல் தீர்வை எமக்கு கிடைக்கவில்லை ஆயினும் அதற்காக நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம்.இதனை பெற எமக்குள்ளே சண்டை பிடிக்க முயலக்கூடாது.எதிரிகள் எம்மை பார்த்து சிரிக்கும் அளவிற்கு எமது செயற்பாடுகள் அமைய இடமளிக்க கூடாது.எதிரி ஏன் சிரிக்கின்றார்கள் என்றால் நாம் முரண்படும் போது ஒருவரை ஒருவர் அடித்து கொல்லும் போதும் சுடுபடும் போதும் தான் .
கடந்த காலங்களிலே நாங்கள் பல இயக்கங்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டிருந்தோம்.ஆனால் இன்று துப்பாக்கி வன்முறை ஆயுதம் இல்லை என்ற காரணத்தினால் வார்த்தைகளால் சுட்டுக்கொண்டு இருக்கின்றோம்.அந்த நிலை மாற வேண்டும்.மக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும்.இங்கு தாய்மார்கள் இளைஞர்கள் பெரியோர்களின் முகங்களை பார்க்கின்ற போது எல்லோரது முகத்திலும் கேள்விக்குறி தென்படுவதாகவே பாரக்கின்றேன்.அந்த கேள்விக்குறி மக்களை வதைத்து முள்ளாக தைக்கின்றது.அந்த கேள்விக்கான விடை எம்மைப்போன்றவர்களே விடையளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். என கூறினார்.
பாறுக் ஷிஹான்
0 Comments