ஒரு புறத்தால் 'சீதனத்தை ஒழிப்போம்' என்று கோஷமிட்டுக்கொண்டே மறுபுறத்தால் 'ஏழைக் குமருகள் வாழ்வதற்கு உதவுங்கள்' என்று அறிவித்தல் விடுவது முரண்நகையின் மொத்த உருவகமாகும். ஏனென்றால் திருமண வாழ்க்கை என்னும்போது பெண்ணுக்குரிய இருப்பிடத்தை ஏற்படுத்தவேண்டியது ஆணுடைய பொறுப்பாகும்.
ஆனால் நமது நாட்டில், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இந்நிலை தலைகீழாக மாறி பெண்ணுடைய வீட்டில் ஆண் சென்று குடியிருக்கின்ற அவலநிலை காணப்படுகின்றது. அதன் பிரதிபலிப்புக்களில் ஒன்றாகத்தான் திருமண உதவிகள் என்னும் பெயரால் பெண்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வழங்கப்படுகின்ற உதவிகளையும் நிர்மாணிக்கப்படுகின்ற வீடுகளையும் திருமணம் என்னும் பெயரால் ஒரு ஆண் சீதனமாகப் பெறுகிறான். இது தவறான நடைமுறையாகும்.
இதற்கு மாற்றமாக திருமணம் முடிக்க தயாராக இருக்கின்ற ஒரு வசதியற்ற இளைஞனுக்கு சமூகத்தின், பிரதேசத்தின் பரோபகாரிகள் ஒன்று சேர்ந்து ஒரு தொழில் வாய்ப்பையோ அல்லது குடியிருப்பதற்கான இருப்பிட வசதியையோ ஏற்படுத்திக்கொடுத்தால் அந்த இளைஞன் வசதியற்ற ஒரு ஏழைப்பெண்ணை சீதனமற்ற வகையில் மகர் கொடுத்துத் திருமணம் முடிப்பதற்கு எதுவாக அது அமையும்.
மேலும் இது சீதனத்தை ஒழிப்பதற்கான ஒரு சிறந்த நடைமுறையாகவும் அமையும்.
எனவே சமூகத்தில் இருந்து சீதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பிரயாசைப்படுகின்ற பரோபகாரிகள் திருமண வயதில் இருக்கின்ற ஏழை பெண்களை தவிர்த்து ஏழை இளைஞர்களை தேடிச்சென்று அவர்களுக்கு உங்களுடைய வாழ்வாதார உதவிகளை வழங்குங்கள். அந்த உதவிகளைக்கொண்டு ஒரு வசதியற்ற பெண்ணை மணம் முடிப்பதற்கு ஆர்வமூட்டுங்கள். அதுவே சீதனத்தை ஒழிப்பதற்கான சிறந்த வழியாகவும் முறையாகவும் அமையும்.
அதை விடுத்து ஏழைக்குமர்களுக்கு நீங்கள் கட்டிக்கொடுக்கின்ற வீடுகள் திருமணம் என்ற பெயரால் ஒரு இடுப்பெலும்பற்ற மணமகனுக்கே சீதனமாகச் சென்றடையும் என்பதை சிந்தித்துணருங்கள்.
தாஹிரா நஸீர்
07/07/2018
0 Comments