2014 ஜுன் 15 ம் திகதி அளுத்கம இல் சிங்களப் பயங்கரவாத கும்பலால் இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட மறு நாள் தர்கா டவுனில் மிலிட்டரி வீதியில் இருக்கும் எனது மாமாவின் வீட்டுக்குப் போய் இருந்தேன்..
எரிக்கப்பட்ட வீடுகளும் வாகனங்களும் சிதறி இருக்க எரிந்த வீடு ஒன்றைச் சுற்றி ஒரு பெரும் கூட்டம் இருந்தது.ஒரு வயதான பெண் பேசிக் கொண்டு இருந்தார்..Colombo telegraph இல் எழுதும் ஊடகவியலாளர் பஸ்ல் முஹம்மட் நிஸார் உட்பட சிலர் ரெக்கோர்ட் செய்து கொண்டிருந்தனர்...அந்தப் பெண் ஓய்வு பெற்ற ஒரு ஆங்கில ஆசிரியை..மகளும் மருமகனும் வெளிநாட்டில் என்று சொன்னதாய் ஞாபகம்.நள்ளிரவு நேரம் வீடு வந்த கும்பல் வீட்டை அடித்து நொறுக்கி டி.வியைப் போட்டு உடைத்துவிட்டு அலுமாரியைத் திறந்து பணத்தை எல்லாம் கொள்ளையடிக்கத் தொடங்க வாழ்நாள் சேமிப்பெல்லாம் கண் முன்னே இழக்கப்படுவதைத் தாங்க முடியாமல் ஓலம் எழுப்பி இருக்கிறார்..அப்போது கும்பலில் இருந்த ஒருவன் "நீ எனக்கு ஆங்கிலம் டியூஷன் எடுத்த ஆசிரியை என்பதால் சும்மா விட்டேன்..இல்லை என்றால் கொலை செய்திருப்பேன்" என்றானாம்..எப்படி ஒரு மனநிலை பாருங்கள்...
ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்க வெளியே முழு எஸ்.டீ.எப் உம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறது...மனிதர்கள் வாழும் தகுதியை வீடு இழந்துவிட்டதால் தட்டுத் தடுமாறி வெளியே வருகிறார் ஆசிரியை.ஒரு அதிகாரி நெருங்குகிறார்..குறித்த இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தன் உறவினர் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்கிறார் ..ஒரு ட்ராக் வருகிறது..ஏற்றிச் செல்லப்பட்டு விடப்படுகிறார்.இதில் கவனிக்கத்தக்க அம்சம் அந்த அதிகாரி கம்பளையைச் சேர்ந்த முஸ்லிம்..அழிப்பை நிறுத்துமாறு மேலிடத்தில் இருந்து உத்தரவு எதுவும் இல்லாத நிலையில் சொந்த இனம் வதைக்கப்பட்ட போது அந்த அதிகாரி எந்த மனநிலையில் இருந்தார் என்பதைக் கேட்க வேண்டும்..அந்த வர்ணிப்பை எழுத தமிழில் வார்த்தைப் பஞ்சம் வருமோ தெரியவில்லை..
இந்த சம்பவத்தை ஏன் சொல்கிறேன் என்றால் கண்டி மக்களும் அளுத்கம மக்களும் அனுபவித்த கொடூரங்களில் வித்தியாசம் இல்லை..எல்லோருக்கும் ஒரே அகப்பையால் தான் கிடைத்து இருக்கிறது.கண்டி மக்களிற்கு கவனிப்பு ரொம்பக் கூட...சகவாழ்வு கோஷ்டிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஏதோ சர்வமத மாநாடு நடத்தி பிரச்னைகளைப் பேசப் போகின்றனவாம்..இங்கே எமக்கு ஒரு பிரச்னையும் இருக்கவில்லை.கையாலாகாத கூட்டத்தின் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள நாம் கொடுத்த விலை தான் இது..500 ப்ளஸ் கட்டடங்களையும் வெறும் ஐந்து நிமிசத்தில் தரை மட்டம் ஆக்கமுடியுமா ? குறைந்தது 4 மணித்தியாலங்களாவது செல்லும்..அந்த 4 மணித்தியாலங்களில் சார்ளி சாப்ளின் & மிஸ்டர் பீன் கூட்டம் என்ன செய்தது ?
சகவாழ்வுக் கோஷ்டிகள் சும்மா மீடியா ஷோ காட்ட கோமாளித்தனம் செய்யட்டும்..மற்றவர்கள் இது போன்ற செய்திகளைப் பகிரங்கப்படுத்துங்கள்..ஆங்கிலம் படித்தவன் ஆசிரியை வீட்டில் கொள்ளையடித்தது போல கண்டியில் நிர் மூலமாக்கப்பட்ட இருநூற்றுக்கு மேலான வீடுகளிலும் எத்தனை கோடி நஷ்டம் என்றே தெரியாத கட்டடங்களுக்குள்ளும் பல நூறு கதைகள் இருக்கும்.இவற்றை ஆதாரங்களுடன் எழுதுங்கள்..இந்த நேரத்தில் எழுதாத எழுத்து இனி எதற்கு ?ஆவணப்படங்களாய் எடுக்கலாம்..டாக்குமெண்டரி செய்யலாம்..டைகோட்டுக்குள்ளும் வெள்ளை வெளேர் தேசிய ஆடைக்குள்ளும் புதைந்து இருக்கும் காட்டுமிராண்டித்தனத்தை உலகறியச் செய்வோம்...
-Zafar Ahamed-
0 Comments